கமுதி அருகே கண்மாயில் கிடந்த கல்வெட்டுகளில் 13-ம் நூற்றாண்டு பருவ காலப் பயிர்களை விளக்கும் தகவல்கள் இருப்பது தெரியவந்துள்ளன.
கமுதி அருகே உள்ள பேரையூர் கண்மாயில் கல் தூண்கள், கல்வெட்டுகள் கிடப்பதாக அந்த ஊர் ஆசிரியர்கள் கு.முனியசாமி, சா.செல்வக்குமார் ஆகியோர் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனருமான வே.ராஜகுருவுக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து அவர் அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார்.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு கூறியதாவது:
பேரையூர் கண்மாயில் 1985-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு இக்கண்மாயின் குமிழி மடை, செங்கமடை ஆகியவற்றை உயர்த்திக் கட்டுவதற்காக தோண்டியபோது, அப்பகுதிகளில் பெரிய அளவிலான கற்கள் புதைந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளன. அந்த மடைகளின் அருகிலேயே அக்கற்களை ஓரமாகப் போட்டுவிட்டு மடையை உயர்த்திக் கட்டியுள்ளனர். புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட கற்களில் தான் கல்வெட்டுகள் உள்ளன.
சிவன் கோயில்
குமிழி மடை பகுதியில் அதிகமான கற்கள் சிதறிக் கிடக்கின்றன. இதில் 9 கல்வெட்டுகளும், அதே கண்மாயின் செங்கமடை பகுதியில் இரு கல்வெட்டுகளும் இருப்பது கண்டறியப்பட்டன. இவை துண்டுக் கல்வெட்டுகள் ஆகும். இக்கல்வெட்டுகளில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்கள் உள்ளன. இக்கல்வெட்டுகளை கொண்டு இக்கண்மாய் பகுதியில் சிவன் கோயில் இருந்து அழிந்துள்ளதை அறிய முடிகிறது. கோயில் விமானத்தின் அடிப்பகுதியான ஜகதி, பட்டிகையில் இருந்த கற்களில் தான் கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு செய்தி
கி.பி.1238 முதல் கி.பி.1258 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குவதால் அவருடைய காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது. இதில் ஈழம், கடாரம், கவுடம், தெலிங்கம் ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டில் உள்ள உத்தமபாண்டிய நல்லூர் என்னும் ஊர், மேலக்கொடுமலூர் ஆகும். இவ்வூர் சோழர் ஆட்சிக் காலத்தில் உத்தமசோழநல்லூர் என இருந்ததை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் உத்தமபாண்டிய நல்லூர் என மாற்றியுள்ளார். கல்வெட்டில் உள்ள அண்டை நாட்டுப் பெருமணலூர் மதுரை திருப்புவனம் அருகே உள்ளது.
நீளமான ஒரு தூணில் உள்ள கல்வெட்டில் திருக்காமக் கோட்டம், குடிதாங்கி, நல்லூர் என வருகிறது. திருக்காமக் கோட்டம் என்பது சிவன் கோயிலில் இருக்கும் அம்மனுக்கான கோயில் ஆகும். வெட்டிபாட்டம், பஞ்சுபீலி ஆகிய வரிகளின் பெயர்கள் காணப்படுகின்றன.
இறையிலி
இக்கோயிலுக்கு இறையிலி (வரி நீக்கம்) தேவதானம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நல்லூர் எனும் ஒரு ஊரை விற்று இருப்பதை அறிய முடிகிறது. மேலும் செங்கமடை பகுதியில் உள்ள கல்வெட்டில் ஆவுடைய நாச்சியார் என்பவரால் தேவதானம் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
விவசாயம்
இக்கல்வெட்டில் ஐப்பசிக் குறுவை, கோடைக் குறுவை ஆகிய விவசாய பருவங்கள் கூறப்பட்டுள்ளன. கரிசல் நிலம் கருஞ்செய் எனக் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பத்து மா எனும் ஒரு நில அளவு இதில் உள்ளது. குறுவை பட்டத்தில் நடவு செய்யப்படும் நெற் பயிர் குறுகிய காலத்தில் கதிர்விடக் கூடியதாகும். இவை வறட்சி, மழை, பனி, காற்று ஆகிய இயற்கைச் சீற்றங்கள் தாக்காமல் நல்ல விளைச்சலை அளிக்கக் கூடியது என தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
ஓடிடி களம்
30 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago