நாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டில் காளைக்காக வைக்கப்பட்ட ‘நடுகல்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் பிரபு மற்றும் சிவசந்திரகுமார் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்றாம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர்-ஆத்தூர் குப்பம் கொட்டாற்றங்கரையில் மாட்டுத்தம்பிரான் என்று அழைக்கப்படும் பழமைவாய்ந்த ‘காளை நடுகல்’ ஒன்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழர்கள் காளைகளை தெய்வமாக கருதி வழிபாடு நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு ‘ தி இந்து’ விடம் கூறியதாவது:
தமிழர்கள் வரலாற்றிலும், வாழ்விலும் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண்டைய காலம் முதல் உழவுக்கும், தொழிலுக்கும் தமிழர்களின் வாழ்வில் உறுதுணையாக காளைகள் இருந்து வருகின்றன.
நம் முன்னோர்கள் காலத்தில் மனிதர்களோடு ஒட்டி உறவாடிய காளைகள் உயிரிழந்தால், அதை மனிதர்கள் புதைக்கப்பட்ட மயானத்துக்கு அருகிலேயே, ஒரு நடுகல் நட்டு, அதில் காளையின் ‘கோட்டுருவம்’ வடிவமைத்து நம் முன்னோர்கள் வணங்கி வந்துள்ளனர்.
இதற்கான சான்றுகள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. காளைக்காக வைக்கப்பட்ட நடுகல்லுக்கு கோட்டுருவம் கொடுத்து, அதற்கு ஆண்டுதோறும் பொங்கலிட்டு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி இன்றைய காலக்கட்டத்தில் பார்க்க முடியும்.
6-ம் நூற்றாண்டு நடுகல்
வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்தூர்குப்பம் கொட்டாற்றாங்கரையில் இது போன்ற நடுகல் ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லின் பழமையை வைத்துப் பார்த்தால், இது கி.பி. 6-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.
இக்கல்லில் உள்ள காளை நீர் பருகுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் வரலாற்றில் கோட்டுருவம் வடிக்கும் வழக்கம் பழமையானது என்பது ஆய்வாளர்களின் முடிவாகும். அந்தவகையில் பார்த்தால், இக் கல் தொல்குடிகளின் சான்றாகக் கருதப்படுகிறது.
கி.பி.6-ம் நூாற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்லை இப்பகுதி மக்கள் ‘மாட்டுத் தம்பிரான் கல்’ என அழைக்கின்றனர். தம்பிரான் என்ற சொல்லுக்கு தமிழில் ‘ தலைவன், அரசன், மன்னன், காவலன்’ என்ற பொருள் உண்டு. தான் வளர்க்கும் காளையை அரசன் போல பாவித்து அதை மக்கள் இன்றும் வணங்கி வருவது பெருமைக்குரியதாகும்.
காளைகளை தெய்வத்துக்கு சமமாக வணங்குவது தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் உள்ளதா என தெரியவில்லை. காளைகளை துன்புறுத்துவதாகக் கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளது.
உயிரிழந்த காளைகளுக்கு நடுகல் அமைத்து, அதற்கு கோட்டுருவம் தந்து வணங்கியவர்கள் பாரம்பரியமிக்க தமிழர்கள். இதை உலகுக்கு உணர்த்துவது ஒவ்வொரு தமிழர்களின் கடமையாகும். இந்த நடுகல் மற்றும் அதன் பழமையான வரலாறு தமிழ் கற்கும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
4 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
47 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago