தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில், கடந்த 21-ம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக் கப்பட்டது. இது தொடர்பான மசோதா சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆளுநர் உரையுடன் நேற்று காலையில் தொடங்கியது. இதில், திருத்தச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார்.
தொடர்ந்து, நேற்று மாலையே சிறப்பு நிகழ்வாக சட்டப்பேரவை கூடியது. இதில், 1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த சட்ட முன்வடிவு கொண்டு வரப்படுவதற்கான சூழல் குறித்து அதில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு நடத்துவது மிருக வதை தடுப்புச் சட்டத்தை மீறுவ தாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்தது. தமிழகத்தின் பெரும் பாலான பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வானது பாரம் பரியம், பண்பாட்டை பாதுகாக்கக் கூடியதாகவும், சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப்பதையும் உறுதி செய்கிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் சட்ட வதிமுறைகளில் இருந்து ஜல்லிக்கட்டை விலக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனால், அச்சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவெடுத்தது. அப்போது, சட்டப்பேரவை அமர்வு இல்லாத தால், சட்டத் திருத்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
சட்ட முன்வடிவை முதல்வர் அறிமுகப்படுத்தியதும், அதை வரவேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அவசரச் சட்டம் பிறப்பித்த பி றகு, மாணவர்களைச் சந்தித்து ‘இனியும் ஜல்லிக்கட்டு தடை படாது’ என முதல்வர் எடுத்துரைத் திருக்க வேண்டும். அப்படி செய்யத் தவறியதால், அறவழிப் போராட்டம் அசாதாரண சூழலை நோக்கி நகர்ந்துவிட்டது. ஆட்சியில் இருப்ப வர்கள் பேசி முடிக்கவேண்டியதை காவல் துறையினர் கையில் எடுத்து, எங்கும் தடியடி நடத்தி, மாணவர்கள், பொதுமக்களைக் கலைக்கும் சூழல் உருவாகிவிட்டது.
கடந்த 2009-ம் ஆண்டில் திமுக அரசு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறைப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன் விளைவாக 2014-ம் ஆண்டுவரை ஜல்லிக்கட்டு நடந்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாகவே ஜல்லிக்கட்டு தடைபட்டது. அத்தீர்ப்பில் சில குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. அந்தக் குறைகளால் இந்த சட்டத் துக்கு மீண்டும் ஆபத்து வந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அபுபக்கர் உள்ளிட்ட உறுப்பினர் கள் வரவேற்றுப் பேசினர்.
இறுதியில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
சட்டப்பேரவை கூட்டப்பட்டு சட்டத்துக்கான ஒப்புதல் பெற தாமதம் ஆகும் என்பதாலேயே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம், ஜல்லிக்கட்டு நடத்த ஜனவரி 21-ம் தேதி முதல் எவ்வித தடையும் இல்லை. மேலும், ஜல்லிக் கட்டு நடத்த சரியான நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 2009-ல் தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டம் மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத் துக்கு முரணானது என தீர்ப்பளிக் கப்பட்டது. எனவே, ஜல்லிக்கட்டு நடத்த சரியான சட்ட நடவடிக்கை என்பது மத்திய மிருகவதை தடுப்புச் சட்டத்துக்கு தேவையான சட்டத் திருத்தங்களை கொண்டு வருவதுதான். இது பொதுப் பட்டியலில் இருப்பதால், மத்திய அரசாலும், மாநில அரசாலும் திருத்தம் கொண்டுவர முடியும். மத்திய அரசு திருத்தினால் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும். அந்த சட்டத் திருத்தம் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அல்லது குறிப்பிட்ட மாநிலங்களுக்கான சட்டத் திருத்த மாக இருக்கும். மாநிலங்கள் மத்திய அரசின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்.
தற்போது அவசரச் சட்டம் வாயி லாக மிருகவதை தடுப்புச் சட்டத் துக்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவசரச் சட்டத்துக்கு மாற்றாக சட்டப் பேரவை ஒப்புதலுடன் இந்த தமிழ்நாடு திருத்தங்கள் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்பு சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா குடியரசுத்தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பேராசிரியர் அம்பலத்தரசு, கார்த்திகேயன் சிவசேனாபதி, டி.ராஜேஷ், இயக்குநர் வ.கவுதமன், ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டோர் பார்வை யாளர் மாடத்தில் இருந்து அவை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டனர்.
தவறை ஒப்புக்கொண்ட திமுக
சட்ட மசோதாவை ஆதரித்து சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும் போது, ‘‘புதிய ஆட்சிப் பொறுப் பேற்றதும் நீங்கள் ஏன் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை?’’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘‘காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில், காட்சிப்படுத் தப்படக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையைச் சேர்த்த துதான் இப்பிரச்சினைக்கு முதல் காரணம்’’ என்றார். இது தவறுதான் என்று மு.க.ஸ்டாலினும், கே.ஆர்.ராமசாமியும் பிறகு ஒப்புக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
வணிகம்
18 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
59 mins ago
வாழ்வியல்
50 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago