இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான டிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்: சென்னை, கொச்சிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு

By செய்திப்பிரிவு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அவரை சென்னை, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த 16-ம் தேதி நள்ளிரவு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை அவரிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த 19-ம் தேதி இரவு சென்னை வந்த டெல்லி போலீஸ் அதிகாரிகள், அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு சென்று சம்மன் கொடுத்தனர். அதில், 22-ம் தேதி டெல்லி போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்தது. வேறு வழக்குகள் இருப்பதால் ஆஜராவதற்கு அவகாசம் தர வேண்டும் என்ற தினகரனின் கோரிக்கையை டெல்லி போலீஸார் நிராகரித்தனர்.

இதையடுத்து, கடந்த 22-ம் தேதி டெல்லி சென்ற தினகரன், சாணக்யாபுரி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார், மறுநாளும் ஆஜராக உத்தரவிட்டனர். 25-ம் தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து தினகரன் ஆஜரானார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடமும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், 4-வது நாள் விசாரணை முடிந்ததும் 25-ம் தேதி நள்ளிரவில் தினகரனை போலீஸார் கைது செய்தனர். வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கைது செய்தனர்.

போலீஸுக்கு அனுமதி

கைதான இருவரையும் நேற்று பிற்பகல் டெல்லி தீஸ்ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். மேலும், இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீஸார் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, போலீஸாரின் கோரிக்கையை ஏற்று தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தார். அதைத் தொடர்ந்து இருவரையும் டெல்லி சாணக்யாபுரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே, தினகரனை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ், மல்லிகார்ஜுனா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பேரையும் ஒன்றாக வைத்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

லஞ்சப்பணம் சென்னையில் இருந்து கொச்சிக்கும், பின்னர் கொச்சியில் இருந்து டெல்லிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹவாலா பண மோசடி கும்பலை சேர்ந்த பைசல், கோபி ஆகிய இருவர் இந்த பணப் பரிமாற்றத்துக்கு உதவியுள்ளனர். அவர்களிடமும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் கைமாறிய இடங்களாக கூறப்படும் சென்னை, கொச்சி, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங் களுக்கு தினகரனை நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள் ளனர். அதன்படி, தினகரனை இன்று (27-ம் தேதி) சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது. இந்த விசா ரணையில், ஹவாலா மோசடி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்