தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் இரா.தாமரைச்செல்வம் எம்.பி. ஆகியோர் ஆஜராகினர்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 317-ம் பிரிவின்படி வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதி டி'குன்ஹா ஏற்றுக்கொண்டார்.
அசையும் சொத்துகள் தொடர்பான மனு
கடந்த ஆகஸ்ட் மாதம் அன்பழகனின் வழக்கறிஞரும் தர்மபுரி தொகுதி எம்.பி.யுமான இரா.தாமரைசெல்வன் ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்கள் தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘வழக்கின் முதல்கட்ட விசாரணையின்போது ஜெயலலிதாவிடம் இருந்து தங்கம்,வெள்ளி, வைரம் உள்ளிட்ட 1066 சான்று பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தப் பொருள்கள் அனைத்தும் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியில் இருக்கிறது.
2004-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை சென்னையில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது. அப்போது வழக்கு தொடர்பான அனைத்து அசையும் சொத்துக்களையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலே வைத்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை'' எனக் கூறியி ருந்தார். திமுகவின் இந்த மனுவுக்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். அரசுத் தரப்பு பதில் மனுவையும் கடந்த 6-ம் தேதி அவர் தாக்கல் செய்தார். ஆனால், இதற்கு ஜெயலலிதா வழக்கறிஞர் பி.குமார் ஆட்சேபம் தெரிவித்தார்.
அதிரடி உத்தரவு
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி'குன்ஹா, இம்மனு மீதான முடிவை டிசம்பர் 12-ம் தேதி அறிவிப்பதாக கூறினார். அதன்படி வியாழக்கிழமை 20 பக்க உத்தரவை அவர் வாசித்தார்.
அதில், “இவ்வழக்கை கண்காணிக்கவும், மனுதாக்கல் செய்யவும் அன்பழகன் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அதிகாரம் வழங்கி இருக்கிறது.அதனால் அவர்கள் தொடர்ந்து வழக்கில் பங்கேற்கலாம். அவர்கள் மனுவில் கோரிய வழக்கு தொடர்புடைய தங்கம்,வெள்ளி,வைரம் உள்ளிட்ட நகைகள், பரிசுப் பொருள்கள், கைகடிகாரங்கள், பட்டுப்புடவைகள், செருப்புகள் உள்ளிட்ட 1066 சான்றுப் பொருள்களையும் சென்னை மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டுவர வேண்டும்.
இதற்காக கர்நாடக நீதிமன்றத்துக்கும் தமிழக நீதிமன்றத்துக்கும் இடையேயான சட்டரீதியான நடவடிக்கைகள், காவல்துறையின் பாதுகாப்பு, அலுவலக ரீதியிலான செயற்பாடுகள் அனைத்தையும் வருகிற 21-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு வழக்கு தொடர்பான அசையும் சொத்துக்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கொண்டுவர உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் புதிய நீதிபதியாக பதவியேற்ற பிறகு டி'குன்ஹா வழங்கிய முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago