கோடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் விபத்தில் பலி

By வி.சீனிவாசன்

கோடநாடு காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த கனகராஜ் என்ற ஓட்டுநர் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.

கடந்த 24-ம் தேதி உதகையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். உடனிருந்த காவலாளி கிருஷ்ணபகதூருக்கு காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் சக காவலாளி கிருஷ்ண பகதூரை தொடர்ந்து போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கனகராஜ் பலியானார். இவர் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவராவார்.

யார் இந்த கனகராஜ்?

சேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர். இவருக்கு தனபால், கனகராஜ் என இருமகன்கள் உள்ளனர். தற்போது விபத்தில் பலியான கனகராஜ் 2-வது மகன். இவர் கடந்த 2007-ம் ஆண்டு போயஸ் தோட்டத்தில் கார் ஓட்டுநராக பணிக்குச் சேர்ந்தார்.

தனபால் அதிமுக பிரமுகராவார். இவருக்கும் அப்போதைய சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சரவணனுக்கு இடையே நட்பு இருந்தது. இதன் காரணமாகவே அப்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியுடன் போயஸ் கார்டனில் கனகராஜுக்கு பணி வாங்கப்பட்டிருக்கிறது. கனகராஜைப் போல் மேலும் சிலருக்கும் போயஸ் கார்டனில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சரவணன்.

2010-ல் ஒரு சாலை விபத்தில் சரவணன் பலியாகிவிடுகிறார். அதன்பின்னர் கனகராஜ் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி வேலையைவிட்டு நீக்கினார்.

இந்நிலையில்தான், கனகராஜை போலீஸார் கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக தேடிவந்தனர்.

இதற்கிடையில், கனகராஜ் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது தென்னங்கொடிபாளையத்தில் சாலைவிபத்து நடந்தது. சென்னையிலிருந்து பெங்களூரு சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

போலீஸ் விசாரணை:

கோடநாடு வழக்கில் கனகராஜை போலீஸார் தேடிவந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால் இது விபத்தா இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து போன்ற கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாகனத்தை வேகமாக ஓட்டியது, கவனச்சிதைவால் விபத்தை ஏற்படுத்தியது போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்