அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே ஓ.பி.எஸ்.ஸை ஆதரிப்பர்: அணி மாறிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதி

By செய்திப்பிரிவு

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்றார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். பிறகு, ஓபிஎஸ்ஸுக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அருகே திரண்டிருந்த ஆதரவாளர்கள் இடையே மாஃபா பாண்டியராஜன் பேசுகையில், ''அதிமுக ஆட்சியில் பிளவு ஏற்படக் கூடாது என்பதே அனைவரின் விருப்பம். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பார்கள். ஓபிஎஸ் தலைமையில் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்.

மக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே முதல்வருக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். அதிமுகவில் பிளவு ஏற்பட நினைக்கும் திமுகவின் கனவு பலிக்காது'' என்றார்.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 7-ம் தேதி இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் மவுனமாக தியானத்தில் அமர்ந்ததும், 'கட்டாயப்படுத்தி தான் என்னிடம் ராஜினாமா கடிதம் பெற்றனர்' என்று கூறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கவனம் ஓபிஎஸ் பக்கம் திரும்பியது.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக அவர் பக்கம் வரத் தொடங்கினர். 5 எம்எல்ஏக்களும் அவரது அணிக்கு வந்தனர்.

இதற்கிடையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் உள்ளிட்ட 2 இடங்களில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அந்த எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். இவருடைய ட்வீட்டுக்கு, நடிகர் அரவிந்த்சாமி அளித்த பதில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது வாக்காளர்களின் கருத்தை கண்டிப்பாக கேட்டு அம்மாவின் மதிப்பையும், அதிமுகவின் ஒற்றுமையையும் நிலைநிறுத்தும் வண்ணம் முடிவெடுப்பேன்" என்று தெரிவித்தார் மாஃபா பாண்டியராஜன்.

இதைத் தொடர்ந்து சசிகலா அணியிலிருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அங்கிருந்து விலகி, பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

31 mins ago

விளையாட்டு

52 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்