காவிரிப் படுகையில் மேலும் 104 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் செயல்படுத்த உள்ள நாசகார ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி பொதுமக்களும், விவசாயிகளும் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேளாண்மைத் தொழில் செழித்து, தமிழகத்தின் நெற்களஞ்சியமாக, நாட்டுக்கே உணவளித்து வரும் காவிரி டெல்டா, ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களால் முழுமையாகச் சூறையாடப்பட்டுவிடும்.
காவிரி பாசனப் பகுதிகளில் மத்திய அரசு மூர்க்கத்தனமாகச் செயல்படுத்த துடிக்கின்ற மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் வருங்கால தலைமுறையின் வாழ்வு கேள்விக்குறி ஆகிவிடும் பேராபத்து சூழ்ந்து வருவதால், தமிழகம் கொந்தளித்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
கடந்த 2018 அக்டோபர் மாதம் காவிரிப் படுகையில் சுமார் 6000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்ற வேதாந்தா குழுமம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் இந்திய அரசின் பெட்ரோலியத்துறை ஒப்பந்தம் போட்டது.
இத்திட்டங்களுக்காக வேதாந்தா நிறுவனம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், ஓஎன்ஜிசி நிறுவனம் 5 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருக்கின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மேற்கண்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதற்கட்டமாக 274 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி அளித்திருக்கிறது. வேதாந்தா நிறுவனம் இதற்கான அடிப்படைப் பணிகளை முடித்துவிட்டது.
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 27 ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட ஆய்வு செய்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 கிணறுகள், திருவாரூரில் 59 கிணறுகள், தஞ்சையில் 17 கிணறுகள், அரியலூரில் 3 கிணறுகள், கடலூரில் 7 கிணறுகள், ராமநாதபுரத்தில் 3 கிணறுகள் என்று மேலும் 104 கிணறுகள் அமைக்கவும், இதற்காக ஒரு கிணற்றுக்கு ரூ.15 கோடி வீதம் மொத்தம் ரூ.1560 கோடி திட்டச் செலவு ஆகும் என்றும், ஓஎன்ஜிசி சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோகார்பன் திட்டங்களை முற்றாக கைவிடக் கோரியும் ஜூன் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் - இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு லட்சக்கணக்கான மக்கள் மனிதச் சங்கிலியாக கரம் கோர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, காவிரி தீரத்தைப் பாலைவனமாக ஆக்கியே தீருவோம் என்று மோடி அரசு வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணைபோவதும் கடும் கண்டனத்திற்கு உரியது.
பாஜக அரசு செயல்படுத்த திட்டமிடும் ஹைட்ரோகார்பன் திட்டம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே சூறையாடி விடும்.
எனவே, மத்திய - மாநில அரசுகள் விபரீதத்தை விதைக்காமல், ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்", என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago