மகாதேவன், சந்தானலட்சுமி, நடராஜன்... சசிகலா குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்கள்

By வி. ராம்ஜி

ஜெயலலிதா இறந்து 15 மாதங்களில், சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமி ஆகியோர் இறந்தனர். இதையடுத்து அவரின் கணவர் நடராஜன் இன்று காலமானார்.

கடந்த 2016ம் வருடம் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். கிட்டத்தட்ட 75 நாட்கள் வரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் தொடங்கப்பட்டு, தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வாரானார். அதையடுத்து அவர் ராஜினாமா செய்யப்பட்டார். சசிகலா, கட்சியின் பொதுச்செயலாளர் என அறிவிக்கப்பட்டார். மேலும் சட்டசபையின் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கூவத்தூர், எம் எல் ஏக்கள் தங்கவைக்கப்பட்டது என அடுத்தடுத்து காட்சிகள், சினிமா பட ரேஞ்சுக்கு மாறிக்கொண்டே இருந்தன. பதவியேற்க சசிகலாவை அழைக்காதது ஏன் என்று கவர்னர் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

அதேவேளையில், சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பை, டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து பிப்ரவரி மாதத்தில் தீர்ப்பளித்தது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சசிகலா, சசிகலா அண்ணன் மகன் சுதாகரன், சசிகலா அண்ணி இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

சசிகலாவின் அண்ணன் வினோதகன். இவரின் மகன் மகாதேவன். தஞ்சாவூரில் இருந்தபடி, அரசியல் செய்து வந்தார். ஜெ.பேரவை முதலான பொறுப்புகளும் வகித்துவந்தார். சசிகலாவின் அண்ணன் மகன் என்பதாலேயே அரசியலிலும் ஆட்சியிலும் இவரின் செல்வாக்கு கூடியிருந்தது. இந்தநிலையில், கடந்த 2017ம் வருடம் ஏப்ரல் மாதம் 15ம் தேதி அன்று திருவிடைமருதூர் கோயிலுக்கு பூஜைக்காகச் செல்லும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிகிச்சைக்கு மருத்துவமனை கொண்டுசெல்லும் போதே அவர் உயிர் பிரிந்தது. அப்போது மகாதேவனுக்கு வயது 47.

இதன் பிறகு, சசிகலாவின் மற்றொரு அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவி சந்தானலட்சுமி, கடந்த பல வருடங்களாகவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு வந்த சந்தானலட்சுமி, ஜூலை 27ம்தேதி மாரடைப்பால் இறந்தார். அண்ணி சந்தானலட்சுமி மீது மிகுந்த பிரியமும் மரியாதையும் கொண்டிருந்தவர் சசிகலா. ஆனாலும் அவர் பரோலில் வரவில்லை.

இதையடுத்த சில மாதங்களில், நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன. இதற்காக உடல் உறுப்புகள், தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு எடுத்துவரப்பட்டு, திருச்சியில் இருந்து விமானத்தில் கொண்டுவரப்பட்டது.

அந்த நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து சிகிச்சை பெற்றுவரும் கணவர் நடராஜனைப் பார்ப்பதற்கு பரோல் கேட்டு விண்ணப்பித்தார் சசிகலா. அவருக்கு ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டன. மருத்துவமனை விட்டால் வீடு, வீடு விட்டால் மருத்துவமனை, வெளிநபர்களைப் பார்க்கக் கூடாது, அரசியலில் கலந்துகொள்ளக் கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் தி.நகர் இல்லத்தில் தங்கி, சென்னை குளோபல் மருத்துவமனையில் உள்ள நடராஜனை பார்த்து வந்தார் சசிகலா.

சிகிச்சை பெற்று வந்தாலும் நடராஜன், பழைய நிலைக்கு வரவில்லை. அவரால் பழையபடி மறைமுக அரசியல் முதலான விஷயங்களில் பங்கேற்க அவர் உடல் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் நடராஜன். ஆனால் சிகிச்சை பலனின்றி, இன்று 20.3.18 செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.

2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்தார். கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குள் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமி, இப்போது கணவர் நடராஜன் ஆகியோரின் மரணங்கள் என அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

வணிகம்

20 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்