கடத்தப்பட்ட சாமி சிலைகள் இந்தியா வந்தது எப்படி?: சர்வதேச போலீஸுக்கு உதவிய புதுச்சேரி ஆய்வு நிறுவனம்

By குள.சண்முகசுந்தரம்

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் வைக் கப்பட்டிருந்த இரண்டு சாமி சிலைகளை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்த சிலைகள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியதில் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.

1956-ல் இந்தியா - பிரான்ஸ் இடையில் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் படி, உருவானதுதான் பிரெஞ்சு ஆய்வு நிறுவனம். இந்தியாவின் பண்பாடு சார்ந்த விஷயங்களை இந்த நிறுவனம் ஆய்வுகள் செய்து அவற்றை ஆவணப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், ஒடிசா மாநிலங்களில் உள்ள தொன்மையான கோயில்கள், அங்குள்ள சாமி சிலைகள் பற்றிய விவரங்களை துல்லியமாக சேகரித்து வைத்திருக்கிறது.

தொன்மையான மூவாயிரம் கோயில்கள் அவைகளில் உள்ள கல் மற்றும் ஐம்பொன் சிலைகள் பற்றிய ஒரு லட்சத்து 61 ஆயிரம் புகைப்படங்களை இங்கு ஆவணப்படுத்தியுள்ளனர். தமிழக கோயில்கள் சார்ந்த 80 ஆயிரம் படங்கள் உள்ளது.

1970-ம் ஆண்டு யுனெஸ்கோ ஒப்பந்தப்படி, கலைப் பொருட்கள் கடத்தப்பட்டால் அதை சம்பந்தப் பட்ட நாட்டுக்கு திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இப்படி இதுவரை ஏகப்பட்ட சிலைகள் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கின்றன.

இதுபோன்ற சமயங்களில் சம்பந்தப்பட்ட சிலைகள் இந்தியாவுக்கு சொந்தமானது தானா என்பதை புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் கொடுக்கும் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்தே உறுதி செய்கிறது சர்வதேசப் போலீஸ்.

இதுகுறித்து நம்மிடம் பேசினார் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் கோயில்களுக்கான ஆராய்ச்சியாளர் டாக்டர் முருகேசன்.

‘‘பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அரியலூர் மாவட்டம் புரந்தான் சிவன் கோயிலில் இருந்த ஐம்பொன் நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரி அம்மன் சிலைகள் ஒரு விநாயகர் சிலை, அதே மாவட்டத்தில் சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் கோயிலைச் சேர்ந்த நடராஜர் சிலைகள் திருடு போய்விட்டன. இதேபோல் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இருந்த அர்த்த நாரீஸ்வரர் கற்சிலையும் காணாமல் போய்விட்டது. இதில் புரந் தான் நடராஜர் சிலையும் அர்த்த நாரீஸ்வரர் சிலையும் பேங்காக் வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.

இப்போது புழல் சிறையில் உள்ள, சிலை கடத்தல் மன்னன் பஞ்சாபைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர் 40 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டவர். அர்த்தநாரீஸ்வரர் சிலை 1974-ல் அந்தக் கோயி லில் இருந்ததை நாங்கள் ஆவணப்படுத்தி இருக்கிறோம்.

ஆனால், அந்த சிலையை 1970-ல் ஒருவரிடம் விலை கொடுத்து வாங்கியதாக போலியான ரசீது ஒன்றைக் கொடுத்திருக்கிறார் சுபாஷ் சந்திர கபூர். இந்த சிலை கைமாறி ஆஸ்திரேலியாவின் நியூசௌத்வேல்ஸ் அரசு அருங்காட்சியகத்துக்குப் போய் விட்டது. இதேபோல் புரந்தான் நடராஜர் சிலையும் (இதன் மதிப்பு சுமார் ரூ.30 கோடி) சிட்னியில் உள்ள ’நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது. இந்தச் சிலைகள் உள்பட 23 ஐம்பொன் சிலைகள் தமிழகத் திலிருந்து கடத்தப்பட் டிருப்பதாக புகார்கள் பதிவாகி உள்ளன. இவ்வழக்குகள் தொடர் பாக எங்களிடம் உள்ள ஆவணப் பதிவுகளை தமிழக போலீஸுக்கும் சர்வதேச போலீ ஸுக்கும் கொடுத்திருக்கிறோம். இப்போது மீடக்கப்பட்டுள்ள இந்த இரண்டு சிலைகள் தொடர்பாக சர்வதேச போலீஸார் கேட்டபடி நாங்கள் அளித்த ஆவணங்கள்தான் அந்த சிலைகள் இந்தியாவுக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்தின.

இதையடுத்து புதுச்சேரியில் உள்ள எங்களது அலுவலகத்துக்கு வந்த ஆஸ்திரேலிய தூதர், ஆவணங்களை சரிபார்த்து ஆஸ்திரேலியாவுக்கு மின் அஞ்சல் அனுப்பினார். உடனே இந்த விஷயத்தில் தலையிட்ட ஆஸ்திரேலிய கலைத் துறை அமைச்சர் உத்தரவுப்படி, சிலைகள் தொடர்பான உரிய ஆவணங் களை 30 நாட்களுக்குள் அருங்காட்சியகங்களால் கொடுக்க முடியாததால், நல்லெண்ண அடிப்படையில் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்தது ஆஸ்திரேலிய அரசு. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு பயணம் செய்த விமானத்திலேயே சாமி சிலைகளை கொண்டு வரும்படி பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், எடை அதிகம் என்பதால் அவைகள் கார்கோ மூலம் கொண்டு வரப்பட்டன’’ என்று சொன்னார் முருகேசன்.

கோயில்கள் மற்றும் கோயில் சிலைகளை ஆவணப் படுத்தும் பணியில் இருக்கும் பிரெஞ்சு ஆராய்ச்சி நிறு வனத்தின் புகைப்படக் கலைஞர் ரமேஷ்குமார் மேலும் பேசுகையில், ’’மீட்கப்பட்ட நடராஜர் சிலையுடன் சேர்ந்து இருந்த சிவகாமி அம்மன் சிலை இப்போது சிங்கப்பூரிலும், விநாயகர் சிலை அமெரிக்காவில் உள்ள டொலைடோ அருங்காட்சியகத்திலும் இருப்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

எங்களிடம் உள்ள கோயில்கள் மற்றும் சாமி சிலைகள் சம்பந்தப் பட்ட அனைத்து நெகட்டிவ்களையும் இப்போது டிஜிட்டல் படுத்திவிட்ட தால் தென் இந்தியா வின் தொன் மையான கோயில்கள் பற்றிய விவரங்கள் எங்களது ஆய்வு நிறுவ னத்தில் அழியாத ஆவணங்களாக இருக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

27 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்