கோடநாடு விவகாரம்: ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கோடநாடு விவகாரம் தொடர்பான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலின் தொடர்ந்து அதுபற்றிப் பேசினால் அவதூறு வழக்கு தொடர்பான தடை நீக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோடநாடு கொலை, கொள்ளை குறித்தும் முதல்வர் எட்ப்பாடி பழனிசாமி குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். இதையடுத்து அவர் மீது  தமிழக அரசு  சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடைகோரிய மனு மீது விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோடநாடு கொலை, கொள்ளை குறித்துப் பேசவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் ஸ்டாலின் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவதால் அவர் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, ''கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை தொடர்புபடுத்திப் பேசுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டங்களிலும் அதுகுறித்துப் பேசுகிறார். இது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது போல் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கபட்ட தடையை நீக்க வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், ''அவதூறு வழக்குப் பதிவு செய்வதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையிலேயே தாங்கள் வழக்கு தொடர்ந்து அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை பெற்றுள்ளோம், அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்குரிய நிவாரணம் கிடைக்காததால் இந்த வழக்கின் மூலம் நிவாரணம் தேட அரசு முயற்சிக்கிறது'' எனக் குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், ''அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை பெற்றுள்ள நீங்கள், அதே கருத்தை தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுவது ஏன்? இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உரிய அறிவுரை வழங்குங்கள்'' என தெரிவித்தார்.

ஒருவேளை அந்தக் கருத்துகளைத்தான் தொடர்ந்து பேசுவீர்கள் என்றால் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும், தெரிவித்த நீதிபதி, சென்னை அமர்வு நீதிமன்றத்தின் விசாரணையை எதிர்கொள்ளுங்கள் என்றும் எச்சரித்தார்.

விசாரணையை எதிர்கொள்ள  உங்கள் தரப்புக்கு என்ன தயக்கம் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தொடர்ந்த வழக்கு தொடர்பான உத்தரவையும், அவதூறு வழக்கு தொடர்வதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளதா? என்பது தொடர்பான விதிமுறைகளையும் ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் திமுக நடத்தும் பொதுக் கூட்டம் மற்றும் இதுவரை ஸ்டாலின் பேசிய பேச்சுகள் அடங்கிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்