உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் மோதலில் ஈடுபட்ட நபரை போலீஸார் காப்பாற்றச் சென்றபோது நான் யார் தெரியுமா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி, சிபிஐ அதிகாரி, இண்டர்போல் அதிகாரி என அடுக்கடுக்காக அடுக்கி போலீஸாரை அசரவைத்த போலி நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் குடும்பநல நீதிமன்றம் அமைந்துள்ள தெற்கு பகுதி வாயில் வழியாக கருப்பு நிற ஆடி சொகுசுக் கார் ஒன்று வேகமாக நுழைந்துள்ளது. அப்போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த முரளிதரராவ் என்கிற வழக்கறிஞர்மீது ஆடி கார் மோதியது.
இதில் அவர் காயமடைந்தார். உடனடியாக அவர் அரசு ராஜிவ்காந்தி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் மோதிய கார் ஓட்டுநருக்கும், காரில் இருந்தவருக்கும் அங்குள்ள வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
நான் யார் தெரியுமா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என்னிடமே மோதுகிறீர்களா? என்று அவர் சண்டையிட உடனடியாக பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி கோர்ட்டுக்கு வந்துள்ளார் வழக்கறிஞர்களுடன் மோதல் எனக்கேள்விப்பட்ட எஸ்பிளனேடு போலீஸார் அலறி அடித்து அங்குச் சென்றனர்.
அங்கு கட்டம் போட்டச்சட்டையில் ஒரு நபர் வழக்கறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர் வந்த காரில் சிபிஐ, இண்டர்போல், ஏர்போர்ட் அத்தாரிட்டி, விஐபி பாஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.
ஆடி சொகுசுக்காரையும், காரில் வந்தவர்களையும் வழக்கறிஞர்களிடம் பேசி போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அவரை மரியாதையாக அமரவைத்து சார் பிரதமர் அலுவலகத்தில் என்னவாக இருக்கிறீர்கள் என பவ்யமாக கேட்டுள்ளனர்.
பிரதமர் பயணம் எல்லாம் நான் தான் முடிவு செய்வேன், அவரது ப்ரோட்டோக்கால் உதவி கமிஷனர் நான் என்று கூறியுள்ளார். அப்போது போலீஸார் தயங்கியப்படி காரில் சிபிஐ என்று எழுதியுள்ளதே என்று கேட்டுள்ளனர். ஆமாம் நான் சிபிஐயிலும் இருக்கிறேன், உலக அளவில் இன்டர்போல் ஆஃபிசராகவும் இருக்கிறேன், வருமான வரித்துறை அதிகாரி என்று ஆங்கிலத்தில் சரமாரியாக கூற போலீஸார் தயங்கியுள்ளனர்.
என்னடா இது நமக்கு வந்த சோதனை தெலுங்குப்படத்தின் ஹீரோக்கூட இத்தனை பதவியில் இருந்ததாக படம் வந்ததில்லையே, மனநலம் பாதிக்கப்பட்ட ஆளாக இருப்பாரோ என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது, ஆளைப்பார்த்தாலும் போலீஸ் ட்ரெய்னிங் எடுத்தவர் மாதிரி தெரியவில்லை என யோசித்த போலீஸார், “சார் எந்த ஊரில் ஒரே நேரத்தில் நான்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கிறார்கள்?” என்று கேட்டுள்ளனர்.
அனைத்துக்கும் ஐடி கார்டு இருக்குதா? என்று கேட்டுள்ளனர். அவர் ஐடித்தானே இருக்கு என நான்கு ஐடிக்களையும் எடுத்து டேபிளில் போட்டுள்ளார். அதை சோதித்த போலீஸார் , பின்னர் உயர் அதிகாரிகளுக்கும் பிரதமர் அலுவலக அதிகாரி குறித்து தகவல் கூறியுள்ளனர்.
அவரது ஐடிக்களை சோதித்து, அவரது பேச்சைக்கேட்ட போலீஸார் அவர் ஒரு போலி நபர் என புரிந்துக்கொண்டனர். பின்னர் கவனிக்கிற விதத்தில் கவனித்ததும் சார் நான் ஒரு டிராவல்ஸ் அதிபர் எனக்கூறியுள்ளார்.
என்னய்யா அதிபர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்துகிறாய் அப்படித்தானே? அதில் என்ன பில்டப் போய் அப்படி உட்கார் என போலீஸார் அந்த நபரை ஓரமாக உட்கார வைத்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தி.நகர் இந்தி பிரச்சார சபா தெருவில் வசிக்கும் பிரசாத் (38) என்பது தெரியவந்தது.
காரை ஓட்டிய ஓட்டுநர் மோஹனவேலு (38) மீது விபத்து வழக்கு தனியாக பதிவு செய்யப்பட்டது. போலியாக அடையாள அட்டைகள் தயாரித்து அதை வைத்து மோசடியாக நடித்த பிரசாத்தை மோசடி, போர்ஜரி குற்றத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடம் ஆங்கிலத்தில் பேசி கெத்துக்காட்டிய அவர் சிறிது நேரத்திற்கு பின் உண்மை வெளியானதை அடுத்து அவர்களிடமே பணிவாக சார் சார் என கெஞ்சியது காவல் நிலையத்தில் போலீஸார் சிரிக்க வைத்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
2 hours ago