இணையதள ஆபத்துகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் வலியுறுத்தல்

By சி.பிரதாப்

இன்றைய மாணவர்களுக்கு சமூக நலன் சார்ந்த கல்வியையும், தொழில்நுட்பங்களின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று கல்வியாளர்களும், உளவியல் நிபுணர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

திருவள்ளூர் அருகே முகநூல் மூலம் வளர்ந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, மகளே தன் நண்பர்கள் உதவியுடன் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய கால முகநூல் காதலும், நட்பும் கொலைக் குற்றத்தில் ஈடுபடும் அளவுக்கு கொண்டு செல்லுமா என்ற பெரிய ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இளம் தலைமுறையினருக்கு நாம் எத்தகைய வாழ்க்கை முறையை சமூகத்தில் கட்டமைத்து தருகிறோம் என சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உளவியல் நிபுணர் அபிலாஷா கூறியதாவது:

இன்று இளைஞர்கள் செல்போன் உட்பட நவீன தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகி தவிக்கின்றனர். அதன் பாதிப்பை அவர்கள் அறிவதில்லை. முகநூல் உட்பட வலைதளங்கள் போதைப் பொருட்களுக்கு சமமானது. அதில் குறைந்த காலம் இயங்கினாலும், அதன் அடர்த்தி அதிகமாக இருப்ப தால், மனரீதியாக அதற்கு முழுவதும் கட்டுப்பட்டுவிடுகின்றனர். போதைப் பழக்கத்துக்கு அடிமையான மனநிலை யில்தான் இளைஞர்கள் உள்ளனர்.

20-ம் நுாற்றாண்டு தலைமுறையினர் பலரும் ஹீரோயிசம் மீது அதீத விருப்பம் கொண்டுள்ளனர். யதார்த்த வாழ்க்கையை பற்றிய புரிதல் அவர்களிடம் இல்லை. குரூர எண்ணங்களும், மனித உணர்வுகள் பற்றிய அறிவின்மையும் அதிகரித் துள்ளது. அதனால்தான் இணையதளம் சார்ந்த குற்றங்கள் பெருகி வருகின்றன. அதற்கு சமூகம் சார்ந்து சினிமா உட்பட பல காரணிகள் உள்ளன. படங்களை பார்த்து அதை இயல்பு வாழ்க்கையில் செயல்படுத்த எண்ணுகின்றனர். அதன் எதிரொலியாகவே ‘டிக் டாக்’ உட்பட செயலிகளில் வரும் இளைஞர்களின் வீடியோக்கள் பெரும்பாலும் செக்ஸ் மற்றும் ஹூரோயிசம் சம்பந்தப் பட்டவைகளாக உள்ளன. எனவே, பெற்றோர்கள் 18 வயதுக்கு கீழே உள்ள பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தருவதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளிடம் செல்போன் தருவது கத்தியை கொடுப்பதற்கு சமம்.

பெற்றோர்கள் பலருக்கு வளரும் தொழில்நுட்பங்கள் பற்றிய புரிதல் இல்லை. இந்த தலைமுறை இடை வெளியை பிள்ளைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின் றனர். எனவே, காலத்துக்கேற்ப பெற் றோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேணடும். இணையதளங் களில் வளரும் காதல்களில் 5 சதவீதம் கூட திருமணத்தில் முடிவதில்லை. அவை அந்த நேரத்தின் கவர்ச்சியால் உருவாகுபவை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். சிறு வயதிலேயே மாணவர்களுக்கு நல்ல செயல்களை பின்பற்ற கற்றுதர வேண்டும். அதற்கு நீதி போதனை வகுப்புகளை பள்ளி, கல்லுாரிகளில் கட்டாயப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ் செழியன் கூறும்போது, ‘‘இன்றைய கல்விமுறை முழுவதும் வேலை வாய்ப்பு சார்ந்ததாகவே உள்ளது. மாணவர்களுக்கு அன்பு, அறம் சார்ந்த நெறிமுறைகளை நாம் கற்றுத் தருவதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட தவறுகின்றனர். ஆசிரியர், மாணவர்கள் உறவும் ஆரோக்கியமானதாக இல்லை. இதனால் மாணவர்கள் முழுவதும் இயந்திரங்களாகவே நடத்தப்படுகின்றனர். இளம் பருவத்தில் மாணவர்கள் பல்வேறு கவனச் சிதறல்களில் வழிதவறக்கூடும். எனவே, மாணவர்களின் சூழல் அறிந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு வழிகாட்ட வேண்டும். முகநுால் உட்பட தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, வாழ்வியலில் அதன் தாக்கம், தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பாடத்திட்டத்தில் சேர்ப்பதுடன், நமது மாணவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் பகுத்தாய்ந்து முடிவு எடுக்க கற்றுத் தர வேண்டும்’’என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

29 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்