நேபாளத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழர்கள் 23 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:
நேபாளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்காக நேபாளத்திற்கு சென்றுள்ள தமிழர்களின் கதி என்ன?
சென்னையை சேர்ந்தவர்கள் 23 பேர் புனித யாத்திரைக்கு சென்றிருக்கின்றனர். பருவநிலை அங்கு மோசமாக இருப்பதால் அவர்கள் சிமிகோட் எனுமிடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. வானிலை சரியான பின்பு சென்னை திரும்பிவிடுவார்கள். மத்திய அரசு, நேபாளம் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசியுள்ளோம்.
மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்குகிறது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
எல்லாவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தூர்வாருதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளும் போர்க்கால நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இருப்பதுபோன்று இந்தாண்டு இருப்பதற்கான வாய்ப்பில்லை.
கமிஷனுக்காக சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படுவதாக திமுகவின் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டியிருக்கிறாரே?
சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை மத்திய அரசின் திட்டம். டெண்டர் விடுவதில் மாநில அரசின் தலையீடு இல்லை. டி.ஆர்.பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர். இந்த குற்றச்சாட்டை சொல்லும்போது அவர்தான் அந்த குற்றத்தை அமைச்சராக இருந்தபோது செய்திருப்பாரோ என ஐயப்பாடு தோன்றுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான் இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது. 100 சதவீதம் அவர்களின் முதலீடு தான். பொதுநலனை முன்னிட்டு மாநில அரசு ஒத்துழைப்பு தருகிறது. மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை சந்திக்க தயாராக இருக்கிறது. மக்கள் மீது திட்டத்தை திணிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எட்டுவழிச் சாலைக்கு அவசியம் உள்ளது. வலுக்கட்டாயமாக செய்யவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா?
சுகாதார துறை அமைச்சர் சட்டப்பேரவையில் சொல்லியிருக்கிறார். முதல்கட்டமாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்து நிதி ஒதுக்கீடு, அதிகாரிகள், உள்கட்டமைப்பு ஆகிய நடவடிக்கைகள் நடைபெறும்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக சொல்லியிருக்கிறதே?
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருப்பது மகிச்சியான செய்தி. கர்நாடகம் உச்ச நீதிமன்றம் சென்றாலும் அது எடுபடும் என்ற சாத்தியக்கூறு இல்லை. 15 ஆண்டுகள் இந்த உத்தரவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. முதலில் கர்நாடகம் உச்ச நீதிமன்றம் செல்லட்டும். அதன்பின்பு, தமிழக அரசின் நிலையை சொல்கிறோம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
21 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
49 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
47 mins ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago