சென்னை: "தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக தமிழகம் கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழக அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், மத்திய பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்தது. தமிழகத்துக்கு ரூ.276 கோடி நிதியளித்த அதேநேரம், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3454 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது.
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக அரசியல் கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதியையும், கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட நிதியையும் வைத்து மத்திய அரசு மீது தமிழகத்தில் அதிருப்தி எழுந்துள்ளன. இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
மொத்த ஒதுக்கீடு எவ்வளவு? - மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்காகத் தமிழகத்திற்கு ரூ.285 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக அரசுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3498 கோடி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3454 கோடி நிதியும் விடுவித்துள்ளது.
ரூ.3454 கோடி நிதி: இதேபோல் கர்நாடக அரசும் வறட்சி நிவாரணம் கோரி வந்தது. கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடி நிதி விடுவித்துள்ளது. கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் வறட்சி நிவாரண நிதி வழங்காமல் மத்திய அரசு கர்நாடகாவை வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி வருகிறது.
நேற்று (ஏப்ரல் 26) கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு மே 7-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி வறட்சி நிவாரண நிதி, ஜிஎஸ்டி நிதிப் பங்கீடு விவகாரங்களை முன்வைத்துப் பேசினார்.
பாஜக கர்நாடகாவுக்கு காலி சொம்பை தருவதாகக் கூறினார். பாரதிய சொம்புக் கட்சி என்று காங்கிரஸ் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசுக்கும் நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு. கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடியை மத்திய அரசு விடுவித்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
தொழில்நுட்பம்
12 mins ago
உலகம்
26 mins ago
தமிழகம்
35 mins ago
விளையாட்டு
20 mins ago
இந்தியா
46 mins ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago