Published : 27 Apr 2024 11:24 AM
Last Updated : 27 Apr 2024 11:24 AM

தமிழகத்தின் மிக்ஜாம் புயல், கர்நாடகா வறட்சிக்கு நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு

மிக்ஜாம் புயல் பாதிப்பு - சென்னை | கோப்புப் படம்.

புதுடெல்லி: தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3454 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது.

புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல்: கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல் டிசம்பர் இறுதியில் தூத்துக்குடி, நெல்லையில் கடுமையான மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. உயிர்ப்பலிகள் ஏற்பட்டன.

இந்த புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் பிரச்சாரங்களிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காத மத்திய அரசு எனக் கடுமையாக சாடி வந்தார்.

மொத்த ஒதுக்கீடு எவ்வளவு? இந்நிலையில், மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்காகத் தமிழகத்திற்கு ரூ.285 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக அரசுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3498 கோடி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3454 கோடி நிதியும் விடுவித்துள்ளது.

ரூ.3454 கோடி நிதி: இதேபோல் கர்நாடக அரசும் வறட்சி நிவாரணம் கோரி வந்தது. கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடி நிதி விடுவித்துள்ளது.

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் வறட்சி நிவாரண நிதி வழங்காமல் மத்திய அரசு கர்நாடகாவை வஞ்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி வருகிறது.

நேற்று (ஏப்ரல் 26) கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு மே 7-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி வறட்சி நிவாரண நிதி, ஜிஎஸ்டி நிதிப் பங்கீடு விவகாரங்களை முன்வைத்துப் பேசினார். பாஜக கர்நாடகாவுக்கு காலி சொம்பை தருவதாகக் கூறினார். பாரதிய சொம்புக் கட்சி என்று காங்கிரஸ் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக அரசுக்கும் நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு. கர்நாடகாவுக்கு ரூ.3454 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x