தூத்துக்குடி மாவட்டத்தில் 9 லட்சம் டன் உப்பு தேக்கம்: விலை வீழ்ச்சியால் 43 ஆண்டுகளுக்கு பிறகு நெருக்கடியில் உப்பு உற்பத்தி

By ரெ.ஜாய்சன்

விலை வீழ்ச்சி மற்றும் வெளிநாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி வெகுவாக குறைந்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு உற்பத்தி செய்த 9 லட்சம் டன் உப்பு தேங்கி உள்ளது. இதனால் நடப்பாண்டு உப்பு உற்பத்தி பணிகளை தொடங்க உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்ததாக தூத்துக்குடி 2-வது இடத்தில் உள்ளது.இங்கு 20 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். .

வழக்கமாக ஜனவரி தொடக்கத்தில் உப்பு உற்பத்தி பணி தொடங்கி, பிப்ரவரி மாதம் உப்பு வாறும் பணி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு பிப். 10-ம் தேதியை தாண்டிய பின்னரும் 20 சதவீத உப்பளங்களில் மட்டுமே உப்பு உற்பத்தி பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஏஆர்ஏஎஸ் தனபாலன் கூறியதாவது: தூத்துக்குடியில் உப்பு விற்பனை சந்தை சுருங்கி வருகிறது. கடந்த ஆண்டு உற்பத்தியான உப்பில் 60% மட்டுமே விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு சீஸன் நன்றாக இருந்ததால் 22 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தியானது. இதில் சுமார் 9 லட்சம் டன் உப்பு வரை உப்பளத்தில் தேங்கியுள்ளது. வழக்கமாக 10% உப்புதான் தேங்கியிருக்கும். இந்த ஆண்டு 40% கையிருப்பில் உள்ளது. இதனால் உப்பு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது நல்ல தரமான உப்பு டன் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரையும், சாதாரண உப்பு ரூ.500 முதல் ரூ.600 வரையும் விலை போகிறது. ஒரு ஏக்கரில் சுமார் 100 டன் உப்பு உற்பத்தியாகும் நிலையில், ஒரு டன்னுக்கு ரூ.700 வரை செலவாகும். சராசரியாக ஒரு டன் ரூ.1,000 வரையாவது விலை போனால்தான் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப் படியாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் உப்பின் அளவும் குறைந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 4 லட்சம் டன் வரை ஏற்றுமதியானது. இந்த ஆண்டு சுமார் 75 ஆயிரம் டன் அளவுக்கே ஏற்றுமதியானது. விலை வீழ்ச்சிக்கு இதுவும் முக்கியக் காரணம்.

இதனால் 20% உற்பத்தியாளர்கள் மட்டுமே தற்போது உப்பு உற்பத்தியை தொடங்கியுள்ளனர். மீதமுள்ள 80% பேர் தாமதமாக உற்பத்தியைத் தொடங்கவுள்ளனர். 1975-லும் விலை வீழ்ச்சி, தேக்கம் காரணமாக தூத்துக்குடியில் உப்புத் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. 43 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அத்தகைய சூழல் நிலவுகிறது என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

வணிகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்