தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனோபாவம்தான் சென்னை ஆதம்பாக்கத்தில் இளம்பெண் எரித்துக் கொலை செய்யக் காரணம் என்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் சத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஒரு வேலைக்குச் செல்ல தகுதி வேண்டும். ஆனால் காதலிக்க எந்த தகுதியும் தேவையில்லை. எல்லா காதலும் திருமணத்தில் முடிவதில்லை. காதலி தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. காதலி எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான காதல். அதுதான் உன்னதமான காதல்.
இதனை எல்லா காதலிலும் எதிர்ப்பார்க்க முடியாது. காதலில் பல விதம் உள்ளது. தனக்கு கிடைக்காத பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்வது என்பது விபரீதமான காதல். நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். நீ எனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பெண்கள் மீது ஆசிட் வீசுவது, மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பது போன்றவைகளை செய்வார்கள்.
இது ஒரு மோசமான மனநிலையாகும். இதனை மோசமான மனநோய் என்றும் சொல்லலாம். கீழே தள்ளிவிடுவது, கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அடிப்பது என்பது அந்த நேரத்தில் வரும் ஆத்திரத்தில் செய்வதாகும். ஆனால், எரித்துக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு மண்ணெண்ணெய்யை கையில் எடுத்து செல்வது ஆத்திரத்தில் செய்வது இல்லை. அதனால், இந்த சம்பவத்தை அவர் ஏதோ ஆத்திரத்தில் செய்துவிட்டார் என்று மனிதாபிமான அடிப்படையில் பார்க்கக்கூடாது. அவரை ஒரு குற்றவாளியாகதான் பார்க்க வேண்டும்.
குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்று கேட்டது எல்லாம் வாங்கித் தருகின்றனர். சிறுவயது முதலே தான் கேட்டது, ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்து விடுகிறது. வளர்ந்த பின்னர் தான் ஆசைப்பட்டது கிடைக்காத நேரத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் பெற்றோர் குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும். எது சரி, எது தவறு என்று சொல்லி புரிய வைத்து வளர்க்க வேண்டும். குழந்தைகள் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து பழக்கப்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago