குறள் இனிது: நல்லவரா? வல்லவரா?

By சோம.வீரப்பன்

இன்றைய உலகில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் யாவும் பண்டைக்கால அரசுக்கு ஒப்பானவை. நிறுவனத்தின் முதன்மை அதிகாரியை அதன் மன்னர் எனக் கொள்ளலாம். அப்படிப் பார்க்கும் பொழுது நிறுவனத்தின் பணியாளர்களைப் படை வீரர்களாகவும், வாடிக்கையாளர்களை குடிமக்களாகவும் கொள்ளலாம்.

ஏனெனில் நல்லாட்சியின் நலன் நாட்டு மக்களுக்கே, நல்ல நிறுவனத்தின் பலன் அதன் வாடிக்கையாளர்களுக்கே! மேலும் நல்ல விற்பனை, லாபம் என்பது உணவு உற்பத்திக்குப் பொருந்தும். நிர்வாகிகள், துறைத் தலைவர்கள் அமைச்சருக்கு ஈடானவர்கள்.

மக்கள் தொடர்பு, விளம்பரம் முதலியவைகளை அரசாட்சியின் நண்பர்களாகவும், அதன் கொள்கை, கோட்பாடுகள், தப்பு நடக்காமல் தடுக்கும் ஆய்வு முதலியவற்றை அரணாகவும் கொள்ளலாம் என்று சென்ற வாரக் குறளுக்கு பொருள் கொள்ளலாம்.

அதற்கு அடுத்த குறளிலேயே அஞ்சாமை, எளியோர்க்கு உதவும் ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கு இயல்புகளை உடையவன் அரசன் என்கின்றார். சற்றே எண்ணிப் பார்ப்போம். இக்குணங்களை உடையவர் தானே நிறுவனத்திற்கும் நல்ல தலைவராக இருக்க முடியும்!

உலகளாவிய நிறுவனமாக இருந்தாலும், பெரிய அலுவலகமாக இருந்தாலும். சிறிய கிளையாக இருந்தாலும், அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கான முக்கியத் தகுதி அஞ்சாமை ஆகும்.

முதன்மை அதிகாரியாக, அந்த அமைப்பின் முதல் நபராக இருப்பவர், நல்ல முடிவுகள் எடுக்கத் தயங்கக் கூடாது - அது வியாபார யுக்தியாக இருந்தாலும் புது தொழில்நுட்பத்தை மேற்கொள்வதாக இருந்தாலும், தவறு செய்பவர்களைத் தண்டிப்பதாக இருந்தாலும், நடைமுறையில் பார்த்து இருப்பீர்கள். “அவர் மனதுக்கு சரியென்று பட்டுவிட்டால் முடிவெடுக்கத் தயங்க மாட்டார், எச்சரிக்கையாக இருப்போம். வம்பு வேண்டாம்” என்பார்கள்!

தலைவனுக்கு வேண்டிய அடுத்த இயல்பு ஈகை ஆகும். உயர் பதவியில் இருப்பவர்களுக்கு கருணை வேண்டும், கர்வம் கூடாது. பணியாளர்களுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் உதவும் எண்ணம் வேண்டும். அதிகாரம் இருப்பதால் அத்துமீறி பேசக் கூடாது, நடக்கக் கூடாது.

அவரிடம் நமக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். வெறும் இலாப நோக்குடன் செயல்படாத சமூக அக்கறையும் வேண்டும்! இதனைத் தானே இன்று Corporate Social Responsibility என்கின்றோம்!

அடுத்த குணம் அறிவுடைமை. நல்ல புத்திக் கூர்மை வேண்டும். உயர்பதவிகளில் வரும் தகவல்கள், பிரச்சினைகள் மிகஅதிகம், நேரம் மிகக்குறைவு. சீக்கிரமே புரிந்து கொள்ளக் கூடிய கெட்டிக்காரத்தனம் இல்லாவிட்டால் குழப்பம் தான்! “அடே அப்பா, அவர் எதையும் எளிதில் புரிந்து கொண்டு விடுவார்” என்பார்களே!

இறுதியாக வேண்டியது ஊக்கம். அது இல்லையேல் பயன் என்ன? எளிதோ கடினமோ, வெற்றியோ தோல்வியோ எடுத்துக்கொண்ட காரியத்தை ஊக்கத்துடன் செய்தால் தான் இலக்கை அடைய முடியும். உற்சாகம் விரைவில் பரவும் ஒரு தொற்றுநோய் என்பார்கள்! தலைவரின் உற்சாகமும் ஊக்கமுமே மற்றவர்களுக்கு வேலையில் ஆர்வத்தை ஏற்படுத்தும்!

வள்ளுவரின் வழிகாட்டுதல் இதோ

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

somaiah.veerappan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 secs ago

இணைப்பிதழ்கள்

17 mins ago

இணைப்பிதழ்கள்

28 mins ago

தமிழகம்

39 mins ago

சினிமா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்