துணிவே தொழில்: தொழில் தொடங்க எது தேவை?

By அஸ்பயர் கே.சுவாமிநாதன்

பெரும்பாலான தொழில்கள் (90 சதவீதம்) வெற்றிகரமாக அமையாதற்கு அல்லது தொழிலதிபர்கள் தோல்வியைச் சந்திப்பதற்கு என்ன காரணம்? இவர்கள் அனைவருமே எந்தத் தொழிலைத் தொடங்குவது என்ற இலக்கோ, திட்டமிடலோ இல்லாமல் தொழிலைத் தொடங்கியவர்கள்தான். வெற்றிகரமான தொழிலுக்கு முக்கியத் தேவையான தொழில் திறன் இவர்களிடம் இல்லாமல் போனதுதான்.

இருந்தாலும் இவர்கள் ஏன் தொழில் தொடங்கினார்கள்? தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தலாம் என இவர்களைத் தூண்டியது எது? பெரும்பாலானவர்கள் தோல்வியைச் சந்தித்ததற்கு அவர்களது யூகமே காரணமாகும். இது தற்கொலைக்கு ஈடான யூகமாகும். தொழிலுக்குத் தேவையான நுட்பங்கள் தங்களுக்குத் தெரியும் என்று அவர்களாக நினைத்துக் கொண்டு அவர்களாகவே தொழிலைத் தொடங்கியதுதான்.

இதே வேறு விதமாகக் கூற வேண்டுமாயின், தங்களுக்கு நன்கு சமைக்கத் தெரியும் என்பதால் உணவகத்தை தொடங்கி வெற்றிபெறலாம் என நினைப்பது.. தங்களுக்கு நன்கு சொல்லித் தரத் தெரியும் என நினைத்துக் கொண்டு கல்வி பயிற்சி மையத்தைத் தொடங்குவது. தங்களுக்கு சிகை அலங்காரம் தெரியும் என நினைத்து அழகு நிலையத்தைத் தொடங்குவதைப் போலத்தான்..

இந்த விஷயங்கள் அனைத்துமே உண்மையானவை. ஒரு மிகச் சிறந்த சமையல் கலை நிபுணர், சிறப்பாக சமையல் செய்ய முடியும். ஒரு உணவகத்தை தொடங்கி நடத்தினால் எப்படியிருக்கும். அவருக்கு ஓரளவு சந்தை நிலவரம், பிராண்டிங் மற்றும் பணியாளரை நிர்வகிக்கத் தெரியும் என்றாலும், நிறுவன செயல்பாடு ஓரளவு தெரிந்தாலும், நிதி நிர்வாகம், கணக்கு வழக்கு பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். மிகச் சிறந்த சமையல் கலைஞராக இருந்தாலும் அவரால் மிகச் சிறந்த தொழில் முனைவோராக வெற்றிகரமானவராக மாற முடியாது.

ஒரு சமையல் கலைஞர் தனது பெரும்பாலான நேரத்தை சமையல் தயாரிப்பிலேயே கழித்துவிடுவார். அவருக்கு அதிகபட்சம் தெரிந்ததும் அதுதான். இவருக்கு வர்த்தகத்தி்ன் இன்னொரு முகம் தெரியாது. குறிப்பாக சந்தைப்படுத்துதல், நிதி நிலவரம், பிராண்ட் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை மற்றும் நிர்வாக விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வர்த்தகம் வளரும்போது, உணவின் தரம் குறைந்துவிடும். ஏனெனில் இவருக்குப் பதில் உணவு தயாரிப்புப் பணியில் மற்றவர்களை தயார்படுத்தியிருக்க மாட்டார். மேலும் சேவையின் தரமும் நிலையற்றதாக இருக்கும். கணக்கு வழக்குகளிலும் குளறுபடிதான். இதனால் பணப் புழக்கத்தில் பிரச்சினை ஆரம்பமாகும். ஊழியர்கள் பிரச்சினை தலைதூக்கும்.

இதனால் விற்பனை சரியத் தொடங்கும். இதனால் செலவு அதிகரித்து தொழில் நொடித்துப்போகும். ஒரு குறிப்பிட்ட திறனை மட்டுமே வைத்து தொழில் தொடங்கியவர்கள் தோற்றுப் போனது இப்படித்தான். தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் அதற்குத் தேவையான திறன் தங்களிடம் இருக்கிறதா என்பதை அறியாமல் தொழில் தொடங்கினார்கள்.

வெற்றிகரமான தொழிலதிபராக வருவதற்கு அந்தத் தொழிலில் நிபுணத்துவம் தேவையில்லை என்ற எண்ணம் பலரிடம் உருவாகியிருக்கிறது. ஒரு சிகை அலங்காரக் கடை அல்லது அழகுக் கலை நிலையம் ஆரம்பிக்க வேண்டுமெனில் நீங்கள் சிகை அலங்கார நிபுணராக இருக்க வேண்டுமென்பதில்லை. அதேபோல உணவகம் தொடங்க நீங்கள் சமையல் கலைஞராக இருக்க வேண்டியதில்லை.

இவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதும் கிடையாது. இருந்தாலும் நீங்கள் திறமை மிக்கவர்களை பணிக்கு அமர்த்த முடியும். உங்களது அனைத்து உழைப்பையும் மற்ற தேவைகளான சந்தைப்படுத்துதல், நிதி நிர்வாகம், செயல்பாடு உள்ளிட்ட தொழில் வெற்றிகரமாக இயங்க தேவையானவற்றில் கவனம் செலுத்தலாம்.

டாடா, பிர்லா, அம்பானி போன்ற தொழிலதிபர்கள் பல்வேறு தொழில்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். அனைத்து தொழில்களைப் பற்றிய எல்லா நுணுக்கங்களும் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அவசியமும் இல்லை.. இருப்பினும் அவர்கள் மாபெரும் வெற்றியாளர்களாகத் திகழ்கின்றனர் என்றால் அவர்களிடம் வேறு என்ன இருந்தது. நாமும் அதை வளர்த்துக் கொள்வது எப்படி? வரும் வாரங்களில் பார்ப்போம்.

தொடர்புக்கு: aspireswaminathan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்