திருநெல்வேலி மாவட்டம் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து வனத்துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புலிகளைக் காக்கும் நடவடிக்கையாக, 2006-ம் ஆண்டு முதல் புலிகளை கண்காணித்தல், அவற்றை சார்ந்து வாழும் உயிரினங்கள், இரையாகும் விலங்குகள், அவற்றின் வாழிடங்கள் குறித்தெல்லாம் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, அகில இந்திய அளவிலான புலிகள் கணக்கெடுப்பு பணி, கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தொடங்கப்பட்டிருந்தது.
இதற்காக, திருநெல்வேலி கோட்டத்தில் 87 இடங்கள் கண்டறியப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. கணக்கெடுப்பு பணிக்காக களக்காடு வனச்சரகத்தில் 8 குழுக்கள், திருக்குறுங்குடி வனச்சரகத்தில் 7, கோதையாறு வனச்சரகத்தில் 4 குழுக்கள் என்று 19 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களுக்கு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் மித்தா பானர்ஜி வழிகாட்டுதலின்படி பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.
இதில், புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட 4 சரகங்களில் கணக்கெடுப்பு பணியில் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்களும் ஈடுபட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை, 895 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள, களக்காடு– முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் கால்தடம், எச்சம், நேரடியாக கண்டறிதல், கால்தடங்களை பதிவு செய்தல், காப்பகத்தில் ஏற்கனவே உள்ள தகவல்கள் அடிப்படையில் புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டன.
இதில், சேகரிக்கப்பட்ட தகவல்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த புள்ளி விவரங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம், டெல்லியில் புதன்கிழமை தொடங்கி 21-ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த கூட்டத்தில் புதிய தொழில் நுட்பம் மூலம் புலிகள் இருப்பதை உறுதி செய்வது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வனப் பாதுகாவலருமான மித்தா பானர்ஜி , 2013–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், களக்காடு– முண்டந்துறை காப்பகத்தில் 11 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார்.
அவரது கருத்துப்படி களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 11 புலிகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இதே காப்பகத்தில், 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 14 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டு இருந்தது. இதை, அப்போதைய கள இயக்குநர் ஏ.ராம்குமார் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். அப்படியானால், கடந்த 5 ஆண்டுகளில் இந்த காப்பகத்தில் 3 புலிகள் குறைந்து உள்ளது. நாளுக்கு நாள் இனப்பெருக்கத்தால் புலிகள் எண்ணிக்கை கூடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், எண்ணிக்கை குறைந்திருக்கிறதே என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
இங்கிருந்து, புலிகள் இடம்பெயர வாய்ப்பில்லை. அப்படியானால் புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளனவா? அல்லது இறந்துவிட்டனவா? என்ற கேள்விகள் எழுகின்றன.
இரு நாட்களுக்கு முன், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனச்சரகத்தில், புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வயது முதிர்ச்சி காரணமாக இப்புலி இறந்திருக்கலாம் என வனத்துறை காரணம் கூறுகிறது. ஆனால், அதே பகுதியில், புலி நகத்துடன் சிலர் கைது செய்யப்பட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுபோல், 14 புலிகள் வசித்த களக்காட்டில், ஐந்து ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 11-ஆக குறைந்திருப்பதற்கான சரியான காரணத்தை வனத்துறைதான் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago