உயிரினம் செழித்தால் உலகம் செழிக்கும்: தேசியக் காட்டுயிர் வாரம்: அக். 2 முதல் 8

By ஆதி

காடுகளில் தாவரங்கள் மட்டுமின்றி பல்வேறு உயிரினங்கள் செழிப்பாகவும் சமநிலையுடனும் இருந்தால்தான் இயற்கை வளமாக இருக்கும்.

அதன்மூலம்தான் நாம் வாழும் இந்தப் பூவுலகும் ஆரோக்கியமாக இருக்கும். இதை வலியுறுத்தும் வகையிலேயே தேசியக் காட்டுயிர் வாரம் (National wildlife week) அனுசரிக்கப்படுகிறது.

உயிரினங்களை, குறிப்பாக அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க இந்தியக் காட்டுயிர் வாரியத்தை (Indian Board of Wild Life - IBWL) மத்திய அரசு 1952-ல் உருவாக்கியது. இந்த அமைப்பு, காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காடுகளைக் காப்பாற்றும் வகையில் காட்டுயிர் சரணாலயங்களும், தேசியப் பூங்காக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகருக்குள்ளேயே கிண்டி தேசியப் பூங்கா இருக்கிறது. பொள்ளாச்சி அருகே இந்திரா காந்தி (ஆனைமலை) சரணாலயமும், திருநெல்வேலி அருகே களக்காடு - முண்டந்துறை சரணாலயமும் இருக்கின்றன.

காட்டுயிர் வாரம்

இவை மட்டுமல்லாமல் உயிரினங்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 வரையிலான ஒரு வாரக் காலத்தைக் காட்டுயிர் வாரமாக இந்தியக் காட்டுயிர் வாரியம் அனுசரித்து வருகிறது.

இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாள்.

அதேபோல, அக்டோபர் 4 உலக உயிரின நாள் (World Animal Day). இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாகக் கருதப்படுபவருமான கிறிஸ்தவ மதகுரு பிரான்சிஸ் அசிசியின் நினைவு நாள் அக்டோபர் 4.

அதனால் இந்த நாள் உயிரின நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளைக் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, உலக உயிரின ஆர்வலர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் விலங்கு காட்சியகங்கள், சரணாலயங்கள் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

வசிப்பிட நாள்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் திங்கள்கிழமை உலக வசிப்பிட நாளாக (World Habitat Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த முறை அக்டோபர் 6-ம் தேதி. 1986-ம் ஆண்டு முதல் உலக வசிப்பிட நாளை ஐ.நா. சபை அனுசரித்து வருகிறது. நமது நகரங்கள், ஊர்களின் இன்றைய நிலைமையைப் பிரதிபலிக்கவும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வசிப்பிடம் கிடைப்பது அவருடைய ஓர் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துவதும் இந்த நாளின் நோக்கம். எதிர்காலத் தலைமுறைகளுக்கு உரிய வசிப்பிடத்தை வழங்க வேண்டியது, நமது கடமை என்பதை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.

நமது சந்ததிகளும், எதிர்காலத் தலைமுறையும் இந்தப் பூமியில் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதற்கு இந்தப் பூவுலகின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். அதை உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்