ஆன்லைனில் வாடகை வீடு கிடைக்கவில்லையா?

By தியானன்

ன்லைனில் வாடகை வீடு தேடுவது சமீப காலத்தில் அதிகரித்திருக்கிறது.முன்பெல்லாம் வாடகை வீட்டுக்கு மாறுவதற்கு அக்கம் பக்கத்து வீடுகளில் சொல்லிவைப்பது வழக்கம். அதற்குப் பிறகு சென்னை போன்ற நகரங்களில் தரகர் மூலமாக வீடு பார்க்கும் முறை வந்தது. வாடகைத் தொகையை நிர்ணயம் செய்வதில் தரகர்கள் பங்கு முக்கியமானதாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. மட்டுமல்ல இந்த விஷயத்தில் வீட்டு உரிமையாளருக்குச் சாதகமாகவே தரகர்கள் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், தரகுப் பணம் அதிக அளவில் வாங்கப்படுவதாலும் அந்த முறை மிகவும் குறைந்துவிட்டது.

இப்போது பெரும்பாலும் ஆன்லைனில்தான் வாடகை வீடு தேடுகிறார்கள். வாடகை வீடு தேடுவதற்காகப் பல இணையதளங்களும் செயல்பட்டு வருகின்றன. 99ஏக்கர்ஸ், மேஜிக்பிரிக்ஸ், சுலேகா, நோபுரோக்கர் உள்ளிட்ட பல இணையதளங்கள் இவற்றில் முன்னிநிலையில் இருக்கின்றன. வாடகைக்கு வீடு தேடுபவர்கள் இது அல்லாமல் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியும் வீடு தேடுகிறார்கள்.

இவ்வளவு வழிமுறையும் இருந்தும் வாடகை வீடு கிடைப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதற்குச் சில வழிமுறைகள் இருக்கின்றன. பொதுவாக, கல்வியாண்டை வைத்துத்தான் அதிகமானோர் வீடு மாற முடிவெடுக்கிறார்கள். பிள்ளைகளின் படிப்பு, பள்ளி மாற்றம் இதற்காகத்தான் பெரும்பாலும் வீடு மாறுகிறார்கள். அதனால் வீடு மாற நினைப்பவர்கள். இதை மனத்தில் வைத்து இந்தக் காலகட்டத்தில் வாடகை வீடு தேடுவது நல்லது. அதனால் வாடகை வீடு அதிகம் வாடகைக்காகக் கிடைக்கும். தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

அதுபோல வாடகை வீடு கிடைப்பதற்கு முன்பே இப்போதுள்ள வீட்டு உரிமையாளரிடம் வீடு காலிசெய்யப் போகிறேன் எனச் சொல்லிவிட்டால், உங்களுக்கு ஒரு நெருக்கடி உருவாகும். அதனால் கூடியவரை வீட்டை ஓரளவு முடிவெடுத்த பிறகு வீட்டு உரிமையாளரிடம் சொல்லலாம். வீடு தேடும்போது, ஆன்லைனில் பல விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் தனி மின் இணைப்பு உள்ள வீடுகளாகப் பார்த்துத் தேடுங்கள்.

அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு அல்லாத தனி வீடுகள், பெரும்பாலும் குறைவான வாடகைக்குக் கிடைக்கும். மேலும், அதில் அடுக்குமாடி வீடு போல் பராமரிப்புக் கட்டணமும் இருக்காது. ஆனால், பெரும்பாலான தனி வீடுகளில் மின் இணைப்புத் தனியாக இருக்காது. இம்மாதிரி தனி மின் இணைப்பு இல்லாத வீடுகளில் சப்-மீட்டர் வைத்து வீட்டு உரிமையாளரே உங்களிடம் மின் பயன்பாட்டுக்கான தொகையை வசூலிப்பார்கள். அது மின்சார வாரியம் நிர்ணயிக்கும் தொகையைவிட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.

அதனால் தனி மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு வாடகைக்குச் செல்லும்போது நீங்கள் ஒரு பெரும் தொகையை அதற்குச் செலவிட வேண்டி வரும். மேலும், சில தனி வீடுகள் நீருக்குப் பிரத்யேகக் கட்டணம் வசூலிப்பதுண்டு.

ஆன்லைன் மூலம் வீடு தேடும்போது அதில் நம்முடைய தேர்வுகளின் அடிப்படையில் வீடுகள் தேட முடியும். உதாரணமாக அடுக்கக வீடுகள் மட்டும் என்றால் அதைத் தேட முடியும். வீட்டு உரிமையாளர் பதிவேற்றிய வீடுகளை மட்டும் தேடலாம். இதிலும் வீட்டு உரிமையாளர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் தேடல் முடிவுகளிலும் தரகர்கள் சில சமயங்களில் பதிவேற்றுவதும் நடக்கும். அதாவது தரகர்கள் சிலர், வீட்டு உரிமையாளர்கள் எனப் பதிவேற்றியிருப்பார்கள். அதனால் அதில் கவனமாக இருக்க வேண்டும்.

தரகர் பதிவேற்றிய வீடுகளைத் தேடும்போது கவனமாக இருங்கள். ஏனெனில், அவர்கள் பதிவேற்றிய வீடு ஒன்றாகவும் நமக்குக் காட்டக்கூடிய வீடு வேறொன்றாகவும் இருக்கக்கூடும். ஆன்லைனில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வாடகை இறுதியானது என நினைக்க வேண்டாம். கொஞ்சம் பேசிப் பார்க்கலாம். சிலர் வாடகையைக் குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதுபோல முன் பணமும் பெரும்பாலும் 100 ரூபாய்க்கு 1000 ரூபாய் என்ற ரீதியில் பதிவேற்றியிருப்பார்கள். ஆனால் அப்படித் திட்டமாக ஒரு தொகை நிர்ணயம் இல்லை. அதனால் அதிலும் நாம் பேசிப் பார்க்கலாம். உங்களால் கொடுக்க முடிந்த தொகை இவ்வளவுதான் எனச் சொல்லலாம். பல நேரத்தில் அது ஒத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

வீடு பார்த்து, உங்களுக்குப் பிடித்திருக்கும் பட்சத்தில் வீட்டு வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அதில் கொடுக்கவிருக்கும் முன் பணம், பராமரிப்புச் செலவு என எல்லாவற்றையும் தெளிவாகக் குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டைக் காலிசெய்ய அவகாசம் எத்தனை மாதங்கள் என்பதையும் குறிப்பிட்டால் நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

32 mins ago

வணிகம்

47 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்