18 மே, அருணா ஷண்பக் நினைவுநாள்: பெண்ணாகப் பிறந்ததுதான் குற்றமா?

By ஸ்நேகா

அருணா ஷண்பக் மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவந்தார். அவருக்கும் ஒரு மருத்துவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்தது.

1973ஆம் ஆண்டு நவம்பர் 27. உடை மாற்றுவதற்காக மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்குச் சென்றார் அருணா. அதே மருத்துவமனையில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றிய சோஹன்லால் பார்தா வால்மீகி என்பவன், பின்னால் வந்து தாக்கினான். நாயைக் கட்டி வைக்கும் சங்கிலியால் கழுத்தை இறுக்கினான். நடக்கும் கொடூரம் புரிவதற்குள் சுயநினைவை இழந்தார் அருணா. பாலியல் வல்லுறவு செய்துவிட்டு, நகையையும் பணத்தையும் எடுத்துச் சென்றுவிட்டான், சோஹன்லால்.

மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாததால், அருணாவின் கண்கள் திறந்திருந்தும் பார்க்க முடியவில்லை. பேச முடியவில்லை. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை.

சோஹன்லாலுக்கு இவ்வளவு வன்மம் உருவாக என்ன காரணம்? வேலை சரியாகச் செய்யாததைக் கண்டித்ததும்
அவர் ஒரு பெண் என்பதுமே அருணா இந்தத் தண்டனையை அனுபவிக்கப் போதுமான காரணமாக இருந்தது அவனுக்கு.

உறவினர்கள் அதிர்ந்தார்கள். திருமணம் நின்றுபோனது. வழக்கு நடைபெற்றது. குற்றவாளி சோஹன்லால் கைது செய்யப்பட்டான். அவன் மீது திருட்டு, கொலை முயற்சி என்று இரு வழக்குகள் போடப்பட்டன. அவன் இயற்கையான முறையில் உறவு வைத்துக்கொள்ளாததால், பாலியல் வல்லுறவு வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.

அருணாவுக்கு உயிர் மட்டுமே இருந்தது. அவருக்கு நேர்ந்த கொடுமை தெரியாது. பத்து வயதில் அப்பாவை இழந்தவர், அம்மாவையும் இழந்த விஷயம் தெரியாது. திருமணம் நின்றுபோனது தெரியாது. உடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர் இருந்தும் தன்னை வந்து யாரும் பார்க்காதது தெரியாது. இரவா பகலா என்பதுகூடத் தெரியாது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்குத் தண்டனை கிடைத்த விவரமும் தெரியாது. தண்டனை முடிந்து அவன் குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்ததும் தெரியாது.

அருணா வேலை செய்த மருத்துவமனை அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டது. பல ஆண்டுகள் படுக்கையிலேயே கிடக்கும் அருணாவின் நிலையைக் காணச் சகிக்காதவர்கள், அவரைக் கருணைக்கொலை செய்வதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

மருத்துவமனை சிறப்பாகக் கவனித்துக்கொள்வதாலும் அருணாவின் தோழியும் செவிலியருமான பிரதீபா பிரபு, “இயற்கையான மரணத்துக்கு அருணா தகுதியானவர்” என்று சொன்னதாலும் கருணைக் கொலைக்கு நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை.

42 ஆண்டுகள் உயிரோடு இருந்த அருணா, 66 வயதில் 2015ஆம் ஆண்டு மே 18 அன்று நிமோனியா தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்