முள்ளும் மலரும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய்...’ என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். ஒவ்வொரு உணவு வகையாகப் பாடிப் பாடியே நாக்கில் எச்சில் ஊறவைப்பார் படாபட் ஜெயலட்சுமி.
உணவைப் பிடிக்காதவர்கள் என யாருமே இருக்க வாய்ப்பில்லை. உண்பது என்பது வெறும் அறிவியல் ஏற்பாடல்ல, ஒரு ரசனைச் செயல்பாடு. சாதாரணமாக ஒரு நேரம் சாப்பிட ஹோட்டலுக்குச் சென்றால்கூட எந்தச் சாப்பாடு நன்றாக இருக்கும், எங்கே சாப்பிடலாம் என நண்பர்களிடம் ஆலோசனை கேட்ட பிறகே சாப்பிடப் போகிறோம். காரணம் உணவு மீது நமக்குள்ள அலாதிப் பிரியம்.
சாப்பிடுவதைப் போலவே உணவு குறித்து அறிந்துகொள்வதிலும் நமது விருப்பம் எல்லையற்றது. தமிழகத்தில் உணவு தொடர்பாக, சமையல் கலை தொடர்பாகப் பலர் எழுதியுள்ளனர். உலகமெங்கிலும் உணவு வகைகள், சமையல் கலை பற்றிய எழுத்துக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது.
ஜோன் நாதன் என்னும் அமெரிக்க எழுத்தாளர் சமையல் கலை பற்றிப் புத்தகங்கள் எழுதியே பிரபலமானவர். அமெரிக்காவில் உள்ள ரோட் தீவின் தலைநகரான புராவிடன்ஸ் நகரில் பிறந்த இவர், மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டம் பெற்றார். செய்திப் பத்திரிகைகளில் உணவு தொடர்பான விஷயங்களை எழுதி வந்தார். அப்போது வெளிநாட்டுச் செய்தி அதிகாரியாக ஜெருசலம் மேயருடன் செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது. உணவு தொடர்பாக மேயர் ஒருங்கிணைத்த கூட்டங்களால் இவர் ஈர்க்கப்பட்டு, உணவு வகைகள் குறித்து எழுதத் தொடங்கியுள்ளார். பிரேசில், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று அறியப்படாத உணவு வகைகளைப் பற்றி அறிந்து அவற்றை எழுதினார்.
முதலில் 1975-ல் ‘த ஃப்ளேவர் ஆஃப் ஜெருசலேம்’ என்னும் நூலை வெளியிட்டார். இதற்குக் கிடைத்த அமோக வரவேற்பால் சமையல் பற்றித் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். 1994-ல் வெளியான இவரது ‘ஜூவ்ஸ் குக்கிங் இன் அமெரிக்கா’ என்னும் புத்தகம் வெளியான உடனேயே ஏராளமான பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. அமெரிக்காவில் அதிகம் விற்றுத் தீர்ந்த புத்தகத்துக்கு வழங்கப்படும் ஜேம்ஸ் பியர்டு நிறுவன விருதும் இந்தப் புத்தகத்துக்குக் கிடைத்துள்ளது.
2001-ல் ‘த ஃபுட்ஸ் ஆஃப் இஸ்ரேல் டுடே’ என்னும் புத்தகம் வெளிவந்தது. இதில் இஸ்லாமியர், கிறிஸ்தவர், யூதர் ஆகிய இனங்களின் உணவுப் பண்பாடு, பாரம்பரியம் பற்றி எழுதியுள்ளார். இவரது சமையல் நூல்கள் உணவுப் பிரியர்களின் மனத்தைக் கொள்ளைகொள்கின்றன. பத்துக்கும் மேற்பட்ட சமையல் கலை நூல்களை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். சமையல் கலை நிகழ்ச்சிகளைக் கொண்ட இரண்டு டிவிடிகளும் வெளியாகியுள்ளன. தனது புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு பி.பி.எஸ். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியிலும் இவர் பங்குபெற்று வருகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
உலகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வேலை வாய்ப்பு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago