21-ம் நூற்றாண்டிலும் உலகம் முழுக்கப் பெண்கள் அரசியலில் நுழைவதும் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடந்துவருகிறது. பல தடைகளை உடைத்தெறிந்து அரசியலுக்கு வந்த பெண்கள், துணிச்சலோடு அரசியலுக்கு வரவும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கவும் பல பெண்களுக்கு உத்வேகம் அளித்துள்ளனர். உலகெங்கும் தேர்தல் அரசியலிலும் களப் போராட்ட அரசியலிலும் இன்னும் பல தளங்களிலும் அரசியல் செயல்பாட்டை முன்னெடுத்த பெண்களின் செயல்பாடுகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வகையில் 2017 அரசியல் களத்தில் முத்திரை பதித்த முகங்களின் தொகுப்பு இது.
மாற்றுப் பார்வை
பச்சிளம் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவது இயல்பான நிகழ்வு என்பதை வலியுறுத்தும்விதமாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லாரிஸா வாட்டர்ஸ், நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே குழந்தைக்குப் பால் ஊட்டினார். அந்தச் செய்தியும் ஒளிப்படமும் உலக அளவில் வைரலாகப் பரவின. அதேபோல் பிரேசில் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மனுவேலா டேவிளாவும் நாடாளுமன்றத்திலேயே குழந்தைக்குப் பாலூட்டினர். நம் நாட்டில் அசாம் எம்.பி. அங்கூர் லதா, சட்டப்பேரவை வளாகத்தில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் அறை ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.
திருநங்கை நீதிபதி
இந்தியாவில் திருநங்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக ஜோதியா மண்டல் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லோக் அதாலத் அமர்வுக்கு நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் தலைவர்
தலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாநிலங்களவையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து எம்.பி. பதவியைக் கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. மக்களின் பிரச்சினைகளைவிடப் பதவி முக்கியமல்ல என்பதைத் தன் செயல் மூலம் மாயாவதி நிரூபித்தார்.
நீதியின் வெற்றி
குஜராத் கலவரத்தில் மதவெறி கும்பலால் கூட்டு வல்லுறவுக்கு ஆளானவர் பில்கிஸ் பானு. கலவரத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட அநியாயத்தை எதிர்த்துத் தைரியமாக வழக்குத் தொடுத்துப் போராடினார். 15 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டு, குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
புதிய களம்
பெண்களின் பிரச்சினைகளைப் பெண்கள்தாம் தட்டிக்கேட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டது குலாபி கேங். இந்த அமைப்பைத் தொடங்கியவர் சம்பத் பால்தேவி. எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத சம்பத் பால்தேவி, இந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை.
மவுனப் போராட்டம்
இந்திய-பாகிஸ்தான் அமைதியை வலியுறுத்தும் மவுன வீடியோவை வெளியிட்ட குர்மெஹர் கவுர், தில்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி. அமைப்பின் வன்முறையை எதிர்த்துப் பதாகை ஏந்தும் ஒளிப்படத்தை வெளியிட்டார். இதனால் கடும் மிரட்டல்களை எதிர்கொண்டார்.
முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர்
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் நிர்மலா சீதாராமன் . பெண்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும் குறிப்பிட்ட சில துறைகளே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுவரும் நிலையில் முதன்முறையாகப் பெண் ஒருவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்.
ஓங்கி ஒலித்த குரல்
ஒரு பக்கம் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே இருக்க மறுபக்கம் பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை ஆகியவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்திவருவதை நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விமர்சனம் செய்தார் முன்னாள் நடிகையும் எம்.பி.யுமான ஜெயா பச்சன். பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் இருந்து அரசு தவறிவருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நான்காவதுதேசிய விருது
பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு குறித்து ‘தி வாட்டர் பால்’ என்ற ஆவணப்படம் எடுத்த ஆதிவாசிப் பெண் இயக்குநர் லிபிகா சிங் தராய்க்கு நான்காவது முறையாகத் தேசிய விருது கிடைத்துள்ளது.
வலியின் பதிவு
மதுரையைச் சேர்ந்த திவ்யா பாரதி இயக்கிய ‘கக்கூஸ்’ ஆவணப்படம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமையையும் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் அவல நிலை குறித்தும் எடுக்கப்பட்ட ஆவணம் இது.
மாணவி மீது குண்டர் சட்டம்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த கல்லூரி மாணவி வளர்மதி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு அவரை அந்தச் சட்டத்தில் இருந்து விடுவித்தது.
மாறிய போராட்ட வடிவம்
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவந்த இரோம் ஷர்மிளா, அந்தப் போராட்ட வடிவத்தைக் கைவிட்டு இந்த ஆண்டு மணிப்பூர் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றாலும் மற்ற ஜனநாயக வடிவங்களில் தனது போராட்டம் தொடரும் என்று அவர் கூறியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 secs ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
1 hour ago