பரிசோதனை ரகசியங்கள் 26 - சிறுநீரகக் கல்லுக்கு என்ன பரிசோதனை?

By கு.கணேசன்

தமிழகத்தில் சற்றே வெயில் குறைந்திருந்தாலும், கொளுத்தும் வெயிலின் உக்கிரம் முழுமையாக அகலவில்லை. வெயில் காலத்தில் ஏற்படும் நோய் களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. ‘உடலின் துப்புரவுத் தொழிலாளி' என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது வாடிக்கை. மற்ற பருவக் காலங்களுடன் ஒப்பிடும்போது கோடைக் காலத்தில் இவற்றின் தொல்லை அதிகம்.

சிறுநீரகக் கல் என்பது எது?

நாம் குடிக்கிற தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புகள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு, இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல்போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்துப் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கத்தில் பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது.

காரணம் என்ன?

சிறுநீரகக் கல் தோன்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால், அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீர்வறட்சி, தவறான உணவு முறை, உப்பு - மசாலா மிகுந்த உணவை அடிக்கடி சாப்பிடுவது, சிறுநீரகப் பாதையில் நோய் தொற்றுவது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, பேராதைராய்டு ஹார்மோன் மிகையாகச் சுரப்பது, புராஸ்டேட் சுரப்பி வீக்கம், உடல்பருமன், பரம்பரை போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்துகின்றன.

கற்கள் என்ன செய்யும்?

விருந்துக்கு வந்த இடத்திலேயே திருடின கதையாக, சிறுநீரகப் பாதையில் உருவாகிற கல் முதலில் சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்யும். இதன் விளைவாக, சிறுநீரகத்திலோ சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், சிறுநீரகம் பழுதாகி, பின்னர் செயலிழந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

சிறுநீரகத்தில் கல் இருந்தால் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தோன்றாது. கல் நகரும்போதும், சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரென கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறுகிற புறவழித் துவாரம்வரை பரவும். இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளலாம்.

பரிசோதனைகள்

சிறுநீர்ப் பரிசோதனை:

சிறுநீரில் ரத்தம் வெளிப்பட்டாலோ, கால்சியம், பாஸ்பேட் போன்ற தாதுப் படிவங்கள் தெரிந்தாலோ பயனாளிக்குச் சிறுநீரகக் கல் இருக்க வாய்ப்பு உண்டு. சிறுநீரில் சீழ் செல்கள் காணப்பட்டால், சிறுநீரகப் பாதையில் தொற்று இருக்கிறது என்று பொருள்.

வயிற்று எக்ஸ்ரே கேயூபி:

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை வருவதற்கு முன்னால், சிறுநீரகக் கல்லைக் கணிக்க, இதுதான் பிரதானப் பரிசோதனையாக இருந்தது. இப்போதும் அல்ட்ரா சவுண்ட் வசதி இல்லாத ஊர்களில், இதுவே பயன்பாட்டில் உள்ளது.

வயிற்று அல்ட்ரா சவுண்ட்:

சிறுநீரகக் கல்லுக்கான அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் இப்பரிசோதனை அவசியம். இதில் பயனாளிக்குச் சிறுநீரகக் கல் இருப்பதை உறுதி செய்ய முடியும். மேலும், வயிற்றிலும் சிறுநீரகத்திலும் வேறு பிரச்சினைகள் இருந்தாலும் தெரிந்துவிடும்.

வயிற்று சி.டி. ஸ்கேன் பரிசோதனை:

சிறுநீரகக் கல் மிகச் சிறிய அளவில் இருக்குமானால், அது அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் தெரியாது. அப்போது இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சிறுநீரகக் கல் மட்டுமல்லாமல், சிறுநீரகத்தில் வீக்கம், நீர்க்கட்டி (Cyst), புற்றுநோய், புராஸ்டேட் பிரச்சினை மற்றும் வயிற்றில் உள்ள வேறு ஏதேனும் பிரச்சினைகளையும் இதில் தெளிவாகக் காணலாம்.

ஐ.வி.பி. (Intra Venous Pyelogram) பரிசோதனை:

இதில் பயனாளிக்கு ஒரு வகை சாய மருந்தைச் சிரைக்குழாய் வழியாகச் செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிகளில் வயிற்றை எக்ஸ்ரே எடுப்பார்கள்.

சி.டி. ஸ்கேன் மற்றும் ஐ.வி.பி.

பரிசோதனைகள் மூலம் கல் எந்த இடத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பச் சிகிச்சை அளிக்க முடியும்.

சிறுநீரகக் கல் வகையைக் கண்டறியும் பரிசோதனை:

சிறுநீரகக் கல்லில் கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம், ஸ்டுரூவைட் கற்கள் எனப் பல வகைகள் உள்ளன. ஒருவருக்கு இந்தத் தொல்லை மீண்டும் மீண்டும் ஏற்படும்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள கல் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருந்துகளைச் சாப்பிடுவதும் உணவு முறையை மாற்றிக்கொள்வதும், மீண்டும் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுப்பதற்கு உதவும்.

சிறுநீர் கல்சர் பரிசோதனை:

சிறுநீரில் சீழ் தெரிந்தால், சீழில் உள்ள கிருமிகளின் வகை, அவற்றைக் கொல்லும் மருந்துகள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் பரிசோதனை இது.

ரத்தப் பரிசோதனை:

ரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட், யூரிக் அமிலம் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருந்தால், அவற்றைக் குறைப்பதற்கான மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

சிகிச்சை என்ன?

சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள சிறுநீரகக் கற்களைச் சரியான உணவு, போதுமான தண்ணீர் குடிப்பது, மருந்து, மாத்திரைகள் மூலமே கரைத்துவிடலாம். 1.5 செ.மீ. வரை அளவுள்ள கற்களை எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல், ‘ஷாக் வேவ் லித்தோட்ரிப்ஸி' எனும் முறையில் வெளியிலிருந்தே ஒலி அலைகளைச் செலுத்தி, கல்லின் மீது அதிர்வை ஏற்படுத்தி உடைத்துவிடலாம். சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றில் உள்ள கற்களை ‘யூரிட்ரோஸ்கோப்பி' எனும் முறையில் வளையும் தன்மையுள்ள குழாய் போன்ற ஒரு கருவியைச் சிறுநீர்ப் புறவழி வழியாக உள்ளே செலுத்தி, கற்களை நசுக்கியும் லேசர் கொண்டு உடைத்தும் எடுத்துவிடலாம். ஆனால், சிறுநீரகத்தில் உள்ள கற்களை இந்த முறைகளில் எடுக்க முடியாது. 2 செ.மீ.க்கும் அதிகமான அளவில் உள்ள கற்களை ‘நெப்ரோ லித்தாட்டமி' எனும் முறையில் முதுகில் சிறிய துளை போட்டு அறுவை சிகிச்சை செய்தே அகற்ற வேண்டும்.

தடுப்பது எப்படி?

# வெயிலில் அலையாதீர்கள்.

# நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

# உப்பைக் குறைக்கவும்.

# மருத்துவர் ஆலோசனைப்படி உணவு முறையை மாற்றவும்.

# இறைச்சி உணவைத் தவிர்க்கவும்.

# கால்சியம் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.

சிறுநீரகக் கல் இருப்பவர்கள் எதைச் சாப்பிடக்கூடாது?

காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. குளிர்பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. காரணம் இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம்பருப்பு, நாட்டு வாதுமைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஆக்சலேட் மிகுந்துள்ளது. உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்றவற்றைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். இதுபோல், கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. ஆட்டு இறைச்சி வேண்டவே வேண்டாம். இதில் உள்ள புரதமானது ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகப்படுத்தும். சிட்ரேட் அளவை குறைக்கும். இந்த இரண்டுமே சிறுநீரகக் கற்களை உருவாக்கும்.

(அடுத்த வாரம்: சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுவது ஏன்?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்