பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்பது பலரும் அச்சப்படும் முக்கிய உடல்நலப் பிரச்சினையாக இருக்கிறது. மூளை நரம்பியல் வல்லுநர் டாக்டர் பாலசுப்பிரமணியன் பக்கவாதம் பற்றிய அடிப்படைகளை விளக்குகிறார்.
இதயத்தால் பம்ப் செய்யப்படும் ரத்தம் உடலின் மற்ற பாகங்களைச் சென்றடைவது போல மூளையையும் சென்று அடைகிறது. இந்த ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மூளைத்தாக்கு ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்கிறோம்.
ஸ்ட்ரோக் எதனால் ஏற்படுகிறது?
ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புக் காரணமாக ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இப்பிரச்சினை பெருமூளையின் வலப்பகுதியில் ஏற்பட்டால் உடலின் இடப்பகுதி பாதிக்கப்படும். இடப்பகுதியில் பிரச்சினை உண்டாகும்போது வலப்பகுதி பாதிக்கப்படும்.
இதைப் பக்கவாதம் என்று சொல்வது வழக்கம். உடலின் ஏதாவது ஒரு பக்கத்தில் இந்தப் பாதிப்பு ஏற்படுவதால் அப்படிப் பெயர். இதுவே சிறுமூளையில் வலது பக்கத்தில் ஏற்பட்டால் வலது பக்கம் பாதிக்கப்படும். இடது பக்கத்தில் ஏற்பட்டால் இடது பக்கம் பாதிக்கப்படும்.
ஸ்ட்ரோக் என்றால் என்ன?
மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்து, ஏற்படும் ரத்தக் கசிவினால் மூளை பகுதியில் ரத்தம் சேர்ந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இதுதான் ஸ்ட்ரோக்.
ஸ்ட்ரோக் ஏற்படக் காரணம் என்ன?
பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் தலையில் அடிபடுவதுதான். ரத்தக் கொதிப்பு, மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல் ஆகியவையும் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதுவே பெண்களுக்கு வேறுவிதமான பாதிப்பைத் தரும். சிலருக்குப் பிரசவத்தின் போதும், கருக்கலையும் போதும் ரத்தம் உறையக்கூடும். அவை ரத்தநாளம் வழியாக மூளையை அடைந்து, ரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடும். இதனால் ஸ்ட்ரோக் ஏற்படும். இது உடனடியாகவோ, பின்னாளிலோ ஏற்படலாம்.
எந்தெந்த வயதில் ஸ்ட்ரோக் ஏற்படும்?
பிறக்காத குழந்தைக்குக்கூட ஸ்ட்ரோக் ஏற்படலாம். கருவிலேயே மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருப்பார்கள். கருவில் நன்றாக வளர்ந்த குழந்தைகூட, தாய்க்கு வலி ஏற்பட்டுக் குறித்த காலத்திற்குள் பிறக்காவிட்டால், மூளைக்கு ரத்தம் பாயாமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குழந்தை பிறந்தவுடன் அழாவிட்டால், மூளை பாதிப்பால் உடல் தொய்ந்துவிடும். ஸ்ட்ரோக்குக்கு வயது மட்டுமே காரணம் இல்லை. சிறு வயதில் மூளை காய்ச்சல் வந்ததுகூடத் தெரியாமல் இருந்திருக்கும். அதுவே பின்னாளில் ஏதேனும் ஒரு வயதில் ஸ்ட்ரோக்காக மாறக்கூடும்.
முன்னெச்சரிக்கையாக மூளைப் பரிசோதனை செய்யலாமா?
மாஸ்டர் செக்கப் போல மூளை செக்கப் என்று முன்னெச்சரிக்கை பரிசோதனை எதுவும் கிடையாது. சிலர் திடீரென்று மயக்கமடைந்து விழுந்துவிடுவார்கள். அப்போது கண்டிப்பாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இதன் காரணமாக ரத்த ஓட்டம் தடைபட்டு மூளையைப் பாதித்திருக்கக்கூடும். இந்த நேரங்களில் எம்.ஆர்.ஐ, சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் அவசியம்.
உடலில் எங்கு அடிபட்டாலும் பின்னந்தலையில் அடிபடக் கூடாது என்று சொல்வதற்கான காரணம் என்ன?
சிறு மூளை, பெருமூளை, தண்டுவடம் ஆகியவற்றை இணைக்கும் பகுதியான மெடுலா ஆப்லங்கேட்டா பின்னந்தலையில்தான் இருக்கிறது. இங்கு அடிபட்டால் உடலின் பல பகுதிகளும் பாதிக்கப்படும். பெருமூளை பாதிக்கப்படுவதன் காரணமாகக் கை, கால் செயலிழப்பு ஏற்படும். சிறுமூளை பாதிப்பால் ஐம்புலன்களான பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுதல் ஆகியன பாதிக்கப்படும். தண்டுவடமும் பாதிக்கப்பட்டால் செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதனால் எக்காரணம் கொண்டும் பின்னந்தலையில் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது அடிபடாமல் தலையைக் காக்கும்.
மூளை பலத்திற்கு என்ன டயட்?
டென்ஷன் கூடாது. வறுத்தது, பொரித்தது கூடாது. இவற்றைக் கொஞ்சமாகச் சாப்பிடலாம். உணவில் எண்ணெய், நெய், வெண்ணெய், அளவுக்கு மீறிய அசைவ உணவு, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதேநேரத்தில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவுக்கு அதிகமானால் ஜெல் போல் பிசுபிசு தன்மையைப் பெறும். இந்நிலையில் ரத்தத் திரவத் தன்மையின் மாறுபாட்டால் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இவ்வாறு ரத்தம் ஜெல் போல் மாறினால் பக்கவாதம் ஏற்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
9 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
13 hours ago