எனக்குத் தலையில் பொடுகு உள்ளது. இதை seborrheic dermatitis என்று சொல்கிறார்கள். இதற்குத் தீர்வு என்ன?
- முருகன், கொங்கம்பட்டி.
ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயைத் தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம், காது போன்ற பகுதிகளில் இது காணப்படும். குழந்தைகளுக்கு வந்தால் இதை cradle cap என்று சொல்வார்கள்.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.
இந்நோய் உள்ளவர்களுக்குத் தோலின் தன்மையில் மாற்றம் காணப்படும். தலை, கண் புருவம், மூக்கு, உதடு, காதின் பின்பகுதி, நெஞ்சு போன்ற பகுதிகளில் இது வரலாம். பின்னர் இது பொடுகு போல மாறும். அரிப்பு ஏற்படும், முடி உதிரும்.
பார்த்தவுடன் இதைக் கண்டறிந்துவிட முடியும். ஒரு சிலருக்கு வெயில் காலத்தில் இது அதிகமாவதை நான் பார்த்திருக்கிறேன். கவனமாக இருந்து மனஅழுத்தத்தை குறைத்தால் இது மாறிவிடும். இது Psoriasis இல்லை என்பதை, பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
இதற்கு ஏலாதி தைலம், வெட்பாலை தைலம், ஊமத்தையிலை தைலம் ஆகியவற்றைத் தேய்ப்பது சிறந்தது. இவை அல்லாமல் கீழ்க்கண்ட கைமுறைகளைப் பயன்படுத்திப் பொடுகு தொல்லையை மாற்றலாம்.
# வெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும்.
# வால் மிளகுத் தூளுடன் பால் சேர்த்துத் தலையில் தேய்த்துச் சில நிமிடங்கள் ஊறிய பின் குளிக்க வேண்டும்.
# தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
# பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும்.
# கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
# தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம்.
# வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.
# துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது.
# வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.
# நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.
# பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
# அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.
# காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.
# சின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்.
மேற்படி முறைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் தலையிலுள்ள பொடுகுத் தொல்லையை நீக்கலாம்.
அதற்குப் பிறகு மகா திக்தக கிருதம், இரவில் 2 ஸ்பூன் சாப்பிடலாம். 15 நாட்களுக்குப் பிறகு திரிவிருத் லேகியம் கொண்டு மலசுத்தி செய்யலாம்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
26 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
3 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago