ஒரு நோயாளிக்கு விநோதமான ஒரு பிரச்சினை. தனியாக அமர்ந்திருக்கும்போது விநோதமான பேச்சு சத்தங்கள் கேட்பதுதான் அவரது பிரச்சினை. "யாரோ இருவர் பேசிக்கொண்டே இருப்பது காதில் கேட்கிறது. ஒருவர் லண்டனில் இருந்தும் மற்றொருவர் அமெரிக்காவில் இருந்தும் பேசுகிறார்கள்.
‘காலையில் சாப்பிட்டாயா?' என லண்டன் குரல் சாதாரணமாகக் கேட்டால், அமெரிக்காவில் பேசும் இன்னொருவர் எனக்கு ஆணை பிறப்பிப்பதுபோல ‘ஆபிஸ் போ! உட்கார்!’ எனக் கடுமையாகப் பேசுகிறார்". இதுமட்டுமில்லாமல் சில நேரங்களில் அந்த இரு குரல்களும் தங்களுக்குள் பேசிக்கொள்வதையும் அவரால் கேட்க முடிகிறது, சமயத்தில் இவரும் அவர்களுடன் பேசிவிடுகிறார்.
அவருக்கு மீண்டும் மீண்டும் எழும் கேள்வி, ‘இந்தக் குரல்கள் நிஜமானவையா?’ என்பதுதான்.
நமது மனம் பல்வேறு ஆச்சரியங்களையும் சந்தேகங்களையும் உள்ளடக்கியது. மனதில் தோன்றும் விதவிதமான எண்ணங்கள், கேள்விகள், சந்தேகங்கள் எளிதில் விடைகாண முடியாத அளவுக்கு நீண்டுகொண்டே செல்பவை. மனநலம் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினை குறித்துக் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரிப் பேராசிரியரும் மனநல மருத்துவருமான ஒய். அருள்பிரகாஷ் விளக்குகிறார்:
தற்கொலை முயற்சி
மேற்கண்ட சம்பவத்தைக் கேட்டதும் சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சிகிச்சைக்கு வந்த நபர் ஞாபகத்துக்கு வருகிறார். அந்த நபர் ஒரு நாள் ஓடும் ரயிலில் இருந்து குதித்திருக்கிறார். அதனால் கடுமையான காயமடைந்துவிட்டார். சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய பின், திரும்பவும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகச் சொல்லியுள்ளார்.
அப்போது அவரை என்னிடம் அழைத்து வந்தனர். இதுபோன்ற பிரச்சினையில் சம்பந்தப்பட்டவரைப் பேசவிட வேண்டும். அப்போதுதான் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அதன் பிறகுதான், அதற்கான சிகிச்சை முறையைக் கண்டறிய முடியும்.
தீவிரவாதி முத்திரை
அவருக்கு நடந்தது என்னவென்றால், ஒருமுறை மும்பைக்கு ரயிலில் சென்றுகொண்டு இருந்திருக்கிறார். அப்போது ரயிலில் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த நபர், இவரை உற்றுப் பார்த்திருக்கிறார். சட்டென எழுந்து முன்னே சென்று அங்கு அமர்ந்திருந்த மற்றொருவரிடம், இவரைச் சுட்டிக்காட்டி, ‘அவன் ஒரு தீவிரவாதி’ எனச் சொல்லியிருக்கிறார்.
அவரும் அருகில் இருந்தவரிடம் சொல்ல, அந்தக் கம்பார்ட்மெண்டில் இருந்த அனைவரும் இவரை ‘தீவிரவாதி’ என்று சொல்லயிருக்கிறார்கள். பயந்து போய்ப் பக்கத்து கம்பார்ட்மெண்டுக்குச் சென்று அமர்ந்தால், அங்கிருந்தவர்களும் ‘தீவிரவாதி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
எல்லோரும் சேர்ந்து அவரை போலீசிடம் பிடித்துக்கொடுத்துச் சித்திரவதை செய்யப்போவதாகக் கூற, இவர் மனம் குழம்பியிருக்கிறது. அதற்குள் நாமே இறந்துவிடலாம் என ரயிலில் இருந்து குதித்துள்ளார்.
பொய்க் குரல்
ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது. அவரைப் பார்த்து யாரும் ‘தீவிரவாதி’ என்று சொல்லியிருக்கவில்லை. ஆனால், அப்படியான குரல்கள் அவருக்குக் கேட்டிருக்கின்றன. அந்தக் குரல்கள் நிஜம் அல்ல. ஆனால், அவர் உணர்ந்தது நிஜம்தான்.
மேற்கண்ட இரண்டு நபர்களின் அனுபவத்திலும் இம்மாதிரியான குரல்கள்தான் பிரச்சினை. அருகில் மனிதர்களே இல்லாதபோதும் கேட்கும் அந்தக் குரல்களை, அவர்கள் நிஜம் என்று நம்பிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட குரலைத்தான் ‘மாயக் குரல்' (Auditory hallucination) எனச் சொல்கிறோம்.
இந்த மாயக் குரல்களை நிஜம் என்று புரிந்துகொள்வதுதான் பிரச்சினைக்கான காரணம். இத்தகைய மாயக் குரல், மனச்சிதைவுக்கான (Schizophrenia) அறிகுறிகளில் முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக ‘சந்தேக மனச்சிதைவு’ (Paranoid schizophrenia) என்ற உட்பிரிவின் முக்கியமான அறிகுறி.
நவீன சிகிச்சை
அதிகமாகக் குடிப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். குடிபோதையில் இருக்கும் பலர் விநோதமான மாயக் குரல்களைக் கேட்டு, அதற்குப் பதில் அளிப்பதை நாம் சாதாரணமாகப் பார்த்திருப்போம். இதைக் குடி சம்பந்தமான மாயக் குரல் (Alcoholic hallucinosis) என்று சொல்கிறோம். போதை மருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கும், இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
இந்த மாதிரியான பிரச்சினைகள் உள்ளவர்கள் கால தாமதம் செய்யாமல் மனநல மருத்துவரை அணுக வேண்டும். இந்த மாதிரிப் பிரச்சினைகளைப் பலரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவதால் மனச்சிதைவு முற்றிய நிலைக்குச் செல்ல நேரிடலாம். இது போன்ற மனச்சிதைவுகளை எளிதாகக் குணப்படுத்தும் வகையில் மருத்துவத் துறையில் தற்போது பெரிய புரட்சியே நடந்திருக்கிறது. மாயக் குரலைக் கட்டுப்படுத்தவும், தொடர் சிகிச்சை யின் மூலம் குணப்படுத்தவும் முடியும்.
மருத்துவர் அருள் பிரகாஷ் , தொடர்புக்கு: arulmanas@gmail.com
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
கருத்துப் பேழை
8 mins ago
சுற்றுலா
45 mins ago
சினிமா
50 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
வணிகம்
3 hours ago