எட்டுத்திக்கும் சிறகடிக்கும் கதைகள் - செவ்விந்தியர்: மலையின் மகன்

By யூமா வாசுகி

ஒரு பெண், தன் கிராமத்திலிருந்து மலைக்குச் சென்று பழங்கள் சேகரிப்பார்.

சுவையான பழங்களை அள்ளி வழங்கும் மலையை அவருக்குப் பிடித்துவிட்டது. மலையை மிகவும் நேசித்தார். எவ்வளவு பெரிய மலை! எவ்வளவு உயரம்! அங்கே எங்கும் பழக் காடுகள்தாம்.

ஒருநாள் அவர் மலையிடம் உரக்கக் கேட்டார்: “என் அன்பான மலையே, என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா?”

மலை அவரைத் திருமணம் செய்துகொண்டது.

அவர் மீண்டும் மலையிடம் கேட்டார்: “என் அன்புக்குரிய மலையே, நீ ஒரு மனிதனாகிவிட்டால் நன்றாக இருக்குமே!”

அப்போது மலை, மனித உருவத்தில் அவர் முன் வந்தது.

அதன் பிறகு மூன்று வருட காலம் அவர் கிராமத்துக்குத் திரும்பவில்லை. மலையுடன் வாழ்ந்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் மலையைப் போன்றே இருந்தான்.

அவனது சின்னஞ்சிறிய புருவங்கள் பெரிய பாறைகளால் ஆனவை. பெரிய செடார் மரங்கள்தான் அவன் கால்கள். அவன் கண்களில் பனி மலைகள் பளபளத்தன.

மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் தன் மகனுடன் கிராமத்துக்கு வந்தார். ஒரு மலையைத்தான் தான் திருமணம் செய்துகொண்டதாக கிராமத்தினரிடம் சொன்னார்.

யாரும் அதை நம்பவில்லை.

ஒரு மலைதான் தன் மகனின் அப்பா என்று அவர் சத்தியம் செய்தார். யாரும் அதை நம்பவில்லை.

அந்தப் பையன் ஒரு மந்திரவாதியாக வளர்ந்தான். அவனுடைய அற்புதமான சக்திகளைப் பற்றி மக்கள் தெரிந்துகொண்டார்கள்.

அவன் ஒரு மானைப் பார்த்தால் அது உடனே செத்துவிடும். அவன் காட்டு வாத்துகளைப் பார்த்துக் கொஞ்சம் பூக்களை விட்டெறிந்தால் போதும், அந்தப் பூக்கள் அம்புகளாக மாறிச் சென்று வாத்துக் கூட்டங்கள் முழுவதையும் கொன்றுவிடும். இறந்து போன இவற்றை எல்லாம் எடுத்துச் சென்று மக்கள் சமைத்துச் சாப்பிடுவார்கள்.

அப்படித்தான் அவன் அந்தக் கிராமத்தினர் அனைவருக்கும் உணவுக்கு வழி செய்தான். பிறகு அவன் அந்தக் கிராமத்தின் தலைவனாக ஆனான்.

தன் மக்களுக்கெல்லாம் அவன் உணவு கொடுத்தான். எதிரிகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்றினான். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்தான்.

ஆனால், அந்தக் கிராமத்து மக்கள் பேசிக்கொண்டார்கள்:

“நம் தலைவனின் அப்பா யார்?”

“மலையின் மகன் என்று சொல்கிறார்கள். ஆனால், மலை எப்படி ஒருவனுக்கு அப்பா ஆக முடியும்?”

இதைக் கேட்டு தலைவனின் அம்மா மிகவும் வருந்தினார்.

‘என் மகன் இவர்களுக்கு எவ்வளவோ நன்மை செய்தாலும், அவன் மலையின் மகன் எனும் உண்மையை இவர்கள் நம்பவில்லையே! என் மகனைப் பயன்படுத்திக்கொண்டு அவனைச் சந்தேகப்படுகிறார்களே!’ அவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்த மக்களைச் சபித்தார்.

“நீங்கள் குளவிகளாக மாறுவீர்கள்! என் மகனின் புருவங்களைப் பாருங்கள். அவை பாறைகளால் ஆனவை. கால்களைப் பாருங்கள், அவை செடார் மரங்கள்! அவன் கண்களில் பனி மலைகள் ஒளிர்வதைக் காணவில்லையா? அவன் மலையின் மகன்! உங்களைவிட எவ்வளவோ பெரியவன்!”

அப்புறம் அவர் தன் மகனுடன் அந்த மலைக்கே சென்றுவிட்டார். பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.

கிராமத்தினர் அனைவரும் குளவிகளாகிவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

19 mins ago

வாழ்வியல்

10 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்