ஈயை விரட்டிய குரங்கு

ஒரு காலத்துல ஒரு ராஜா இருந்தாரு. அவரு ஒரு குரங்கை ரொம்ப ஆசையா வளர்த்துட்டு வந்தாரு. அதுவும் அவரு மேல ரொம்பப் பாசமா இருந்துச்சு.

ராஜா ஒரு நாள் வழக்கம் போல தோட்டத்துல உலாவப் போனபோது குரங்கும் கூடவே போச்சு. புற்களுக்கு நடுவுல பாம்பு ஒண்ணு இருந்ததை குரங்கு கவனிச்சிடுச்சு. உடனே அது தாவி குதிச்சு ராஜாவோட கவனத்தைக் கவர்ந்து பாம்பு இருக்கறதை காண்பிச்சிடுச்சு.

சரியான சமயத்துல ராஜா, பாம்புக் கடியிலிருந்து தப்பிச்சாரு. குரங்கோட எச்சரிக்கை உணர்வையும், விசுவாசத்தையும் பார்த்து ராஜா ரொம்ப நெகிழ்ந்து போயிட்டாரு.

உடனே, அந்தக் குரங்கையே தன்னோட பாதுகாவலரா ஆக்கிக்க முடிவு செஞ்சுட்டாரு. அவரோட இந்த முடிவைக் கேட்ட மந்திரிங்க, ஆலோசகர்கள் எல்லாம் திகைச்சுப் போயிட்டாங்க.

அவங்க ராஜாகிட்ட, ‘ராஜா என்னதான் இருந்தாலும் அது ஒரு விலங்குதானே! அதுக்கு மனுஷங்க மாதிரி பகுத்தறிவோ, முடிவெடுக்கற திறமையோ இருக்காதே! உங்களோட இந்த விபரீத எண்ணத்தை மாத்திக்கங்க'ன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க.

ராஜா கேட்கறதா இல்லை.

‘என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு அந்தரங்கப் பாதுகாவலனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதி பாசமும், விசவாசமும்தான்! அது என் குரங்குகிட்ட நிறையவே இருக்கு! அதனால என் பாதுகாவலுக்கு மனிதர்கள் வேண்டாம். குரங்கே போதும்'னு தீர்மானமா சொல்லிட்டாரு.

அன்னிலேருந்து குரங்கு, ராஜாவை விட்டு ஒரு நிமிஷம்கூட விலகாம அவர் எங்கு போனாலும் கூடவே போறதும் வர்றதுமா இருந்தது.

ஒரு நாள் ராஜா குரங்குகிட்ட ‘எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் கொஞ்ச நேரம் நல்லா தூங்கப் போறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யாம பார்த்துக்க’ன்னு சொல்லிட்டு தூங்க ஆரம்பிச்சிட்டாரு.

குரங்கும் ரொம்ப அக்கறையா, படுக்கைக்குப் பக்கத்துலேயே இருந்து காவல் காத்துக்கிட்டிருந்தது. அந்த சமயம் பார்த்து அங்க ஒரு ஈ வந்தது. அது ராஜா காது கிட்ட வந்து ‘ஸொய் ஸொய்'ன்னு கத்தி ராஜாவை தொந்தரவு பண்ணுச்சு. குரங்கு ‘சூசூ'ன்னு துரத்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சி, அந்த ஈ திரும்பவும் அங்கேயே சுத்தி சுத்தி வந்துக்கிட்டே இருந்தது. குரங்குக்கு கோபம் தாங்கல. ஈக்குத் தகுந்த பாடம் புகட்டணும்னு தீர்மானிச்சிடுச்சு. அது ராஜாவோட வாளை எடுத்து கையில் வைச்சிக்கிச்சு. இந்த முறை ஈ வந்தா அதை ஒரே போடு போட்டு ரெண்டு துண்டாக்கிட வேண்டியதுதான்னு முடிவெடுத்துடுச்சு.

நடக்கறது எதுவும் தெரியாத ராஜாவோ பாவம் நிம்மதியா தூங்கிக்கிட்டிருந்தாரு. ஈ திரும்பவும் வந்தது. இந்தத் தடவை அது ராஜாவோட கழுத்துக்கு மேல பறந்துச்சு. அவ்வளவுதான் தயாராக இருந்த அந்த குரங்கு ஈயை ஒரே வெட்டா வெட்டிடுச்சி. ஐயோ! என்ன பரிதாபம்! ஈ பறந்து தப்பிச்சிடிச்சு. ராஜா தலை துண்டாகிப் போச்சு. இப்படியாக, ராஜா தன்னோட சொந்த பாதுகாவலனாலயே கொல்லப்பட்டுட்டாரு.

ராஜா இறந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்த நாட்டு மக்களும் மந்திரிகளும் சோகத்துல மூழ்கிட்டாங்க. அவங்க ‘புத்திசாலியான எதிரியைவிட முட்டாளான தோழன்தான் ரொம்ப ஆபத்தானவன்'னு நம்ப ராஜாவுக்குத் தெரியாமப் போச்சேன்னு புலம்பிக்கிட்டாங்க.

ஓவியம்: ராஜே

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்