கற்காலத்தில் கரூர்

By க.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த நகரங்களில் கரூர் முக்கியமானது. அதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. சங்க காலத்தில் சேரர் தலைநகரமாகவும், வணிக நகரமாகவும் கரூர் திகழ்ந்துள்ளது. மேற்குக் கடற்கரையில் இருந்து கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் பெருவழிப் பாதையாகவும் விளங்கியுள்ளது. இதனால் கரூர் பகுதியில் ரோமானியக் காசுகள் அதிகளவில் கிடைத்துள்ளன.

கரூர் நகரின் தொன்மை, சிறப்பு, வரலாறு குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கரூரில் 1973-74, 1977, 1979, 1996 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் கரூரின் தொன்மையான வரலாற்றைச் சான்றுரைக்கின்றன.

சேரர் அகழ் வைப்பகம்

இவற்றில் கரூர் நகரின் தொன்மையை விளக்கும் பல்வேறு சான்றுகள் கிடைத்தன. இவற்றை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் கரூரில் சேரர் அகழ் வைப்பகம் ஏற்படுத்தப்பட்டு, கரூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள், நாணயங்கள், தொன்மையின் ஆதாரங்கள் புகைப்படங்களாக இடம் பெற்றுள்ளன.

இறந்தவர்களைப் புதைக்கும் இடங்களை யாரும் தோண்டிவிடக் கூடாது என அறிவிக்கும் விதமாகவும், அவர்களின் நினைவாகவும் பெருங்கற்காலத்தில் உடலைப் புதைத்த இடத்தைச் சுற்றி வட்டமாகக் கற்கள் அடுக்கி வைக்கும் வழக்கம், கல்வட்டத்திற்குள் கற்களை அடுக்கி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

இவை கல்வட்டம், கல்குவை என்றழைக்கப்படுகிறது. இதுபோன்ற கல்வட்டம், கல்குவை கரூர் மாவட்டத்தில் புகழூர், காருடையாம்பாளையம், மண்மங்கலம், மலைக்கோயிலூர், மூக்கணாங்குறிச்சி, நத்தமேடு, புன்னம், வேட்டமங்கலம், அருமைக்காரன்பட்டி, கேதம்பட்டி, சணப்பிரட்டி, உப்புப்பாளையம், சின்ன ஆண்டாங்கோயில், நெடுங்கூர், நாகம்பள்ளி, ஒத்தம்பட்டி, முன்னூர், பள்ளப்பாளையம், பவித்திரம், பரமத்தி, ராமகவுண்டன்புதூர், கொத்தம்பாளையம், கீழ்கேத்தம்பட்டி, கோவிலூர், கரைபாளையம், வடுகனூர், வாழ்நாயக்கன்பட்டி, காளிப்பாளையம், வெஞ்மாங்கூடலூர் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் துறை ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் நெடுங்கூரில் காணப்பட்ட ஈமச்சின்னமான கல்வட்டம் 2006- 2007 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சின்ன ஆண்டாங்கோயில் பகுதியில் முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டன.

இத்தகைய தொன்மையான வரலாறு கொண்ட கரூரில் போக்குவரத்து வளர்ச்சி, மக்களின் அறியாமை காணமாக பெருங்கற்காலச் சான்றுகளாக விளங்கும் கல்வட்டம், கல்குவை ஆகியவை பல இடங்களில் மாயமாகி விட்டன.

இதுகுறித்து தொல்லியல் துறை கரூர் சேரர் அகழ்வைப்பகக் காப்பாட்சியர் சி.செல்வக்குமார் கூறுகையில், “கரூர் அருகேயுள்ள மண்மங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 40-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்பட்ட நிலையில் 4 வழிச்சாலை விரிவாக்கத்தாலும், கல்வட்டத்தில் உள்ள கற்கள் கிரைண்டர் குழவிக்காக எடுக்கப்பட்டதாலும் பல இடங்களில் கல்வட்டங்கள், கல்குவை மாயமாகிவிட்டன” என்றார்.

கரூர் மாவட்டத்தின் தொன்மையை விளக்கும் மரபுச்சின்னங்களாக விளங்கும் கல்வட்டம், கல்குவை உள்ளிட்ட சான்று களை சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பொதுமக்களால் ஏற்படும் அழிவுகளில் இருந்து பாதுகாத்து கரூரின் வரலாற்றை வருங்கால சந்ததியும் அறிந்திட வகை செய்யும் வகையில் அரசு உரிய நட வடிக்கை மேற்கொள்வது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

கருத்துப் பேழை

3 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்