சினிமா எடுத்துப் பார் 56: பன்முக நாயகன் விசு!

By எஸ்.பி.முத்துராமன்

நான் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படப்பிடிப் பின்போது அதில் நடித்த நடிகர் கள் எல்லாம் நாங்கள் படப்பிடிப்புக்காக பிடித்திருந்த வீட்டிலேயே தங்கியிருந்ததில் இயக்குநருக்கு என்ன சவுகர்யம் என்றால், ஒரு காட்சியை சீக்கிரம் முடித்துவிட்டால் அடுத்த காட்சியை எடுக்க அந்த நடிகர்களைக் கூப்பிட்டு எடுத்துவிடுவேன். அதுமட்டுமின்றி, நாங்கள் படம்பிடிக்கும் காட்சி களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நடிகர்கள், தாங்கள் நடிக்கும்போது நடிப்பை மெருகேற்றிக் கொள்வார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் மணி ஐயரின் மகன்கள் கே.வி.சீனிவாசன், சிவா இருவரும் இன்று சினிமாவில் தனித் தன்மையோடு செயல்பட்டு வருகிறார் கள். சீனிவாசன் தயாரிப்பு துறையில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து ஆலோசனைகள் கொடுப்பவராக உயர்ந்திருக்கிறார். மற்றொரு மகன் சிவா, சிறந்த ஒளிப் பதிவாளராக பயணிக்கிறார். இவர்கள் மணி ஐயரின் வாரிசாகவே உருவாகி இருக்கிறார்கள்.

‘குடும்பம் ஒரு கதம்பம்’ குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். 100 நாட்கள் ஓடியது. வெற்றி விழாவுக்கு தலைமை ஏற்ற அண்ணன் அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள், ‘‘ஏவி.எம் நிறுவனத்தின் ‘முரட்டுக்காளை’ மாதிரி பிரம்மாண்டமான படமும் எடுக்கிறார். இதுமாதிரி குறைந்த பட்ஜெட்டிலும் பட மும் எடுத்து வெற்றி பெற வைக்கிறார். இரண்டு விதமான படங்களையும் எடுக் கும் மனப் பக்குவத்தை பெற்றிருக் கிறார், இயக்குநர் முத்துராமன்’’ என்று என்னை வாழ்த்தினார்.

விசுவும், நானும் பாலச்சந்தர் தயாரித்த ‘நெற்றிக்கண்’ படத்தின் மூலம் இணைந்தோம். ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமாகி திரைப்பட நடிகராக பெயர் பெற்றார் விசு. இதைத் தொடர்ந்து பல படங்களில் திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் என்று புகழ் பெற்றார். நான் இயக்கிய ‘ஊருக்கு உபதேசம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மிஸ்டர் பாரத்’ உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கவும் செய்தார். எங்கள் குழுவில் அவரும் ஒருவர் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

இன்றைக்கு ‘குடும்பம் ஒரு கதம்பம்’ விசு என்ற பெயரோடு, ‘அரட்டை அரங்கம்’ விசு என்ற பெயரும் வந்துவிட்டது. சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சி வழியே விசு சார் மக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து 13 ஆண்டுகள் அந்த நிகழ்ச்சியை வழங் கியவர், இதையடுத்து ஜெயா டி.வி-யில் ‘மக்கள் அரங்கம்’ என்ற பெயரில் ஆறரை ஆண்டுகள் நடத்தியிருக்கிறார். ஒரு மனிதர் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் மக்களையும், மக்கள் சார்ந்தப் பிரச்சினை களையும் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது என்பது பெரிய வேலை. அதை ஈடுபாட்டோடு செய்தது, படைப் பாளி விசுவுக்கு சமூகத்தின் மேல் உள்ள அக்கறையையே வெளிப்படுத்தியது. சமீபத்தில்கூட, ‘கொஞ்சம் யோசிப்போம்’ என்ற பெயரில் ஒரு நாடகம் போட்டார். அது இன்றைக்கு நிலவும் சமூகம், அரசியல் பிரச்சினைகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட நாடகம். சுறுசுறுப்புக்குப் பெயர் போன விசுவால் சும்மாவே இருக்க முடியாது.

அவர் நடத்திய ‘அரட்டை அரங்கம்’ நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சேர்த்து படிக்கும் வாய்ப்பை பெற்று, இன்றைக்கு நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். விசுவின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா என்ற பெண்ணை, இன்றைக்கு தேசிய அளவில் கவனத்தை பெற்றிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அரட்டை அரங்கத் தில் கலந்துகொண்ட திருப்பூரைச் சேர்ந்த விசாலாட்சி என்ற பெண் இன்றைக்கு அந்த ஊரின் மேயராக இருக்கிறார்.

நாடகம், சினிமா என்று தனக்கென ஒரு கொடியை உயர்த்தி பிடித்திருக்கும் விசுவும், நானும் ஒரே குடும்பமாக பழகி வருகிறோம். விசுவின் மனைவி உமா. கணவனுக்குப் பின்னால் இருக்கிற மனைவி அல்ல; எந்நாளும் பக்கபலமாக பக்கத்தில் நிற்கும் பெண்மணி. அதற்கு நன்றி சொல்லும் விதமாகத்தான் விசு தன் படங்களில் நாயகி பெயரை உமா என்றே வைத்தார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா, கல்பனா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இந்த மகள்கள்தான் அவர்களுக்கு ‘மகன்’கள். அவர்களுக்கு வந்த மருமகன்களும் ‘மகன்’கள்தான். இப்படி அமைவதெல்லாம் ஒரு வரம்!

கடந்த 40 ஆண்டுகளாக கலாச் சாரம், கல்வி, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் ஈரோடு ராமலிங்கத்தின் ‘கவிதாலயம்’ அமைப்பினர் சமீபத்தில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து கவுரவித்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு விசு சார், ஒரு வாழ்த்து அனுப்பியிருந்தார். அதில், ‘எழுத்திலும், எண்ணத்திலும், செயலிலும் எனக்கு வழிகாட்டி எஸ்பி.எம். ஒரே காலகட்டத்தில் இன்றைய சூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் இரண்டு மடிகளில் சுமந்தவர். அதே காலத் தில் பல படங்களில் என்னை முதுகில் வைத்து சுமந்தவர். பர்பெக்ட் ஜென்டில் மேன். அவரை வாழ்த்தி வணங்குவோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏவி.எம் நிறுவனத்தின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் சிறந்த முறையில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதற் காக விசு அவர்களுக்கு பேசிய சம் பளத்தைவிட அதிகமாக பணம் கொடுத் தார், ஏவி.எம்.சரவணன் சார். மகிழ்ச்சி யோடு பெற்றுக்கொண்ட விசு, ‘‘ஏவி.எம் நிறுவனத்தில் ஒரு படம் இயக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்’’ என்றார். அதற்கு சரவணன் சார், ‘‘நீங்க இப்போது ஒரே நேரத்தில் மூணு, நாலு படங்கள் பண் றீங்க. நம்ம நிறுவனத்தோட படத்துல மட்டும் கவனம் செலுத்துற சூழல் அமையும்போது சொல்லுங்க’’ என்றார்.

அதேபோல அந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு விசு அவர்கள், சரவணன் சாரிடம், ‘‘இப்போது தயாராக இருக்கிறேன். கதையும் இருக்கிறது’’ என்றார். அந்தக் கதையை சரவணன் சார் கேட்டார்கள். அவருக்கு பிடித்து விட்டது.

‘‘இந்தக் கதையில் எல்லாம் இருக் கிறது. நகைச்சுவை மட்டும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்’’ என்று சரவணன் சார் சொல்ல, விசு சார் ‘‘இல்லை சார்... எல்லா காட்சிகளையும் எழுதி முடிச்சிட்டேன். இனிமே சேர்க் கிறது கஷ்டம்’’ என்றார். அதற்கு சரவணன் சார், ‘‘ஒரு வாரம் டைம் எடுத் துக்கோங்க. காமெடி டிராக்கை சேர்த் துட்டு வந்து சொல்லுங்க’’ என்றார்.

ஒரு வாரம் கழித்து விசு வந்தார். என்ன கொண்டு வந்தார்?

- இன்னும் படம் பார்ப்போம்...

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்