சி
று வயதிலேயே பெற்றோரை இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறார் பிரசன்னா. பள்ளியில் மற்றவர்களுடன் சகஜமாக பேசப் பிடிக்காமல் வெறுமனே சோகத்தோடு வருவதும் போவதுமாக அவரது பொழுதுகள் கடக்கின்றன. திடீரென ஒருநாள், சக மாணவனான கலையரசனின் தாய் இறந்துவிடுகிறார்.
அதுவரை யாரிடமும் பேசாமல் இருந்த பிரசன்னாவுக்கு, கலையரசன் மீது அனுதாபம் ஏற்படுகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகின்றனர். கால ஓட்டத்தில் கலையரசன் மீது சாய் தன்ஷிகாவும், பிரசன்னா மீது சிருஷ்டி டாங்கேவும் காதலில் விழுகின்றனர். அந்தக் காதலால் நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் என்ன? என்பதுதான் ‘காலக்கூத்து’.
காதல், வன்மம், குரோதம், இழப்பு ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் ‘மதுரை பிராண்ட்’ சினிமாதான் இதுவும். புதுமுக இயக்குநர் எம்.நாகராஜன் இயக்கியுள்ளார். கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, காதலை வளர்க்கும் முன்கதைக்கே முதல்பாதிப் படத்தை அர்ப்பணம் செய்துவிடுகிறார். பள்ளிப் பருவம், இளமைக் கால எதார்த்த வாழ்க்கை, காதல், எதிர்ப்பு என வழக்கமான சினிமா பார்முலாவில் திரைக்கதையை நகர்த்தியுள்ளார். மதுரை பின்னணிக் களத்தில், பகலில் காதல், இரவில் மது என பொறுமையாக நகர்கிறது படம்.
படத்தில் ஈர்ப்பான அம்சம், கலையரசன் – தன்ஷிகா இடையிலான உரையாடலில், பிரசன்னா – சிருஷ்டி இடையிலான சந்திப்புகளில் தொட்டுக்கொள்ளாமலே காதலை உணர்த்தமுடியும் என்பதை மிக நேர்மையாக சித்தரித்த விதம். இதற்காக இயக்குநரைப் பாராட்டலாம். அதேபோல, அனைத்து நடிகர்களுமே, முக்கியமாக தன்ஷிகா பேசும் மதுரை வட்டாரத் தமிழ் கன கச்சிதம்.
மிகக்குறைவான சம்பவங்களுடன், திரைக்கதையின் நுட்பங்கள் பெரிய அளவில் இல்லாத நிலையில், பிரசன்னா, கலையரசன், தன்ஷிகாவின் எதார்த்தமான நடிப்பே படத்தை தாங்கி நிறுத்துகிறது.
அதேநேரம், காட்சிகளை மெதுவாக நகர்த்தினால் எதார்த்தமான சித்தரிப்பாக அமைந்துவிடும் என்ற இயக்குநரின் தீர்மானம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது. ஏதோ ஒரு பெரிய சம்பவத்தை நிகழ்த்துவதற்காகவே இயக்குநர் இப்படி மென்மையான அணுகுமுறையைக் கையாள்கிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால், அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் எதுவும் முதல்பாதியில் நடக்கவே இல்லை. பிரசன்னா சம்பாதித்துக்கொள்ளும் ஒரு பகையும், தன்ஷிகாவின் அக்காள் கணவர் தொழில் போட்டியில் ஒருவரது கையை வெட்டுவதுமான இரு சிறு சம்பவங்கள் நடக்கின்றன. அதற்குப் பிறகுகூட விறுவிறுப்பை ஏற்ற தவறிவிடுகிறார் இயக்குநர்.
பிரசன்னா - சிருஷ்டி டாங்கே காதல் பின்னணி அளவுக்கு, கலையரசன் - தன்ஷிகா காதல் காட்சிகள் காட்டப்பட வில்லை.
படத்தின் பெரும்பகுதி இந்த இரு காதல் ஜோடிகள் மீதே பயணிக்கிறது. ஆனால், அதில் பெரிதாக திருப்பங்களோ, சுவாரசியமோ இல்லாததால் சீரியல் பாணியில் கதை நகர்கிறது. கலையரசன் - பிரசன்னா நண்பர்களாக மாறுவது, பிரசன்னாவை தன் மகன் என கலையரசனின் தந்தை அரவணைத்துக்கொள்வது போன்ற இடங்களை கவனமாக கையாண்டிருக் றகலாம்.
படத்தின் முடிவில் மனிதர்களின் ஆணவம் பற்றி வாய்ஸ் ஓவரில் வகுப்பெடுக்கிறார் இயக்குநர். ஆனால், தன்ஷிகா குடும்பத்தின் கோபம், சாதிய ரீதியான ஆணவம்தானா என்பதை தெளிவுபடுத்த படம் தவறிவிடுகிறது. அதனால், இது ஆணவக்கொலைக்கு எதிரான படமாகவும் இல்லாமல், இடைப்பட்ட நிலையில் தள்ளாடி நிற்கிறது.
சமூகத்தில் இப்போதும் காதலுக்கு இருக்கும் எதிர்ப்பு, பொறுப்பின்றி ஊர் சுற்றும் இளைஞர்கள் என நடைமுறை எதார்த்தத்தை நன்கு பதிவு செய்ய முயற்சித்த இயக்குநர், அதோடு கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் அழுத்தம் சேர்த்திருக்கலாம். அதை தவறவிட்டதால் இந்தக் காலக்கட்டத்தோடு ஒட்டாமல் நகர்கிறது ‘காலக்கூத்து’.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
12 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
சுற்றுலா
5 hours ago
கல்வி
5 hours ago