ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டுமா?

By கு.செந்தில்குமார்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப் படுகின்றன. மூன்று நிலைகளாக முதன்மைத் தேர்வும்,பிரதான தேர்வும் நேர்காணலும் நடத்தப் பட்டுப் போட்டியாளர்களின் திறன் பரிசோதிக்கப்படுகிறது. அவரவர் களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என 23 பிரிவுகளில் பணிகள் வழங்கப் படுகின்றன.

மத்திய அரசின் யு.பி.எஸ்.சி- நிறுவனத்தால் நடத்தப் படுகிற ஐ.ஏ,எஸ், ஐ.பி.எஸ் தேர்வும் தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி நிறுவனத்தால் நடத்தப்படுகிற குரூப் தேர்வுகளும் பொது அறிவையும், மூளைத் திறன் சார்ந்த கேள்விகளைத்தான் அதிகம் உள்ளடக்கி இருக்கின்றன. உலகத்தின் பல்வேறுபட்ட நிகழ்வுகளையும், நிகழ்ந்தவற்றையும் நீங்கள் எவ்வளவு தூரம் புரிந்து வைத்துள்ளீர்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே பொது அறிவு கேள்விகள் கேட்கப்படுகின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உங்கள் பணியில் நீங்கள் எவ்வளவு வேகமாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுகிறீர்கள் என்பதைச் சோதிப்பதற்காகவே லாஜிக் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.

அதிகாலை நேரம்

பொது மூளைத் திறன் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கென்று தனியாகப் புத்தகங் களும்,கடந்த தேர்வுகளின் கேள்வி- பதில்களோடு நிறையவே கிடைக்கின்றன. இணையதளங்களிலும் இது சம்பந்தப்பட்ட கேள்வி-பதில்கள் அதிகம் காணப்படுகின்றன. லாஜிக் கேள்விகளைச் சாதாரணமாக எடை போடுவது தவறு. தினமும் இதற்கென்று நேரம் ஒதுக்கிப் பயிற்சி செய்வது அவசியம்.ஒவ்வொரு விதமான கேள்விகளையும் விடாமல் பயிற்சி செய்து பார்க்கவும். அதிகாலை நேரம் மூளைத் திறன் கேள்விகளுக்குப் பயிற்சி செய்வதற்கு உகந்த நேரம். ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணி நேரம் இதற்கென்று செலவிடுவது அவசியமாகிறது.

பொது அறிவுக்கென்று புத்தகங்கள் நிறையவே கிடைக்கின்றன. அறிவியல், உலக வரலாறு, புவியியல், இந்திய வரலாறு,பொருளாதாரம், சமூக அவலங்கள், இந்திய அரசியல்,தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், சூழலியல் போன்றவை இதில் அடக்கம். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய அடிப்படைத் தகவல்களும், கோட்பாடுகளும் என்.சி.இ.ஆர்.டி (NCERT) புத்தகங்களில் பொதிந்திருக்கின்றன. இந்த வகை புத்தகங்கள் அனைத்துமே இணையத் தளத்திலிருந்து இலவசமாக எடுத்துப் பயன்படுத்தலாம்.

ஐந்து மணிநேர உழைப்பு

பொது அறிவுப் பாடங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்துக்கும் அரை மணிநேரம் ஒதுக்கிக் குறிப்பெடுத்துப் படிப்பது அவசியம். மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பாடங்களுக்கும் அரை மணிநேரம் என்ற விதத்தில் கணக்கிட்டால் ஐந்து மணிநேர உழைப்பு அவசியம். இந்த ஐந்து மணி நேரத்தைச் சிறிது சிறிதாக உயர்த்துகிற பட்சத்தில் தேர்வில் வெற்றியை அடைவதற்கான தூரம் குறைவாகி இலக்கை நோக்கிய நம் நம்பிக்கை உயரும்.

எடுத்து முடித்த குறிப்புகளை எப்போதும் உங்களுடனே வைத்திருங்கள். கல்லூரியில் எப்போது நேரம் கிடைத்தாலும் திரும்பத் திரும்ப அந்தக் குறிப்புகளை வாசித்தால் பச்சை மரத்தில் ஆணி அடித்ததுபோல மனதில் பதியும். ஒவ்வொரு கருத்தும் நிகழ்வும் படிக்கிறபோது அது சம்பந்தப்பட்ட அறிவு, விரிவடைவதை உணருங்கள்.

ஒவ்வொரு நாளும் 250-லிருந்து 300 புறநிலைக் கேள்விகள் (objective questions) படிப்பது, பயிற்சி ஆக்குவது நன்று. அதுபோல ஒவ்வொரு கேள்வி-பதிலுடன் நீங்கள் செலவிடுகிற நேரத்தைப் பொருத்து அது உங்கள் நினைவில் தங்குகிறது. புறநிலைக் கேள்விகள் படிப்பது சாயங்கால நேரத்தில் இருக்கட்டும். மனம் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் பாடங்களை விரிவாகப் படித்துக் குறிப்பு எடுப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கேள்வி-பதில் படிக்கிறபோதும் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிற நேரமாக நினைத்து மகிழ்ச்சியுடன் படித்துப் பழகவும்.

காக்கும் டைரி

பயிற்சிக் காலத்தில் மிக முக்கியமான கடமை டைரி எழுதுவது. ஒவ்வொரு நாளும் எந்தெந்தப் பாடத்தை எந்த நேரத்தில் படிக்கப் போகிறீர்கள் என்பதைக் காலையில் எழுந்தவுடன் டைரியில் எழுதிவிடவும். அதன்படியே,பயிற்சியை முடித்த பிறகு தினமும் உறங்கப் போகுமுன் அன்று டைரியில் என்னென்ன வேலைகளைச் செயலாற்றி இருக்கிறீர்கள் என்பதை டிக் செய்யவும். டைரியை தினமும் விடாமல் எழுதும் பட்சத்தில் இலக்கை நோக்கிய பாதையில் நாம் எங்கிருக்கிறோம், இன்னும் எவ்வளவு தூரம் கடக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியவரும்.போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு இந்தப் பழக்கம் மிக அவசியம். கல்லூரிக் காலங்களில் மேற்கூறிய நேர அட்டவணையைத் தகுந்தாற்போல மாற்றிக்கொள்ளவும்.

செய்தித்தாள்களிலிருந்து அன்றாட நிகழ்வுகளைக் குறிப்பெடுத்துப் பதிவு செய்வது தினசரிக் கடமைகளில் ஒன்று. எந்த நாளிதழ் வரலாற்றின் பின்னணியில் ஆய்வு செய்து செய்திகளைத் தருகிறதோ அந்தப் பத்திரிக்கை போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயன்படும்.தேசிய நிகழ்வுகளுக்கும், பன்னாட்டு நிகழ்வுகளுக்கும் தனித் தனியே நோட்டுகளை வைத்துக் குறிப்பு எடுக்கவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்புகளைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

15 அடுக்குக் கேள்விகள்

எந்த ஒரு நிகழ்வையோ அல்லது கருத்தையோ படிக்குமுன் அது சார்ந்த கேள்விகளை நிறைய எழுப்பி எழுதிக் கொள்ளவும். உதாரணத்துக்கு சுற்றுச் சூழல் மாசுபடுதல்; ஓசோன் மண்டலம் பாழாதல்; பூவி வெப்பமடைதல்; பனிப்பாறைகள் உருகுதல்; கடல்நீர் மட்டம் உயருதல்; மக்களுக்கு ஆபத்து ஏற்படல்.இதுபோல ஒவ்வொரு கருத்தையும் “ஏன்” என்ற கேள்விகளை எழுப்பிப் படிப்பதற்குச் சாக்ரடியன் மாடல் (அ)டியாலேக்டிக்(Dialectic) முறைமை என்று பெயர்.

இது சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் பிறகு படிக்கும்போது சிறிது சிறிதாகப் பதில்கள் கிடைத்துத் தெளிவு பிறக்கும். பயிற்சி காலக் கட்டத்தில் மன இயல்பை எப்போதும் படித்ததைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டும்,தொடர்புபடுத்திக்கொண்டும் இருப்பது நல்லது. உதாரணத்துக்கு ஒளி விளக்கைப் பார்க்கிறீர்கள்; உடனே இதைக் கண்டுபிடித்தது யார், எப்படி, எப்போது, எங்கே, அதன் பயன்கள் என்று மனதை ஒருமுகப்படுத்திப் பயிற்சிக்கு உள்ளாக்குகிறபோது ஒவ்வொரு நாளும் நம்பிக்கை பெருகும்.

பொது அறிவு வினாக்களைப் பொருத்தவரை ஒரு நிகழ்வு அல்லது கருத்தைப் பற்றி 10-லிருந்து 15 அடுக்குத் தகவல்களைக் குறிப்பெடுப்பது அவசியமும் போதுமானதுமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாகக் காந்தியைப் பற்றி படிக்கின்றீர்கள். காந்தி தென்னாப்பிரிக் காவிலிருந்து திரும்பிய ஆண்டு; இந்தியத் தேசிய காங்கிரஸில் அவரது பங்கு; மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்; மதப் பிரதிநிதித்துவம்; ஜாலியன் வாலாபாக் படுகொலை; ஒத்துழையாமை இயக்கம்; சட்ட மறுப்பு இயக்கம்; வட்ட மேஜை மாநாடுகள்; காந்தி-இர்வின் ஒப்பந்தம்; உப்பு சத்தியாகிரகம்; வெள்ளையனே வெளியேறு இயக்கம்; கிரிப்ஸ் மிஷன்; நேரு-காந்தி; பட்டேல்-காந்தி, அம்பேத்கர்-காந்தி; நடப்பு உலகில் காந்தியம், என்று படிக்கின்ற அத்தனை விஷயத்துக்கும் 15- அடுக்கு தகவல் சேகரிப்பும் குறிப்பெடுத்தலும் உங்கள் வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

இந்த நிமிடத்தில் நம் இலக்கினை நோக்கி நாம் என்ன செயலாற்றிக்கொண்டிருக்கிறோம் என்ற விழிப்புணர்வும்,ஆத்ம ரீதியான உழைப்புமே நம்மை இவ்வகையான தேர்வுகளில் வெற்றிபெறச் செய்யும்.

கட்டுரையாளர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: senhari@rediffmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

30 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

56 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

54 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்