பயமில்லை ஜெயமுண்டு

By டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பெரும்பாலான மனிதர்களின் தோல்விக்கோ வெற்றிபெற முடியாததற்கோ காரணம் அவர்களின் பயம் என்கிறார் அமெரிக்க உளவியலாளர் சூசன் ஜெப்பர்.

பயம் என்பது ஒருவரது ஆற்றலையும் சக்தியையும் குறைக்கும் சக்தி படைத்தது. பயந்தவர்கள் நிதானமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுவார்கள்.

பயத்துக்கான காரணம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. பல்லி முதல் பாம்பு வரை, இருட்டு முதல் உயரம் வரை, வெற்றி முதல் தோல்வி வரை, தெரியாதவை முதல் புரியாதவை வரை என பல வேறு காரணங்கள். சிலருக்கு சாதாரணமாய் தோன்றும் விஷயங்கள் மற்றொருவருக்கு பயத்தை ஏற்படுத்தும் சாகசமாய் தோன்றும்.

பயத்துக்கான அளவுகோலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பயத்தின் அளவைப்பொறுத்து அதன் வெளிப்பாடும் விளைவுகளும் வேறுபடுகின்றன. இதுவே பலவிதமான உளவியல் பிரச்சனைகளுக்கும் உடல் நலக்குறைவுக்கும் கூட வித்தாகிறது.

ஒருவரின் மன அமைதியையோ, அவரைச் சார்ந்தவர்களை பாதிக்கும் வகையிலோ, அல்லது கல்வி மற்றும் வேலையில் அவரது வளர்ச்சியை பாதிக்கும் வகையிலோ பயம் இருந்தால் கண்டிப்பாக அதற்கான தீர்வைக்காண வேண்டியது முக்கியம்.

பயத்தின் அளவு, காரணம் மற்றும் விளைவுகளை பொருத்து அதைக் கையாள மேற்கொள்ளும் முறைகளும் வேறுபடுகின்றன. சில நேரங்களில் இத்தகைய நபர்களின் பயத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கையாள, மருத்துவ மனோதத்துவ மற்றும் வாழ்வியல் மாற்ற நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்படுகிறது.

கையாளும் முறைகள்

பயம் ஏற்படும்போது அதனுடன் போராடுவதோ, பயத்தைப் போக்க முற்படுவதோ பலனைத் தராது. மாறாக முதலில் உடலையும், மனதையும் அமைதியான சகஜ நிலைக்கு கொண்டுவர வேண்டும். ஒரு டீயைக் குடிப்பதோ, வெளியில் தூய்மையான காற்றில் கொஞ்ச தூரம் நடப்பதோ, அல்லது மிதமான வெந்நீரில் குளிப்பதோ என தன்னால் முடிந்ததை செய்யலாம்.

சுவாசப்பயிற்சி மனதையும் உடலையும் நிலைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும்பங்கு வகிக்கிறது. சுவாசப் பயிற்சியின் போது நிதானமாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அதைவிட நிதானமாகவும் நீண்ட நேரத்திலும் மூச்சை வெளியே விட வேண்டும். இதைத்தொடர்ந்து செய்யும் போது உடலும் மனமும் நம் வசப்படும்.

உடலும் உள்ளமும் அமைதியான பிறகு தனது பயத்துக்கான காரணத்தை தெளிவாக ஆராயலாம்.

புதியவைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளில் ( புதிய வேலை, புதிய மனிதர்கள், பணி மாற்றம், இடம் மாற்றம்) அவற்றைப்பற்றிய விவரங்களை முன்கூட்டியே திரட்டி ஓரளவுக்கு தயாராக இருப்பது பலனைத் தரும்.

தனது பயம் தோல்வியைப் பற்றியோ, மற்றவர்கள் முன்பு தனது செயலோ பேச்சோ அடையப்போகும் மோசமான விமர்சனம் பற்றியோ இருந்தால், அத்தகைய தோல்வி மற்றும் மோசமான விமர்சனத்தால் ஏற்படப்போகும் மிக மோசமான பின் விளைவுகளைக் கற்பனை செய்து பார்க்கலாம். அத்தகைய சூழ்நிலைகள் வாழ்வின் முடிவல்ல. மேலும் நல்ல சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றன என்ற தெளிவு ஏற்படும். அத்தகைய தெளிவு முன்கூட்டியே வரும் பயத்தையும் தெளிவிக்கும்.

எதற்கு பயப்பட வேண்டும், என்னதான் நடந்துவிடும் என்று பார்த்துவிடலாம் என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பயம் என்பது கோழைத்தனம். குழம்பிய மனநிலையில் உள்ளவர்களையே பயம் தாக்கும். எனவே தைரியத்தையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பயம் ஏற்படும்போது, தனக்கு நல்லதே நடக்கும், எந்த துன்பமும் வராது, நடப்பவை எல்லாம் நல்லதுக்கே போன்ற ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் பயம் நாளடைவில் தானாய் மறைந்து விடும்.

எந்த விஷயத்துக்காக பயம் ஏற்படுகிறதோ அதை அடிக்கடி எதிர்கொள்வதும் பயத்தை தணிக்கும். தனிமையில் இருப்பது, உயரத்தில் இருப்பது பயம் என்றால் தானாகவே முன்வந்து, தன்னை தயார்படுத்திக்கொண்டு அத்தகைய சூழ்நிலைகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டும்.

பயம் ஏற்படும் நேரங்களில் தனக்குப் பிடித்த விஷயங்களைக் கண் முன் கற்பனை செய்து பார்க்கலாம். தனது மனதை சந்தோஷப்படுத்தும் நிகழ்வையோ, கடவுள் படத்தையோ, அழகான காட்சியையோ கண் முன் பார்க்கும்போது பயத்துக்கான காரணம் தானே அகன்று விடும்.

உலகின் தலைசிறந்த மனிதர்களுக்கு பயம் இருந்ததில்லை என்பதை அடிக்கடி நினைத்துப்பார்க்க வேண்டும்.

நம்முள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை அகற்றிவிட்டால் பயமும் அகன்றுவிடும் என்ற உண்மை புரிய வேண்டும்.

பயம் என்பது முடிவை நோக்கிய பயணம். வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் பயத்துக்கு இடமில்லை.

தொடர்புக்கு: sriramva@goripe.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்