தமிழக பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அரசு கொண்டுவர உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள் தலைமையில் விரைவில் கமிட்டிகள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

புவியியல் மாநாடு

இந்திய தேசிய புவியியலாளர் கள் சங்கத்தின் 35-வது தேசிய புவியியல் மாநாடு சென்னையில் 12-ம் தேதி தொடங்கியது. சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை இதனை நடத்தியது.சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

தேசிய புவியியலாளர்கள் சங்கத் தலைவர் எச்.என்.மிஸ்ரா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலர் பேராசிரியர் கரு.நாகராஜன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமத்துவ பங்கீடு

இன்றைய தினம் வறுமை ஒழிப்பு குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. நீடித்த நிலையான வளர்ச்சியால் மட்டுமே இதை அடைய முடியும். பூமியில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.

நிலம், நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பகிர்ந்துகொள்வதில் மாநிலங்கள் இடையே பிரச்சினைகள் எழுகின்றன. அதோடு சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் உருவாகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம்.

மழைநீர் சேகரிப்பு

முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. அவரது 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 65 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. சென்னை பல்கலைக்கழகமும் இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.

மரபுசாரா எரிசக்தி வளத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சூரியமின்சக்தி திட்டத்தை அறிவித்தது. பசுமை வீடுகள் அமைக்க மானிய உதவியும் அளித்து வருகிறது. தமிழகத்தில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான செயல்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு 2023 தொலைநோக்குத் திட்டத்தை முதல்வர் வெளியிட்டார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மரக்கன்றுகளை நட வேண்டும். வருங்கால தலைமுறையினருக்கு இயற்கை வளங்களை விட்டுச்செல்ல சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்றார் கரு.நாகராஜன்

முன்னதாக, தேசிய புவியியலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சி.ராய்க்கு பேராசிரியர் ஹேமாமாலினி சிறந்த புவியியலாளர் விருது வழங்கப்பட்டது.

ஒரே பாடத்திட்டம்

மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் கரு.நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் உள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் ஆகியோர் தலைமையில் விரைவில் தனித்தனி கமிட்டிகள் அமைக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்