மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் தேசிய அளவில் வெளியிடப்பட்ட கல்வி நிலையங்களுக்கான தரப்பட்டியலில் இந்த ஆண்டும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. இந்த ‘டாப் 100 பட்டிய’லில் தமிழகத்தைச் சேர்ந்த பல உயர்கல்வி நிலையங்கள் இடம்பிடித்துள்ளன. பொறியியல் கல்வியில் சென்னை ஐ.ஐ.டி., பெங்களூருவைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிலையத்தை அடுத்த நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
முன்னணியில் அரசுக் கல்லூரிகள்
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் வரும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ரேங்கிங் ஃபிரேம் ஒர்க்’ வெளியிட்டுள்ள 100 கலை, அறிவியல் கல்லூரிகளில் 38 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. தேசிய அளவிலான தரப்பட்டியல் ஒன்றில் ஆச்சரியகரமான சேர்க்கையாக சென்னை மாநிலக் கல்லூரி, ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய அளவில் வெளியிடப்பட்டுள்ள சிறந்த 75 கலை, அறிவியல் கல்லூரிப் பட்டியலில் கோவை அரசுக் கலைக் கல்லூரி, மதுரையைச் சேர்ந்த ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, திருப்பூரைச் சேர்ந்த அரசு கலைக் கல்லூரி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
லயோலா கல்லூரி ஆறாவது இடத்திலும், பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி 22-வது இடத்திலும், ஸ்டெல்லா மேரி கல்லூரி 30-வது இடத்திலும் உள்ளன. திருச்சியைச் சேர்ந்த பிஷப் ஹூபர் கல்லூரி, இந்தியாவின் மூன்றாவது சிறந்த கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியிலுள்ள ஐ.ஐ.எம்., மேலாண்மைக் கல்வியில் கடந்த ஆண்டு இருந்த 13-வது இடத்திலிருந்து 15-ம் இடத்துக்குச் சரிந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தனியார் உயர்கல்வி நிலையங்களும் இந்தத் தரப்பட்டியலில் முன்னணியில் இடம்பிடித்துள்ளன. வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நிர்வாகக் கல்வியில் 17-வது இடத்தைப் பெற்றுள்ளது. பார்மசி படிப்பில் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி 9-வது இடத்திலும், ஜே.எஸ்.எஸ். காலேஜ் ஆப் பார்மசி 17-வது இடத்திலும் உள்ளன. பொறியியல் கல்வியில் வி.ஐ.டி.
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 13-வது இடத்தைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் 16-வது இடத்தில் உள்ளது.
பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், மேலாண்மைக் கல்வி சார்ந்தது துறைகளில் தமிழகக் கல்லூரிகள் முன்னணியில் இருந்தாலும் சட்டக்கல்லூரிகள் எதுவும் தரப்பட்டியலில் இடம்பெறவில்லை.
கற்பித்தல், கற்றுக்கொள்ளல், வளங்கள், ஆண்-பெண் விகிதம், ஆய்வு மற்றும் தொழில்சார் பயிற்சி, தேர்ச்சி ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் கல்வி நிலையங்களே இணையம் வழியாகப் பதிவுசெய்து பங்கேற்கும் வகையில் என்.ஐ.ஆர்.எப் தேர்வுப் பட்டியல் உள்ளது. இந்தியா முழுக்க உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள், கல்வி நிலையங்களில் 3 ஆயிரத்து 954 நிலையங்கள்தான் இத்தேர்வுப் பட்டியலில் பங்குபெற்றுள்ளன. தென்கிழக்கு, மேற்கு மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களின் நிலையை இந்தத் தரப்பட்டியல் பிரதிபலிக்கவேயில்லை.
என்.ஆர்.ஐ.எப். போன்ற அரசு சார்ந்த அமைப்புகள் வெளியிடும் தரப்பட்டியல்கள், இந்தியாவில் எந்த மூலையில் இருக்கும் மாணவருக்கும் கல்வி, உயர்கல்வி, ஆய்வுகள் சார்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு அவசியமானவை. ஆனால், அந்த நோக்கத்தை மேற்கண்ட தரவரிசை பிரதிபலித்து இருக்கிறதா என்பது கேள்விக்கு உரியதாக இருக்கிறது.
சரிதானா என்று பார்ப்பதில்லையே!
கல்வி நிறுவனங்களின் படிநிலையை நிர்ணயிக்கும் இந்த முறையே சந்தேகத்துக்கு இடமானது. இந்த மதிப்பீட்டுக்குத் தம்மை உட்படுத்திக்கொள்வது முழுக்கவும் கல்வி நிறுவனங்களின் விருப்புரிமையே. கட்டாயம் எதுவுமில்லை. தரமான கல்வி நிறுவனங்கள் சில பங்கெடுக்காமலும் போயிருக்கலாம். கேள்வித் தொகுப்பு ஒன்றுக்கு பதில்கள் சொல்லி, அவற்றுக்கான சான்றுகளை இந்தக் கல்வி நிறுவனங்கள் அனுப்பும். அந்த மைய அமைப்பு ஐந்து தலைப்புகளின் கீழ் அவற்றுக்கு மதிப்பெண் வழங்கிப் படிநிலையைத் தீர்மானிக்கிறது. அது நேரிடையாக அந்தக் கல்வி நிறுவனங்களுக்குப் போய் தகவல்கள் சரிதானா என்று பரிசோதித்துப் பார்ப்பதில்லை. நடைமுறையில் அது சாத்தியமும் அல்ல.
கல்வி நிறுவனங்கள் தம்முடைய சில நேர்மறை அம்சங்களை மிகைப்படுத்தியும் சொல்லலாம். சில பாதக அம்சங்களை மறைக்கவும் செய்யலாம். தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் தேசிய அளவிலான 2018 மதிப்பீட்டில் முதல் நூறில் பல இடங்களைப் பெற்றிருந்தாலும் இதில் பெரிதாகப் பெருமைப்பட எதுவுமில்லை. சில கல்லூரிகளின் ஓரிரு துறைகள் சிறந்தவையாக இருக்கும். அதை வைத்தே கல்லூரியே சிறந்தது என்று சொல்லிவிட முடியாது.
- ஆர். சிவகுமார், முன்னாள் இணைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை
கல்வித் தன்மை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்
அகில இந்திய அளவிலான என்.ஆர்.ஐ.எப். தரவரிசைப் பட்டியலில் தமிழகக் கல்லூரிகள் கணிசமான அளவில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியானது. ஆனால், தர மதிப்பீடு என்பது கல்லூரிகள், அதுவும் இணையம் மூலமான தரவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைவதாக உள்ளது. அத்தரவுகளில்கூட அதிக மாணவர் சேர்க்கை, ஆசிரியர் எண்ணிக்கை, வரவு, செலவுக் கணக்கு என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு மாநிலமும் அதற்கெனத் தனிப்பட்ட சில வசதிகளையும் வரம்புகளையும் கொண்டிருக்கும். அங்கு உள்ள மக்கள்தொகையும் வேறுபடும். கல்வியின் தன்மையும் மாறுபடும். இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுவதில்லை. தரவரிசையை ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடுவதும் சரியானதாக இருக்காது. மேலும், ஒரே மாதிரியான அளவுகோலை நாடு முழுவதற்கும் பயன்படுத்துவது சரியல்ல.
வேண்டுமானால் மாநில அளவிலான தர வரிசைப் பட்டியலை வெளியிடலாம். மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்வதுதான் இதில் முக்கிய அம்சமாகும். பிற எண்ணிக்கைகள் இரண்டாம் பட்சம்தான். ஏற்கெனவே உள்ள தேசிய தர மதிப்பீடு, தர நிர்ணயக் குழுவின் ஐந்தாண்டு தர மதிப்பீடே மிகவும் விமர்சனத்துக்குள்ளாகிறது. இதில், ஆண்டுக்கு ஒரு முறை தரப்பட்டியல் வெளியிடுவது உண்மையான தரத்தைக் காட்டாது.
- பேராசிரியர் முரளி, மூட்டா இணைப் பொதுச் செயலாளர், மதுரை.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
9 mins ago
கல்வி
4 mins ago
இந்தியா
32 mins ago
கருத்துப் பேழை
42 mins ago
தமிழகம்
19 mins ago
தொழில்நுட்பம்
25 mins ago
கருத்துப் பேழை
48 mins ago
கருத்துப் பேழை
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago