உலகளவில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பல சாதனைகளைப் படைத்துள்ள கோலி, சில நேரங்களில் வேண்டாத சாதனைகளுக்கும் சொந்தக்காரராகிவிடுகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சதம் ஏதும் அடிக்கவில்லை. கடைசியாக கொல்கத்தாவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான பலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். வங்கதேசம் போன்ற டெஸ்ட் அனுபவம் போதுமான அளவு இல்லாத சொத்தை அணிக்கு எதிராக அடித்த சதத்தை எல்லாம் கணக்கில் கொள்ள முடியாது.
திரைப்படத்தில் நடிகர் வடிவேலு சொல்வதைப் போல், " புள்ளப்பூச்சியைப் போய்அடிச்சிருக்கிங்களே" என்று கூறுவார் அதுபோல் வங்கதேசத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து துவைத்து எடுத்ததை என்னவென்று சொல்வது.
ஆனால் அதற்கு முன்பாக, 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரில் கோலி சதம் அடித்ததுதான் சிறந்து. அதன்பின் சதம் அடிக்காமல் காலத்தை நகர்த்திவருகிறார்.
அதிலும்இங்கிலாந்து பயணம் என்றாலே கோலிக்கு இயல்பாகவே கிலி ஏற்பட்டு விடுகிறது.கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத காயங்களை ஏற்படுத்திய நிலையில் 2018-ம் ஆண்டு கோலி இரு சதங்கள் உள்ளிட்ட 593 ரன்கள் சேர்த்து கசப்பான நினைவுகளுக்கும், ரணத்துக்கும் மருந்து தேடிக்கொண்டார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தற்போது நடந்து வரும் நிலையில் மீண்டும் கோலி, ஆன்டர்ஸன் போர், கோலியும் டக்அவுட்டும் காம்பினேஷன் களைகட்டியுள்ளது
நாட்டிங்ஹாமில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலியை முதல் பந்திலேயே சாய்த்து வெளியே அனுப்பினார் ஆன்டர்ஸன். கோலியின் பேட்டிங் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 2014ம் ஆண்டு வரலாறு திரும்புதோ என்ற கேள்வி எழுந்தது.
இதுவரை விராட் கோலி கேப்டனாக இருந்து 9 வது முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் டக்அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்துஅதிகமாக டக்அவுட் ஆனவர் என்ற பட்டத்தை தோனியிடம் இருந்து கோலிபறித்துக்கொண்டார்.
இதற்கு முன் எம்எஸ் தோனி கேப்டனாக இருந்து 8முறை டக்அவுட்ஆகிய நிலையில் கோலி 9முறை டக்அவுட்டாகியுள்ளார்.
ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி டக்அவுட்டில் ஆட்டமிழப்பது இது 13-வது முறையாகும், அதிலும் கோல்டன் டக்அவுட்ஆவது இது 5-வது முறையாகும்.
கடந்த 2018-ம் ஆண்டு பயணத்தின்போது ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் கோலி டக்அவுட்டாகினார், அதன்பின் 3 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்தில் தான் சந்தித்த முதல்பந்தில் டக்அவுட்டாகியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் பந்துவீச்சில் கோலி டக்அவுட் ஆவது இது 6-வது முறையாகும். கடந்த 2014ம் ஆண்டுபயணத்தின் போது தொடர்ந்து கோலியை தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்கச்செய்து வெறுப்பேற்றினார்.
2018-ம் ஆண்டு 5 டெஸ்ட் போட்டித் தொடரில் கோலியை ஒருமுறைகூட ஆன்டர்ஸனால் ஆட்டமிழக்கச் செய்யமுடியவில்லை, அந்தத் தொடரில் கோலி 593 ரன்கள் விளாசினார்.
அதிலும் ஆன்டர்ஸன் வீசிய 270 பந்துகளைச் சந்தித்த கோலி 114 ரன்களைச் சேர்த்தார்.அதுவே, 2014ம் ஆண்டு பயணத்தின் போது, ஆன்டர்ஸன் வீசிய 50 பந்துகளைச் சந்தித்த கோலி, வெறும் 19 ரன்களை மட்டுமே சேர்த்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
2014 முதல்2021ம் ஆண்டு வரை இங்கிலாந்து பயணத்தில் விராட் கோலி மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 727 ரன்கள் சேர்த்துள்ளார்.இதில் 2014ம் ஆண்டில் 5 டெஸ்ட்களில் விளையாடிய கோலி 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மீதமுள்ள 593 ரன்கள் 2018ம் ஆண்டு பயணத்தில் சேர்க்கப்பட்டவை.
இதில் இரு சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும். இரு சதங்களில் ஒரு சதம் நாட்டிங்ஹாமிலும், ஒரு சதம் பிர்மிங்ஹாமிலும் அடிக்கப்பட்டவை. அதிகபட்சமாக 149 ரன்கள் சேர்த்துள்ளார் விராட் கோலி. இவை அனைத்துமே 20218ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டவையாகும்.
இங்கிலாந்தில் இதுவரை 22 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி, 16 முறை கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார், ஒருமுறை போல்டாகியுள்ளார்,5 முறை கால்காப்பில் வாங்கி வெளியேறியுள்ளார்.
மீண்டும் ஆன்டர்ஸன்- கோலி இடையிலான பனிப்போர் தொடங்கிவிட்டது, கோலியின் வேண்டாத சாதனையும் தொடங்கிவிட்டதா அல்லது அதற்கு அடுத்த இன்னிங்ஸில் முற்றுப்புள்ளி வைப்பாரா என்பது தெரிந்துவிடும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
சினிமா
26 mins ago
வாழ்வியல்
58 mins ago
உலகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago