‘படம் காட்டும்’ படேல், மிரட்டல் அஸ்வின்: இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து திணறல்

By க.போத்திராஜ்


அஸ்வின், அக்ஸர் படேல், இசாந்த் சர்மா ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அகமதாபாத்தில் நடந்துவரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை தடுமாறி வருகிறது.

இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது. பென் ஃபோக்ஸ் 3 ரன்னிலும், பிராட் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பும்ரா, இசாந்த், அஸ்வின், அக்ஸர்படேல் 4 பேரும் இங்கிலாந்து அணிக்கு படம் காட்டி நெருக்கடி தரும் விதத்தில் துல்லியமாகவே பந்துவீசினர். பும்ரா, அஸ்வின், அக்ஸர் மூவரும் லைன் லென்த்தை விட்டு பந்தை நகற்றாமல் பந்துவீசினர்.

இசாந்த் சர்மா 3-வது ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தார். ஆடுகளத்தில் பந்து நன்றாக சுழல்வதால், சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது.

அக்ஸர் படேலும், அஸ்வினும் வழக்கம்போல் தங்கள் மாயஜாலப் பந்துவீச்சை வெளிப்படுத்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றனர். தேநீர் இடைவேளைக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. தேநீர் இடைவேளை முடிந்தபின் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் தரும்வகையில் கிரேலே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். மற்றவகையில் கேப்டன் ரூட், பேர்ஸ்டோ ஏமாற்றம் அளித்தனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டி20, ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் சென்னையில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இதனால் இன்று தொடங்கும் 3-வது டெஸ்ட போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாதம் நடைபெறஉள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் மோதும் அணி இந்தியாவா, இங்கிலாந்து அணியா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி தேவை என்பதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகமது சிராஜுக்கு பதிலாக பும்ராவும், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் அணிக்குள் வந்துள்ளனர்.

இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ, லாரன்ஸ், ஸ்டோன், மொயின் அலி ஆகியோருக்கு பதிலாக, ஆன்டர்ஸன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, கிராலே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். கபில்தேவுக்கு அடுத்தார்போல் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 2-வது வேகப்பந்துவீச்சாளர் எனும் பெருமையை இசாந்த் சர்மா பெற்றார்.

தொடக்கமே அதிர்ச்சி

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கிராலே,சிப்ளே ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கி இசாந்த் சர்மா வீசிய 3-வது ஓவரில் ஸ்லிப் திசையில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து சிப்ளே டக்அவுட்டில் வெளியேறினார்.2 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இங்கிலாந்து அணி இழந்தது.

அடுத்துவந்த பேர்ஸ்டோ, கிாாலேயுடன் சேர்ந்தார். பேர்ஸ்டோ நிதானமாக பேட் செய்ய, அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து கிராலே ரன்களைச் சேர்த்தார். பேர்ஸ்டோ ஆபத்தானவர், நின்றுவிட்டால் ஸ்கோரை பெரிதாக உயர்த்திவிடுவார் என்பதால், தொடக்கத்தில் இருந்தே பேர்ஸ்டோவுக்கு நெருக்கடியாகப் பந்துவீசினர்.

7-வது ஓவரை அக்ஸப் படேல் வீசினார். அக்ஸர் படேல் வீசிய முதல் பந்தில் பேர்ஸ்டோ கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். 27-ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.

அரைசதம்

3-வது விக்கெட்டுக்கு ரூட், கிராலே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். ரூட் பொறுமையாக பேட் செய்ய, கிராலே அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்களை சேர்த்து 68பந்துகளி்ல் அரைசதம் அடித்தார்.

அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார். அஸ்வினின் பந்துவீச்சுக்கு ரூட் தொடக்கத்திலிருந்தே தடுமாறிவந்தார். அந்த தடுமாற்றத்துக்கு அஸ்வினுக்கு விரைவில் பலன் கிடைத்தது. ரூட் 17ரன்கள் சேர்த்திருந்தபோது, அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 74 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 3 வது விக்கெட்டை இழந்தது.

விக்கெட் சரிவு

அடுத்து வந்த ஸ்டோக்ஸ், கிராலேயுடன் சேர்ந்தார். அரைசதம் கடந்து ஆடிவந்த கிராலே 53 ரன்னில் அக்ஸர் படே்ல பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 80 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இங்கிலாந்து பறிகொடுத்தது.

அடுத்துவந்த போப்,ஸ்டோக்ஸுடன் சேர்ந்தார். இருவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தேநீர் இடைவேளியின் போது இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்திருந்தது.

தேநீர் இடைவேளைக்குப்பின் வந்தபின் ஸ்டோக்ஸ், போப் இருவரின் விக்கெட்டையும் இங்கிலாந்து பறிகொடுத்தது. அஸ்வின் பந்துவீச்சில் போப் ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

அக்ஸர் படேல் வீசிய ஓவரில் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 74ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 7 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததது. ஆர்ச்சர், போக்ஸ் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக 2 பவுண்டரிகளை அடித்த ஜோப்ரா ஆர்ச்சரும் களத்தில் நிலைக்கவில்லை.

ஜோப்ரா ஆர்ச்சர் 11 ரன் சேர்த்திருந்தபோது, அக்ஸர் படேல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடு்த்துவந்த லீச், போக்ஸுடன் சேர்ந்தார். லீச் 3 ரன்கள் சேர்த்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

சுற்றுச்சூழல்

12 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

7 mins ago

விளையாட்டு

28 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்