கிரிக்கெட்டின் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நீண்ட நாட்களாகக் காப்பாற்றிவரும் சாதனையை நாளைய ஆட்டத்தில் விராட் கோலி தகர்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இன்னும் 23 ரன்கள் சேர்த்தால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அந்தச் சாதனையை நிகழ்த்த முடியும்.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் விளையாடிவரும் இந்திய அணி முதல் இரு போட்டிகளிலும் மோசமாகத் தோல்வி அடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.
கான்பெரேரா நகரில் நாளை நடக்கும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் கவுரவ வெற்றி பெறும் நோக்கில் இந்தியா போராட வேண்டியுள்ளது. கடந்த இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து ஆஸ்திரேலிய அணி வெற்றியை எளிதாக்கிக் கொண்டது.
இதில் 2-வது ஆட்டத்தில் 390 ரன்களை சேஸிங் செய்யும் இந்திய அணியின் முயற்சியில், கேப்டன் கோலி ஆபாரமான இன்னிங்ஸை ஆடி, 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இந்தப் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
நாளை நடக்கும் 3-வது ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் முக்கியமான சாதனையைத் தகர்க்க விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தச் சாதனையை நிகழ்த்த கோலிக்கு இன்னும் 23 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையை சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இதுவரை தக்கவைத்துள்ளார். சச்சின் 13 ஆண்டுகள் 73 நாட்கள் விளையாடி 309 போட்டிகளில் 300 இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்களை எட்டினார்.
2-வது இடத்தில் பாண்டிங் 323 போட்டிகளில் 314 இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்களை எட்டினார். 3-வது இடத்தில் இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா 359 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களைத் தொட்டார். 4-வது இடத்தில் இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 390 போட்டிகளிலும், 5-வது இடத்தில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா 426 போட்டிகளிலும் 12 ஆயிரம் ரன்களை எட்டினர்.
ஆனால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது 250 போட்டிகளில் 11 ஆயிரத்து 977 ஆயிரம் ரன்களுடன் உள்ளார். 12 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் கோலிக்கு 23 ரன்கள் மட்டுமே தேவை.
நாளைய ஆட்டத்தில் கோலி 23 ரன்களை எட்டிவிட்டால், 251 போட்டிகளில் 242 இன்னிங்ஸ்களில் 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர், அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற பெயருடன் சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பார். 12 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் 6-வது இடத்தையும் கோலி பெறுவார்.
இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் மட்டுமே 9 சதங்கள் அடித்துள்ளார். அதற்கு அடுத்து, இந்திய வீரர்களில் விராட் கோலி 8 சதங்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். நாளைய ஆட்டத்தில் கோலி சதம் அடித்தால், சச்சினின் சாதனையை சமன் செய்துவிடுவார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
9 hours ago