தென் ஆப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் வாரியத்தில் பல மோசடிகள் நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதால் அதன் செயல்பாட்டில் தலையிடவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்பிரிக்காவைத் தடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் தலையிடல் குறித்து அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் நாடிம் தெத்வா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) தெரிவித்துள்ளார். ஐசிசி விதிகளின்படி ஒரு நாட்டின் கிரிக்கெட் வாரியம் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படவில்லையென்றால், அந்நாடு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாது.
தென் ஆப்பிரிக்கா அரசாங்கத்தும் கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே நீண்ட காலமாகவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் வாரியத்தில் நடந்த மோசடிகள் குறித்து நடந்த விசாரணையைத் தொடர்ந்து அதன் தலைமைச் செயல் அதிகாரி டபாங் மோரே தவறான நடத்தை காரணமாக ஆகஸ்ட் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஒரு சுயாதீனக் குழுவை வைத்தே கிரிக்கெட் வாரியம் இந்த விசாரணையை நடத்தியது. ஆனால், விசாரணை அறிக்கையைப் பொதுவில் வெளியிட மறுத்துவிட்டது. மேலும் அரசின் தென் ஆப்பிரிக்கா விளையாட்டுக் கூட்டமைப்பு மற்றும் ஒலிம்பிக் குழு, கிரிக்கெட் வாரியத்தில் தாங்களும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியதற்கும் வாரியம் மறுப்பு தெரிவித்தது.
ஆனால், அழுத்தம் அதிகமானதால் வேறு வழியின்றி, இரண்டு மாதங்களுக்குப் பின் இந்த விசாரணை அறிக்கையின் சாராம்சத்தை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. மேலும் 500 பக்கக் முழு அறிக்கையை தென் ஆப்பிரிக்காவின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் ஒரு குழு கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நிர்பந்தித்ததால் அவர்களிடம் முழு அறிக்கையை ஒப்படைக்கும் நிலைக்கு வாரியம் தள்ளப்பட்டது.
இந்த அறிக்கையில் ஒரு சில பகுதிகள் பொதுவில் வெளியாகியுள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது தீவிரமான பண மோசடி மற்றும் ஊழல் நடந்துள்ளதாகவும், இதில் மோரே மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த அறிக்கையைப் பார்த்த சட்டமன்றக் குழுவினர், வாரியத்தின் மற்ற அதிகாரிகளும் உறுப்பினர்களும் ஏன் விசாரிக்கப்படவில்லை என்றும், மற்றவர்கள் செய்த தவறுகளை மறைக்க வாரியம் முயல்கிறதா என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். இந்த அறிக்கை ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தற்காலிகத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியோடு தற்போது செயல்பட்டு வருகிறது. மோரேவின் காலகட்டத்தில் நடந்த ஊழலைத் தடுக்கவில்லை என்பதற்காக வாரியம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் நாடிம் தெத்வா, கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டைச் சரிசெய்ய அரசாங்கம் நடத்திய சந்திப்புகள் பலனளிக்கவில்லை என்றும். கிரிக்கெட் வாரியம் எதற்கும் ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இனிமேல் கிரிக்கெட் வாரியத்திடம் பேசி எந்தப் பலனும் இல்லை என்ற நிலைக்குத் தான் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அரசாங்கம் ஏன் இதில் தலையிடக் கூடாது என்பது குறித்து, கிரிக்கெட் வாரியம் அக்டோபர் 27-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நாடிம் தெத்வா உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago