சதத்தை நெருங்கும் போது பேட்ஸ்மென்களின் ஆட்டத்தில் நடுக்கம் ஏற்படுவது உண்மையே: ஆய்வு

By இரா.முத்துக்குமார்

90 ரன்களைக் கடந்த பிறகு சதம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் பேட்ஸ்மென்களுக்கு நடுக்கம் ஏற்படுவது உண்மையே என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆஸ்திரேலியாவில் உள்ள QUT பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1971ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான ஒருநாள் சர்வதேச போட்டிகளை தங்களது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.

அப்போது, பேட்ஸ்மென்கள் தங்களது முக்கிய மைல்கல்லை எட்டும் முயற்சியில் தங்களது ஸ்ட்ரைக் ரேட்டை குறைத்து விடுகின்றனர் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால், மைல்கல்லை எட்டிய பிறகு அதே பேட்ஸ்மென்களில் ஸ்ட்ரைக் ரேட்டில் 45% முன்னேற்றம் இருக்கிறது, அதேபோல் மைல்கல்லை எட்டிய பிறகு அவுட் ஆவதும் இரட்டிப்பாக உள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

QUT ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸ்-ஐ சேர்ந்த பேராசிரியர் லயோனல் பேஜ், இது பற்றி கூறும்போது, பேட்ஸ்மென்கள் இவ்வாறு தங்கள் சொந்த சாதனைக்காக ஸ்ட்ரைக் ரேட்டைக் குறைக்கும் போது பெரும்பாலும் அந்த குறிப்பிட்ட அணிக்கு அது நன்மை பயப்பதில்லை என்கிறார். குறிப்பாக இது ஒருநாள் போட்டிகளில் தெரிகிறது என்கிறார்.

“பேட்ஸ்மென்கள் அனைவருக்கும் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான இலக்கு என்றாலும், தங்களது சொந்த சாதனைகளுக்காக முயற்சி செய்யும் போது அது அணியின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

ஒரு வீரர் தனது 99 ரன்னிலிருந்து 100 ரன்னுக்குச் செல்வது என்பது அணியைப் பொறுத்தவரை 1 ரன் மட்டுமே. ஆனால் அந்த தனிப்பட்ட வீரருக்கு அது மிகப்பெரிய விஷயமாகும்.

எது சிறந்த ஸ்ட்ரைக் ரேட் என்பதை நாங்கள் கூற முடியவில்லை, ஆனால் மைல்கல்லை எட்டுவதற்கு முன்பும் மைல்கல்லை நெருங்குவதற்கும் இடையேயான ஸ்ட்ரைக் ரேட்டில் தொடர்ச்சியின்மை இருக்கக் கூடாது என்றே கூறுகிறோம்.

இது பற்றிய உளவியல் கோணம் ஆர்வமூட்டக்கூடியது, 100 ரன்களுக்கு அருகில் இருக்கிறோம் என்பதன் மீதான அழுத்தம் வீரர்களுக்கும் மன அழுத்தமே. 90-ரன்களைக் கடந்த பிறகு அது ‘பதட்டமான 90-களாக’ இருக்கலாம் அல்லது அல்லது மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற முனைப்பில் அழுத்தம் ஏற்பட்டு தானாகவே ஸ்ட்ரைக் ரேட்டை குறைக்கலாம்.

அணி ஒற்றுமையை முக்கியமாகக் கருதும் அணிகளில் தனிப்பட்ட வீரர்களும் நன்றாக விளையாடி விடுகின்றனர். அணி நன்றாக விளையாடாத பட்சத்தில் சில வீரர்கள் தன்னல முனைப்பு கொள்கின்றனர் என்று நான் சந்தேக்கிறேன்.” என்றார்.

இது ஒருநாள் போட்டிகளை வைத்து ஆராயப்பட்டாலும், அனைத்து வடிவங்களுக்கும் பொருந்தக்கூடியதா என்பதைப் பார்க்கவேண்டும் என்கிறார் பேராசிரியர் பேஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

12 mins ago

சுற்றுச்சூழல்

44 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

42 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்