இந்திய வீரர்களின் மனநிலையை நன்கு அறிந்தவர் என்பதால் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் கிரெக் சாப்பலை விட சிறப்பாக செயல்பட முடியும் என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போவில் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:
ஒரு முன்னாள் சிறந்த வீரர் சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளராக ஆவது வழக்கத்துக்கு மாறானது, அவ்வகையில் ஒரு அரிதான குழுவில் இணைந்துள்ளர் அனில் கும்ப்ளே.
எப்போதும் நட்சத்திர வீரர்கள் தங்களது கடினமான விளையாட்டுக்காலத்திற்குப் பிறகு ஓய்வு காலங்களில் பயிற்சியாளர் பொறுப்பேற்று தங்கள் மேல் சுமையை ஏற்றிக் கொள்ளத் தயங்குவார்கள். அதைவிட அணி மோசமாக ஆடிவிட்டால் அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் எந்த ஒரு நட்சத்திர வீரரும் பொறுப்பேற்கும் முன் பரிசீலிப்பார்.
முன்பு முன்னாள் கிரேட் பிளேயர் கிரெக் சாப்பலை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தனர்.
சாப்பலை விட கும்ப்ளேவுக்கு 2 விதங்களில் சாதகம் அதிகமுள்ளது. முதலில் இந்திய மனநிலையுடன் அவரால் ஒத்துப் போக முடியும். 2வது முக்கியமான விஷயம், தங்களது கடைசி கால கிரிக்கெட் வாழ்வில் இருக்கும் நட்சத்திர வீரர்களை சமாளிக்க வேண்டிய நிலை இல்லை.
ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் எந்த ஒரு நட்சத்திர வீரரையும் அணியிலிருந்து நீக்குவதற்கு தயங்காது, அது கேப்டனாகவே இருந்தாலும் அவரது ஃபார்ம் வீழ்ச்சியடைந்தால் நீக்கப்படுவார்கள். ஆனால் இந்தியாவில் நட்சத்திர வீரரை நீக்குவது என்பது நடக்காத காரியம். அவராகவே ஓய்வு பெறும் வரை இந்திய தேர்வுக்குழுவினர் காத்திருப்பார்கள். ஏனெனில் நட்சத்திர வீரரை நீக்கிவிட்டு ஏற்படும் கெட்ட பெயர் குறித்து அஞ்சுவார்கள்.
கிரெக் சாப்பலை இந்திய அதிகாரிகள் பயிற்சியாளராக நியமிக்கும் போது, இந்திய அணியில் ஆஸ்திரேலிய மனநிலையைப் புகுத்த வேண்டும் என்று விரும்பினர். ஆனால் இந்தியா நிச்சயம் இதனை விரும்பாது, விரும்பவில்லை. சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கரிடத்தில் கிரெக் சாப்பல் அத்தகைய ஆஸ்திரேலிய அணுகுமுறையைக் கடைபிடிக்க முயற்சி செய்த போது ஏற்பட்ட எதிர்ப்புக் குரல்கள் காதை செவிடாக்கின.
இத்தகைய பிரச்சினைகள் கும்ப்ளேவுக்கு தற்போது இல்லை. அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். பாராட்டத்தகுந்த எதிரணி வீரர். சவாலும் போட்டி மனப்பான்மையும் போராடும் குணமும் கொண்ட வீரர் கும்ப்ளே. களத்தில் அவரது சொந்த பெயருக்கோ கிரிக்கெட் ஆட்டத்துக்கோ, அணிக்கோ அவப்பெயர் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் அவர் ஈடுபட்டதில்லை. 2007-ம் ஆண்டு ஓவலில் அவர் அடித்த சதம் ஒன்றே போதும் அவரது போட்டித்திறனுக்கு.
இது போன்ற ஒரு இச்சையை அவர் இந்திய அணியினரிடத்தில் ஏற்படுத்த முடிந்தாலே நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல பலன் கிட்டும். அதாவது விராட் கோலியின் ஆக்ரோஷ அணுகுமுறையை இவர் ஊக்குவித்தால் மட்டுமே அவரது இலக்கு நிறைவேறும். ரவிசாஸ்திரி இதைத்தான் செய்தார். வெற்றியைத் துரத்துவதில் விராட் கோலிக்கு இருக்கும் உற்சாகத்தை உத்வேகத்தை அழித்து விடக்கூடாது.
முந்தைய பயிற்சி அனுபவம் இல்லாத கும்ப்ளேயை இந்தியா தேர்ந்தெடுத்திருப்பது ஆர்வமூட்டுவதாக உள்ளது. உயர்மட்டத்தில் வெற்றியச் சாதிப்பது எப்படி என்பதை ஒரு பயிற்சியாளர் அறிந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கும்ப்ளேவுக்கு இது நன்றாகவே தெரியும் என்பதோடு, இதனை அணி வீரர்களிடத்தில் தெரிவிப்பதில் அவர் மன உறுதி கொண்டவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
சர்வதேச மட்டத்தில் பயிற்சியாளர் தேவை என்பதை நான் நம்புபவனல்ல. சிறந்த ஆலோசகர்கள் யாரெனில் அணி வீர்ர்கள்தான். சிறந்த பயிற்சியாளர் வீரர்களின் ஆரம்ப நிலைக்குத்தான் தேவை. இதனை இந்தியா உணர்ந்ததனால்தான் ராகுல் திராவிடை இளம் வீரர்களுக்குப் பயிற்சியாளராக நியமித்தது. இந்த விதத்தில் இரண்டு மிக முக்கிய, சிறந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களை இந்தியா பெற்றிருப்பது அதிர்ஷ்டமே.
ஒரு நட்சத்திர வீரர் பயிற்சியாளராகும் போது அதே நட்சத்திர அந்தஸ்து கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் பத்தியில் இயன் சாப்பல் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
25 mins ago
சினிமா
30 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago