‘என்கிட்ட கையை நீட்டிப் பேசற வேலையெல்லாம் வேண்டாம்’: இஷாந்த் சர்மா-ஜடேஜா மோதலில் நடந்தது என்ன?

By ராமு

பெர்த் டெஸ்ட் போட்டியின் போது மைதானம் முழுதும் கேமராக்களும் மைக்குகளும் இருப்பதை மறந்து இந்திய அணிக்குள் இருக்கும் முரண்பாடுகளை, கருத்து வேறுபாடுகளை வெட்ட வெளிச்சமாக்கும் விதமாக இஷாந்த் சர்மாவும், ரவீந்திர ஜடேஜாவும் நடந்து கொண்ட விவகாரம் ஆஸ்திரேலிய ஊடகங்களில் சந்தி சிரித்து வருகிறது.

 

பெர்த் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியைச் சீண்டினால் போதும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தியது ஆஸ்திரேலியா, டிம் பெய்ன், விராட் கோலி நெஞ்சுக்கு நெஞ்சு மோதுமாறு அசிங்கமாக நடந்து கொண்டனர், ஆனால் அது “போட்டிமனப்பான்மை உணர்வு” என்று வியாக்கியானம் அளிக்கப்பட்டு சரிகட்டப்பட்டு விட்டது.

 

ஆனால் இஷாந்த்சர்மா, ஜடேஜா மோதல் தெருச்சண்டை போல் சித்தரிக்கப்பட்டு வருகிறது, வழக்கம் போல் பிசிசிஐ, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கவே முயற்சி செய்கிறது.

 

இந்நிலையில் இஷாந்த் சர்மா, ஜடேஜா மோதலுக்கிடையே இஷாந்த் சர்மாவின் நோ-பால் பிரச்சினையும், ஜடேஜா 12வது வீரராக களத்தில் விளையாடியதும் இருவருக்குமே தனித்தனியான விதத்தில் அதிருப்தி இருந்தது மோதலாக வெடித்ததாகக் கூறும் ஆஸி. ஊடகம், அவர்கள் பேசியது என்ன என்பதை வெளியிட்டுள்ளது.

 

ஜடேஜாவும், இஷாந்த் சர்மாவும் அவ்வளவு அருகில் நெருக்கமாக மோதல் போஸில் இருந்தனர், ஜடேஜா கையை நீட்டி ஏதோ ஆவேசமாகப் பேசுகிறார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்றால் எப்படி?

 

அவர்கள் இருவருக்குமிடையே எதன்பொருட்டு இத்தகைய வாக்குவாதம் நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அசிங்கமான வார்த்தைகளினால் நடந்த வாக்குவாதம் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

அதாவது, “என்னிடம் கையை நீட்டி பேசும் வேலையெல்லாம் வேண்டாம், என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் என் அருகில் வந்து சொல்லு” என்று இஷாந்த் சர்மா கூற,  “ஏன் நீ அதிகமா பேசற?” என்று ஜடேஜா பதில் பேசியுள்ளார்.  இதற்கு இஷாந்த் சர்மா, “என்னிடம் கையை நீட்டிப் பேசாதே, உன் கோபத்தை என் மேல் காட்டாதே.. என்னிடம் உன் கோபத்தைக் காட்டினால்..  டோண்ட் டாக் புல்**** என்று ஆவேசமாக இஷாந்த் தெரிவித்ததாக ஆஸி. ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

 

இஷாந்த்சர்மாவையும், ஜடேஜாவையும் ஷமி சமாதானப்படுத்தியதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன.  ஜடேஜா ஏற்கெனவே ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேடிடம் வாய்வார்த்தையில் நிதானம் தவறியிருக்கிறார், ஆனால் மேத்யூ வேடும் வாய்பேசாதவர் அல்ல.

 

ரிக்கி பாண்டிங் இது குறித்து கூறும்போது, “அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்று யாருக்குத் தெரியும். ஆனால் இருவரும் ஆவேசமாகப் பேசிக்கொண்டனர். ஒருவரையொருவர் கையை நீட்டி பேசினர். இருமுறை அவர்களை விலக்க நேரிட்டது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்