மதுரை: சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று வண்டியூர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார் கள்ளழகர். இதில் ஆயிரக்ணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1ம் தேதி தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் நோக்கமே ஆண்டாள் மாலை சூடிக்கொள்ளவும், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கவுமே சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். அதனை முன்னிட்டு மே 3ம் தேதி அழகர்மலையிலிருந்து சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்பாடாகி வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
மே 4ல் மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மே 5ல் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டாள் மாலையை சூடிக்கொண்டு கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் அதிகாலை (மே 5) ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் அதிகாலை 5.52 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.
அழகரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுப்பகுதியில் திரண்டு அழகரை வரவேற்று தரிசனம் செய்தனர். பின்னர் வைகை ஆற்றிலிருந்து காலை 7.22 மணிக்கு புறப்பாடாகி ராமராயர் மண்டபத்திற்கு சென்றபோது அழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளி நேற்றுமுன்தினம் இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார்.
அதனைத்தொடர்ந்து நேற்று காலையில் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் வைகை ஆற்றில் நடுவிலுள்ள தேனூர் மண்டபத்திற்கு புறப்பாடாகினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பின்தொடர்ந்து வந்து தரிசனம் செய்தனர். பின்னர் தேனூர் மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு சென்றடைந்தார். அங்கு ஓய்வு எடுத்துவிட்டு மாலை 3 மணிக்குமேல் திருமஞ்சனம் முடிந்து கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் மாலை 4 மணியளவில் தேனூர் மண்டபம் முன்பு மண்டூக முனிவருக்கு சாபவிமோனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மண்டூக (தவளை) வடிவிலிருந்த சுதபஸ் முனிவரை நாரை கொத்தி தின்றுவிடாமல் இருக்க கள்ளழகர் காப்பாற்றி சாபவிமோசனம் அளித்தார். அதற்காக உண்மையான நாரையும் பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்வில் தேனூர் கிராமத்தினர், வண்டியூர் பகுதியினர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
பின்னர் தேனூர் மண்டபத்திலிருந்து வண்டியூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றார். அடுத்தடுத்த மண்டகப்படிகளுக்கு சென்றபோது நல்ல மழை பெய்தது. மழையில் நனைந்தவாறே கள்ளழகர் புறப்பாடானார். பக்தர்களும் மழையில் நனைந்துகொண்டே தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். இரவு 10.30 மணி தொடங்கி விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று மே 7 மதியம் 2 மணியளவில் புறப்பாடாகி இரவு ஆழ்வார்புரம் சடாரி மண்டபம் சென்று, தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் தங்குகிறார். மே 8-ல் அதிகாலை 2 மணியளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளி கருப்பணசாமி கோயில் முன்பு வையாழியாகி அழகர் மலைக்கு புறப்படுகிறார். மே 9-ல் கோயிலை சென்றடைகிறார். மே 10-ல் உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
கருத்துப் பேழை
19 mins ago
சுற்றுலா
56 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
3 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago