இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் மனித வாழ்க்கையின் அர்த்தமும்

By சாம் செல்லதுரை

மனுக்குலத்தை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்

(பரிசுத்த வேதாகமம் - 1 தீமோத்தேயு 1:15).

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில், கிறிஸ்துமஸ் குறித்த இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு வேதம் கூறும் பதிலை இங்கே எடுத்துக்கூற விரும்புகிறேன். முதல் கேள்வி, கிறிஸ்துமஸ்... என்ன நடந்தது? இரண்டாவது கேள்வி, கிறிஸ்துமஸ்... ஏன் நடந்தது? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களுமே மேற்குறிப்பிட்ட வேத வசனத்தில் இருக்கிறது.

1. கிறிஸ்துமஸ்... என்ன நடந்தது?

"கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்" என்று புனித பவுலடியார் கூறுகிறார். 'பிறந்தார்' என்று கூறாமல் 'வந்தார்' என்று அவர் கூறுவதை கவனிக்கவும். ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தில் ஏராளமானோர் பிறக்கிறார்கள். ஆனால் இயேசுவோ வெறும் 'பிறந்தவரல்ல', 'வந்தவர்'. 'வந்தவர்' என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாலே, கிறிஸ்துமஸ் ஏன் இவ்வளவு சிறப்பான ஒரு பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

உலகத்தில் பிறக்கிறவர்கள் அவர்கள் பிறந்ததில் இருந்துதான் வாழ ஆரம்பிக்கிறார்கள். அல்லது தாயின் கருவில் இருந்தே அவர்கள் வாழ்க்கை துவங்குகிறது என்று கூட சொல்லலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அவருடைய வாழ்க்கையின் ஆரம்பமல்ல. அவர் ஏற்கனவே இருந்தவர். பிறப்பின் மூலமாக அவர் இந்த உலகத்திலே வந்தவர்.

யோவான் என்கிற அவருடைய சீடர் இதைக் குறித்து வேதாகமத்தில் எழுதும்போது, "இவர் ஆதியிலே இருந்தவர், ஆதியும் அந்தமுமானவர், துவக்கமும் முடிவுமானவர், கடவுளாகவே இருந்தவர், மனுஷனைப் பிரகாசிப்பிக்கிற ஒளியாய் இருக்கிறவர்” என்றும், “அவர் இப்பொழுது மாம்ச சரீரத்திலே உலகத்தில் வந்திருக்கிறார்" என்றும் கூறுகிறார். ஆக, ஆதியிலே இருந்தவர் பிறப்பின் மூலமாக இந்த உலகத்திலே பிரவேசித்தார் என்று எழுதுகிறார்.

உலகத்திலே பிறக்கிற மற்றவர்களுக்கும் இவருக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் என்பதைப் பாருங்கள். ஆகவே கிறிஸ்துமஸ் என்பது ஒரு சாதாரண மனிதனின் பிறப்பையல்ல, கடவுளே மனிதனாக இந்த உலகத்திற்கு வந்ததை குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒரு சாதாரண மனுஷனின் பிறப்பைப் போலத் தோன்றினாலும், அது எல்லாம் வல்ல கடவுளின் உலகப் பிரவேசம்!

இது ஏதோ எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. வேதாகமம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இவரது பிறப்பையும், அதன் தொடர்பான பல விவரங்களையும் முன்னறிவித்திருக்கிறது. இயேசு கிறிஸ்து எந்த ஊரில் பிறப்பார் என்பதை அவர் பிறப்பதற்கு 500 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மீகா என்ற தீர்க்கதரிசி முன்னறிவித்தார். இயேசு கிறிஸ்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் எனும் ஊரில் பிறப்பார் என்பதை மட்டுமல்லாமல், "இவரது புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது" என்று சொன்னதன் மூலம், ஆதி முதல் இருந்து வருபவர்தான், பின்பு உலகத்தில் வந்து பிறப்பார் என்பதையும் அறிவித்தார் (மீகா 5:2).

மேலும் ஏசாயா என்ற ஒரு தீர்க்கதரிசி, இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே, "இதோ, ஒரு கன்னி கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு 'இம்மானுவேல்' என்று பெயரிடுவாள்" என்று கிறிஸ்துவின் பிறப்பை முன்னறிவித்தார். இயேசு கிறிஸ்து பிறந்த பிறகு மத்தேயு என்ற நற்செய்தியாளரும், இந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகத்தான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பதைச் சுட்டிக்காட்டி, 'இம்மானுவேல்' என்பதற்கு 'கடவுள் நம்மோடிருக்கிறார்' என்று அர்த்தமாம் என்று அந்தப் பெயரின் அர்த்தத்தைக் குறிப்பிட்டு, இவர் மனிதனாக வெளிப்பட்ட கடவுள் என்பதை இவ்வாறாக வெளிப்படுத்துகிறார். இந்தக் காரியங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்ற எல்லா பிறப்புகளைக் காட்டிலும் மிகவும் விசேஷமானது என்பதைக் காட்டுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஒரு கன்னி பெண்ணின் மூலமாக இவர் பிறந்தார் என்றும் வேதம் கூறுகிறது. இதன் முக்கியத்துவம் என்ன? மாம்ச ரூபம் எடுத்து, மனிதனாய் பிறந்தாலும், மனிதனுடைய பாவ சுபாவத்தின் கறைப்படாதவராய் இவர் பிறந்தார். பிறப்பில், வித்தைக் கொடுக்கிறவன் ஆண். பாவக்கறை ஆதாமின் மூலம் உலகத்திற்குள் பிரவேசித்து, எல்லார் மீதும் அது வந்தது என்று வேதம் கூறுகிறது (ரோமர் 5:12). ஆனால் இவருடைய பிறப்பில் ஆணுக்கு பங்கில்லை. மாறாக, தூய ஆவியானவரின் உதவியால் கன்னிப் பெண்ணாகிய மரியாள் கர்ப்பந்தரித்தாள். இப்படி ஒரு கன்னிப் பெண் வயிற்றில் மாம்சத்தில் உருவாகி இவர் பிறப்பார் என்பதை ஆதியிலே "இவர் ஒரு ஸ்திரீயின் வித்தாக பிறப்பார்" என்று சொன்னதன் மூலம் கடவுள் அறிவித்துவிட்டார். (ஆதியாகமம் 3:15).

இதையேதான் ஏசாயா என்ற தீர்க்கதரிசியும், "ஒரு கன்னி கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்" என்று சொன்னார் (ஏசாயா 7:14). இப்படி இவருடைய அற்புதப் பிறப்பை மக்கள் காலகாலமாய் எதிர்பார்த்து வந்தார்கள்.

ஆகவேதான் அவரது பிறப்பைக் குறித்து ஒரு தேவதூதனே, அவருடைய தாயாகிய கன்னி மரியாளிடத்திலே வந்து, "இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்" என்று அறிவித்தான். அதுமட்டுமல்லாமல், அவர் பிறந்தபோது, இவர் குறிப்பாக யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார் என்று மீகா தீர்க்கதரிசி சொன்னதை அறிந்து வைத்திருந்த வேத அறிஞர்கள், ஏரோது ராஜாவுக்கும், இயேசுவைப் பணிந்து, தொழுது கொள்ள தேடி வந்த ஞானிகளுக்கும் அவர் எங்கே பிறந்திருக்கக் கூடும் என்ற தகவலைத் தெரிவித்தார்கள்.

கிழக்கில் இருந்து வந்த அந்த ஞானிகளும், எருசலேம் நகரத்திற்கு வந்து, குழந்தையாய் இருந்த இயேசுவைப் பணிந்து, தொழுது கொண்டு, பொன்னையும், தூபவர்க்கத்தையும், விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களையும் காணிக்கையாக வைத்தார்கள். ஒரு நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் சென்று, இயேசு கிறிஸ்து பிறந்த இடம் வரை அவர்களை அழைத்துச் சென்றது என்ற அற்புதத்தையும் வேதத்தில் வாசிக்கிறோம்.

மேலும் ஒரு தேவதூதனே வந்து, ஆட்டு மந்தையைக் காத்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு காட்சியளித்து, இயேசு பிறந்த செய்தியைக் கூறியது மட்டுமல்லாமல், இன்னும் பல தேவதூதர்கள் கூட்டமாய்த் திரண்டு வந்து, 'உன்னதத்தில் இருக்கிற கடவுளுக்கு மாட்சியும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, கடவுளைத் துதித்தார்கள்’ (லூக்கா 2:14). இப்படி இந்தச் செய்தியைக் கேட்ட அந்த மேய்ப்பர்கள் வந்து இயேசு கிறிஸ்து பிறந்திருப்பதைக் கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்து தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைப் பிரபலப்படுத்தினார்கள்.

இந்தக் காரியங்களெல்லாம் இவர் பிறப்பு சாதாரணமானதல்ல, கடவுளே மனுஷ ரூபத்திலே இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அதுமட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்து பிறந்த உடனே சிமியோன் என்பவர் இயேசு கிறிஸ்து மூலமாய் நடக்கப் போகிற காரியங்கள் எல்லாவற்றையும் தீர்க்கதரிசனமாக உரைத்து, "கடவுளுடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது" (லூக்கா 2:32) என்று சொல்லி, இவருடைய பிறப்பின் சிறப்பை உறுதிப்படுத்தினார். அதுபோலவே அன்னாள் என்னும் ஒரு பெண் தீர்க்கதரிசியும் இயேசு பிறந்த உடனே அவரைப் புகழ்ந்து, இவர் மூலம் உண்டாகும் மீட்பைக் குறித்துக் கூறினாள் (லூக்கா 2:38). ஆகவே கிறிஸ்துமஸ் என்பது ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறக்கும் ஒரு சாதாரண சம்பவமல்ல. அனைத்தையும் படைத்த கடவுளே மனுஷ ரூபம் எடுத்து, ஒரு கன்னிப் பெண்ணின் மூலமாக இந்த உலகத்தில் பிரவேசித்த இந்த ஆச்சரியமான நிகழ்வைத்தான் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகிறோம். ஆக, அவர் உலகத்தில் பிறந்தவர் மட்டுமல்ல, அவர் உலகத்திலே வந்தவர்!

2. கிறிஸ்துமஸ்... ஏன் நடந்தது?

கிறிஸ்துமஸ் என்பது கடவுளே மனுஷனாக இந்த உலகத்திற்கு வந்த ஒரு சம்பவம் என்பதைப் பார்த்தோம். அவர் ஏன் வந்தார்? அவர் "மனுக்குலத்தை இரட்சிக்க மனிதனாக பூமிக்கு வந்தார்" என்று வேதம் கூறுகிறது. மனுக்குலத்திற்கு ஏன் இரட்சிப்பு தேவை? மனுக்குலத்தின் பிரச்சினை என்ன?

கடவுள் எல்லாவற்றையும் மனிதனுக்காக உண்டாக்கினார். ஆனால் மனிதனையோ, அவர் தமக்காக உண்டாக்கினார். ஆகவேதான் அவனை தமது 'சாயலின்படியும்', தமது 'ரூபத்தின்படியும்' சிருஷ்டித்தார் என்று வேதம் கூறுகிறது. அவரோடு ஐக்கியம் கொண்டு, அவரோடு நெருங்கி வாழ்வதற்காகத்தான் நாம் அவரைப் போலவே சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். அவர் தனக்காகவே நம்மை சிருஷ்டித்தபடியால், அவருக்காக வாழ்வதுதான் நமது வாழ்க்கையின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். ஆகவே மனிதன் அப்படி வாழாவிட்டால் மனித வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும். இதுதான் மனுக்குலத்தின் பிரச்சினை.

மனிதன் இன்றைக்கு இந்த விதத்திலே வாழுகிறவனாக இல்லை. உன்னுடைய வாழ்க்கையின் அர்த்தமென்ன? நீ எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டால், நான் கடவுளுக்காகவே, கடவுளுடன் ஐக்கியம் கொள்ளும்படியாகவே, அவருடைய நோக்கங்களுக்காகவே வாழ்கிறேன் என்று சொல்பவர்களை பார்க்க முடியாது. நான் இதற்காக வாழ்கிறேன், அதற்காக வாழ்கிறேன் என்று பல நோக்கங்களுக்காக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் இதையும் தேடி, அதையே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு அதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இது ஒவ்வொரு மனுஷனுடைய மனதிலும் ஒரு வெறுமையையும், விரக்தியையும், சலிப்பையும் உண்டாக்கி விடுகிறது. தங்களுடைய வாழ்க்கை அர்த்தமற்றதாகி விட்டது போல எண்ணுகிறார்கள். ஆம்! நாம் எதற்காக உண்டாக்கப்பட்டோமோ, அதற்காக வாழும்போதுதானே நம் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டாக முடியும். உதாரணத்திற்கு, கார் நாம் பிரயாணம் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக உண்டாக்கப்பட்ட ஒரு வாகனம். அதை ஒரு மூலையில் மழையிலும், வெயிலிலும் நிறுத்தி, அதில் பூனைகளும், நாய்களும் குடியிருந்தால் அது உண்டாக்கப்பட்ட நோக்கமே வீணாகிறது. காருக்கு மனம் என்று ஒன்று இல்லாததினால் அது வருத்தப்படப் போவதில்லை. ஆனால் மனிதன் அப்படி இல்லையே! அவன் கடவுளைப் போலவே ஒரு ஆவியாக இருக்கிறான். ஆனால் ஒரு சரீரத்தில் வாழ்கிறான். அவனுக்கு மனம் என்கிற ஆத்துமா உண்டு. ஆகவே அவன் இப்படிப் பயனற்ற ஒரு வாழ்க்கையில் திருப்தி அடையவே முடியாது. அவன் தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான். அதைக் கண்டுபிடித்து அர்த்தமுள்ள விதத்தில் வாழும்போதுதான் அவனுக்கு ஆத்தும திருப்தி உண்டாகிறது.

கல்வி, வேலை, மனைவி, பிள்ளைகள், குடும்பம், பணம், பொருள் எல்லாம் இருந்தாலும் அவைகளால் மட்டும் அவன் திருப்தியடைய முடியாது. தன்னை உண்டாக்கின கடவுளோடு ஆழ்ந்த உறவு அவனுக்கு இருந்தால்தான் அவன் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும். கடவுளுடைய நோக்கங்களை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்காகத்தான் இவைகளெல்லாம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கடவுளை ஆழமாய் அறிந்து கொள்ளாமல், அவரோடு நெருக்கமாக ஐக்கியம் கொள்ளாமல், அவருடைய நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள முடியாது. நோக்கங்கள் புரியவில்லையென்றால் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது. நமக்குள்ள எல்லாவற்றிற்கும் அர்த்தமில்லாமல் போய் விடுகிறது. ஆகவே எல்லாமிருந்தும் கடவுள் நம்முடைய வாழ்க்கையில் பிரதானமாக இல்லாவிட்டால், வாழ்க்கையே வெறுமையாகி விடுகிறது.

மனிதன் எப்படி இந்த நிலைக்கு வந்தான்? கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட உலகின் முதல் மனிதனாகிய ஆதாம், தன்னுடைய மனம்போன போக்கிலே வாழ்ந்து, தன் விருப்பம்போல் வாழும்படியாக, கடவுளைத் தன்னுடைய வாழ்க்கையிலே இருந்து விலக்கி வைத்து, அவருக்கு தன் வாழ்வில் இடம் கொடுக்க மறுத்து விட்டான். இதுதான் மனிதன் செய்த பாவம். இந்தப் பாவத்தின் விளைவாக ஆதாமின் வம்சமாகிய மனுக்குலம் முழுவதும் இன்றைக்கு சகல தீமைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

கடவுள் நமக்கு அவசியம் என்று நம்முடைய உள்ளம் சொல்லுகிறது. நாம் கடவுளுக்காகவே உண்டாக்கப்பட்டபடியால், கடவுளோடு ஐக்கியம் கொண்டு வாழ வேண்டும் என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கும் ஒரு நாட்டம். அந்த நாட்டத்தை திருப்திபடுத்துவதற்காக பல்வேறு மத வழிபாடுகளைப் பின்பற்றுகிறோம். ஆனால், கடவுளை அறிந்திருக்கிறோமா? இந்த வழிபாடுகள் மூலமாக கடவுளோடு நெருங்கி வாழ்கிறோமா? இவைகள் நம்முடைய வாழ்க்கையின் தரத்தில் ஒரு வித்தியாசத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறதா? அல்லது இவைகள் எல்லாம் வெறும் சடங்காச்சாரங்களாகவும், சம்பிரதாயங்களாகவும் மட்டுமே இருக்கிறதா?

உண்மையிலே நாம் கடவுளை அறிந்து, அவரோடு நெருங்கி வாழ்ந்தோம் என்றால், நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை நாம் காண முடியும். நம்முடைய வாழ்க்கை எவரும் நம்மிடத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாத மகிழ்ச்சியினாலும், மெய்யான சமாதானத்தினாலும் நிறைந்திருக்கும். நம்முடைய குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், நிறைவும் உண்டாயிருக்கும்.

உண்மை, ஒழுக்கம், ஞானம், அறிவு, விவேகம் எல்லாமே நமக்குள் நிறைந்திருக்கும். நம்முடைய வாழ்க்கைத் தரமே உயர்ந்த விதத்தில் இருக்கும். அதுமட்டுமல்லாமல், நம்முடைய தோல்விகளை வெற்றிகளாக மாற்றக்கூடியவர்களாக நாம் இருப்போம். வாழ்க்கைப் பிரச்சினைகளை நம்பிக்கையோடு எதிர்கொண்டு கடவுளுடைய அளவற்ற கிருபையாலும், அவருடைய ஒத்தாசையினாலும் அவைகளின் மீது ஜெயத்தை எடுப்போம். நம்முடைய கையின் பிரயாசங்களில் எல்லாம் கடவுளின் ஆசீர்வாதத்தைக் காண முடியும். நாம் அவருக்காக வாழ்ந்து, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதால் நாம் செய்கிற காரியங்களெல்லாம் வாய்க்கும். வாழ்க்கை முழுவதற்குமே அர்த்தமிருக்கும்.

நம்மிடம் இருக்கும் கல்வி, வேலை, பணம், பொருள் போன்ற எல்லா ஆதாரங்களையும் நல்ல விதத்திலே நாம் பயன்படுத்துவோம். ஒரு பெரிய குறிக்கோளோடும், தொலைநோக்கோடும் வாழ்வோம். வாழ்க்கையைக் குறித்து ஒரு பெரிய எதிர்பார்ப்பு நமக்குள் இருக்கும். பெரிய விதத்தில் சிந்திப்போம், பெரிய காரியங்களை எதிர்பார்ப்போம். இவைகள்தான் ஒரு உண்மையான ஆன்மீக வாழ்வின் அறிகுறிகள்.

இதில் இன்னொரு முக்கியமான அம்சமும் உண்டு. நம்முடைய உலக வாழ்க்கை முடிந்து, இந்த பூமியில் நாம் கண்ணை மூடும்போது கூட, மரண பயம் என்பது நமக்குள் சிறிதளவும் இருக்காது. மாறாக, நம்முடைய வாழ்க்கை ஓட்டத்தைச் சரியாக ஓடி முடித்தோம் என்கிற திருப்தி நமக்கு இருக்கும். அதோடுகூட, மறுமையில் நம்முடைய வாழ்க்கையை கடவுளோடுகூட நிரந்தரமாகத் தொடருவோம் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கும். இந்த உலகத்தை விட்டுச் செல்லுகிற நாம் எங்கே செல்லுகிறோம், எங்கே நம்முடைய நித்தியத்தை கழிப்போம் என்கிற நிச்சயமும் நமக்குள் இருக்கும். கடவுளை விட்டுத் தூரமாகப் போய், கடவுளுக்காகவே நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமல், கடவுளுக்காக வாழ்வதற்குப் பதிலாக, மற்றெல்லாவற்றையும் பெரிதாக எண்ணி வாழ்கிற மனிதனிடத்தில் இதையெல்லாம் காண முடியாது. அவனது வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது. இந்த நிலையிலிருந்து நம்மை மீட்டு, கடவுளோடு நமக்கு ஒரு இணைப்பை உண்டுபண்ணிக் கொடுத்து, ஒரு புதிய வாழ்க்கையையும், புதிய எதிர்காலத்தையும் நமக்குத் தரும்படியாகத்தான் மீட்பர் இயேசு உலகத்திற்கு வந்தார்.

அவர் இந்த உலகத்திற்கு மனிதனாய் வந்ததின் மூலம் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை நாம் காண முடிகிறது. "என்னைக் கண்டவன் கடவுளை கண்டிருக்கிறான்" என்று இயேசுவே சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நமக்கு கடவுளைக் குறித்துப் போதித்து, கடவுளை நமக்கு அவர் வெளிப்படுத்தினார்.

இவை எல்லாவற்றைக் காட்டிலும், நம்முடைய பாவத்தையும், அதற்கான தண்டனையையும் தன் மீது சுமந்து, நம்முடைய பாவநிவாரண பலியாக சிலுவையிலே மரித்ததால் நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கி புதுவாழ்வை நமக்குத் தந்தார். இவ்வாறாக கடவுளுடைய அன்பை இயேசு நமக்கு முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆகவேதான் கிறிஸ்துமஸ் தினத்தில் பாடல்களைப் பாடி, கடவுளுக்கு நன்றி செலுத்தி, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைத் தெரிவித்து, இயேசு கிறிஸ்து மூலமாய் மனிதனுக்காக கடவுள் ஏற்படுத்தின இரட்சிப்பை உலகெங்கும் உள்ள மக்கள் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இதுதான் கிறிஸ்துமஸ்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

சினிமா

11 mins ago

சினிமா

14 mins ago

வலைஞர் பக்கம்

18 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

28 mins ago

இந்தியா

36 mins ago

க்ரைம்

33 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்