தசரதர் வம்சத்து முன்னோரில் திலீபன் என்ற மன்னர் இருந்தார். இவருக்கும் நெடுநாட்களாகப் பிள்ளை பாக்கியம் இல்லை. இதனைக் குறித்து வருந்திய அவர், ஆஸ்தான ஜோதிடரிடம் கேட்க, குரு பூஜையில் ஏதோ குறை இருக்கிறது; குரு திருப்தி அடைந்தால் பிள்ளை பிறக்கும் என்றார். இதனையடுத்து குலகுருவான வசிஷ்டரிடம் சென்றார்கள். அப்போது தியானத்தில் இருந்த அவரிடம் இப்பிரச்சினையைத் தெரிவிக்க, சுற்றிலும் தன் பார்வையைச் செலுத்திய வசிஷ்டர் கண்களில் காமதேனு பட்டது. இந்த காமதேனுவை மேய்ச்சலுக்குச் செல்லும்போது கவனமாகப் பார்த்துக்கொள் என்றார்.
மிகுந்த கவனத்துடன் திலீப மகாராஜா காமதேனுவைப் பார்த்துக்கொண்டார். காமதேனு எங்கு சென்றாலும் கூடவே செல்வார். மகாராஜா என்றாலும், கல்லிலும், முள்ளிலும் மழையிலும் வெயிலிலும் கடமை தவறாமல் காமதேனு பின்னால் அலைந்தார்.
இந்த நேரத்தில் காமதேனு அவரைச் சோதனை செய்ய எண்ணியது. ஒரு சிறிய குன்றின் மீது மேய்ந்துகொண்டே ஏறிவிட்டது. ஒரு குகையின் அருகே வந்தபோது, காமதேனுவை அடித்துச் சாப்பிட சிங்கம் ஒன்று பாய்ந்தது. சடேரென்று நீண்ட வாளுடன் குறுக்கே தாவிய திலீப மகாராஜா அச்சிங்கத்தைக் கொல்ல முயன்றார்.
பராசக்தியின் அருள் பெற்ற அச்சிங்கம் பேசியது. “மகாராஜா சற்றே விலகி நில்லும். என் பசியாற காமதேனுவைப் புசித்துக்கொள்கிறேன்.”
“என்னைச் சாப்பிட்டுக்கொள்” என்றார் மகாராஜா.
சிங்கமோ, “திலீபா, நீயோ பிள்ளை வரத்திற்கு காத்திருக்கிறாய். உனக்கோ ராஜபரிபாலனம் என்ற கடமை வேறு இருக்கிறது. நீ இப்போது உன்னைத் துறக்கலாமா? இப்பசுவை என்னிடம் விடு. இதோ இருக்கிறதே இந்த மரம் மிக அபூர்வமான பூக்களைத் தரக் கூடியது. இதனை பராசக்தி பிரியமாக வளர்த்து வருகிறாள். இதனைக் காவல் காக்கும் பணியை என்னிடம் விட்டுவிட்டுச் சென்றுள்ளாள். மேலும் இக்குகை அருகே வரும் விலங்குகளை அடித்துச் சாப்பிட அனுமதி அளித்துள்ளாள். அதனால் எனக்கு உணவாகவே இப்பசு இங்கே வந்துள்ளது என நம்புகிறேன். எனவே வழி விடு” என்றது.
“ நானே உனக்கு உணவாக வேண்டும் என்பதுதான் அவன் சித்தம் போலும். என்னையே உண்க” என்றார் மகாராஜா. அடித்து உண்ணப் பாய்ந்தது சிங்கம். அந்த கணமே ரிஷபாரூடராக சிவன் பார்வதியுடன் தோன்றி அருளினார். அந்தச் சிங்கமும் அழகிய கந்தர்வனாக மாறியது.
அருளைப் பெற்ற மகாராஜா, காமதேனுவுடன் ஆசிரமம் திரும்பினார். இதனை உணர்ந்த வசிஷ்டரும், மகாராஜாவை ஆசிர்வதித்து நாட்டிற்கே திரும்ப அனுப்புகிறார். பின்னர் ராஜாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இவரது வம்சத்தில் வந்தவரே தசரதர். குருவைப் போற்றும் குலத்தில் பிறந்ததால் சத்சங்கம் கிடைக்கும் என்று எண்ணியே தசரதருக்குப் பிள்ளையாக வந்து உதித்தாராம் ஸ்ரீராமர்.
பகவானான ராமருக்கே குரு ஆசிர்வாதம் வேண்டுமெனில், நமக்கெல்லாம் இன்னும் எவ்வளவு குரு கிருபை வேண்டும்?
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago