சமண வேத நூல்

By விஜி சக்கரவர்த்தி

இந்து மதத்துக்குக் கீதையைப் போல் கிறிஸ்துவத்துக்கு பைபிள் போல் இஸ்லாத்துக்கு குரானைப் போல் சீக்கியத்திற்கு குருகிரந்த சாகிப் போல் சமணத்துக்கு ஸ்ரீபுராணம், வேத நூலாக விளங்குகிறது. இதைத் தெய்வீக நூலாகச் சமணர்கள் போற்றுகின்றனர். நல்லவை நடக்க வேண்டி சமணர்கள் ஸ்ரீபுராணத்தில் நூல் போட்டு சகுனம் பார்ப்பார்கள்.

இந்நூல் ஜினசேனாசாரியார், குணபத்திராசாரியார் ஆகியோரின் மகாபுராணம் எனும் நூலைத் தழுவி எழுதப்பட்டதாகும். கம்பீரமான மொழிநடையைக் கொண்டது.

ஸ்ரீபுராணத்தை எழுதியவர்

மகாபுராணத்திலிருந்து ஸ்ரீபுராணத்தை வடமொழியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில் குணபத்திரர் என்பவர் எழுதினார் என்றும் இவர் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமண்டூர் கிராமத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர்.

சமணத்தைப் போதித்தவர்கள் 24 தீர்த்தங்கரர்கள் ஆவார்கள். அவர்கள் விருஷபநாதர், அஜிதநாதர், சம்பவநாதர், அபிநந்தர், சுமதிநாதர், பத்மபிரபர், சுபார்சுவர், சந்திரப்பிரபர், புஷ்பதந்தர், சீதளர், சிரேயாம்சர், வாசு பூஜ்யர், விமலர், அனந்தநாதர், தர்மநாதர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர், மல்லிநாதர், முனீசுவிரதர், நமிநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், வர்த்தமான மகாவீரர். இவர்களுடன் 12 சக்கரவர்த்திகள் உட்பட உயர்ந்த 63 மாமனிதர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபுராணம் விவரிக்கிறது.

சமணத் தத்துவங்கள், கொள்கைகள், வழிபாட்டுமுறைகள், ஒழுக்கமுறைகள் மற்றும் அறநெறிகள் ஆகியவற்றை ஸ்ரீபுராணம் கொண்டுள்ளது.

முற்பிறவி முதல் முக்திவரை

அனைத்து தீர்த்தங்கரர்களும் அரச குடும்பத்தில் பிறந்தவர்கள். பின் துறவு ஏற்றவர்கள். தீர்த்தங்கரர்களின் முற்பிறவிகள் முதல் அவர்களின் முக்திவரை நிகழ்ந்தவற்றை மிகச் சிறப்பாகவும் அழகாகவும் பக்திப் பரவசத்துடனும் ஸ்ரீபுராணம் விவரிக்கிறது. தீர்த்தங்கரர்களின் பஞ்ச கல்யாண நிகழ்வுகளும், சமவசரணத்தின் வர்ணனைகளும் நம்மை அங்கேயே அழைத்துச் செல்வதுபோல் சொல்லப்பட்டிருக்கின்றன.

மேலும் ராமாயணம், மகாபாரதம், பாகவதம் முதலிய புராணக் கதைகளும் பரசுராமர், மாபலி, சிபிச்சக்கரவர்த்தி முதலியோரின் வரலாற்றுச் செய்திகளும் இதிலுள்ளன.பெட்டிக்குள் பெட்டி, அந்தப் பெட்டிக்குள் பெட்டி என்பதுபோல் ஏராளமான கிளைக்கதைகளும் உள்ளன.

கிளைநூல்கள்

ஸ்ரீபுராண அடிப்படையில்தான் சீவக சிந்தாமணி, மேருமந்திர புராணம், சூளாமணி ஆகிய தமிழ் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. இதன் சிறப்பை உணர்ந்த திரு.வெங்கடராஜுலு ரெட்டியார் என்பவர் முயற்சி எடுக்க, 1943-ல் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் மேல்சித்தாமூர் சமண மடத்தில் ஸ்ரீபுராணம் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1946-ல் வெளியானது.

சமணம் போற்றும் உயரிய இந்நூலைத் தமிழ்நடையில் பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் 1977-ல் எழுதி வர்த்தமானன் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். இதனாலும், இவரின் ஸ்ரீபுராணம் பற்றிய சீரிய பேச்சாற்றலாலும் இவர் “ஸ்ரீபுராணச் செம்மல்” என்று பாராட்டப்படுகிறார். ஸ்ரீபுராணத்தைத் தொடர்ந்து பல தமிழ் நூல்களைத் தேடித்தேடி ஸ்ரீசந்திரன் வெளியிட்டு வருகிறார். இவரின் ஸ்ரீபுராணம் தமிழுலகு உள்ளவரை சமண நன்னெறிகளைத் தாங்கியும் பறைசாற்றியும் வாழ்ந்துகொண்டிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்